எழுதுபவன்

எழுத்தாளன் என்ற இந்தத் தளத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எனது பெயர் வர்மன் என்பதாகும். முதலில் மூத்த எழுத்தாளர்களிடத்திலும், எழுத்து ஆர்வலர்களிடத்திலும் எழுத்தாளன் என்ற இப் பெயரை எனக்கு நானே சூட்டிக் கொண்டதற்காக மனதார மன்னிப்புக் கோருகின்றேன். உண்மையில் எழுத்தாளன் என்ற பதத்தை என்னை நான் ஓர் முழுமையான எழுத்தாளனாக எண்ணிக் கொண்டு இங்கு பயன்படுத்தவில்லை. என் கனவுகளின் பயணத்தில் அடைய எண்ணும் இலக்காகவே இதை நான் காண்கிறேன். ஓர் முழுமையான எழுத்தாளனை நோக்கிய பயணத்தின் சாலையில் வழிகாட்டும் பெயர்ப் பலகையாகவே இதை நான் காண்கிறேன். எனவே இந்த இளையவனின் கற்பனைகளையும், எழுத்துக்களையும் ஏற்றுக் கொள்வதோடு, உங்கள் ஆதரவின் மூலமாக என்னை நான் மேலும் வளப்படுத்திக் கொள்ள ஆவன செய்யுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

கட்டுக்கடங்கா கற்பனைகளை அடக்கியாள்வதைக் காட்டிலும் அழகுபடுத்திப் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறேன் நான். அவற்றின் வெளிப்பாடே என் எழுத்துக்களும், இந்த எழுத்தாளன் என்ற தளமும். சமீப காலமாக முகநூலில் எனது படைப்புக்களை வெளியிட்டு வந்த நான், எனது அடுத்த கட்ட முயற்சியாக இந்த எழுத்தாளன் தளத்தை நிறுவுகிறேன். என்னை இதுகாறும் உயரம் வரையில் ஏற்றி விட்ட என் அனைத்து ஆசிரியத் தெய்வங்களுக்கும், என் கற்பனைக்கும் எழுத்துக்கும் ஆதரவு நல்கிக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நண்பர்களுக்கும், கடவுளுக்கு இணையான என் பெற்றோருக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

மற்றுமோர் தாய் போல் இருந்து என் வாழ்வை வளப்படுத்திய இறைவனடி சேர்ந்த என் மரியாதைக்குரிய ஆசிரியை திருமதி. இரெத்தினம்மா இராசதுரை அவர்கட்கு எனது இந்த முயற்சியை சமர்ப்பணம் செய்கிறேன்.