கருவறைக்குள்ளே இரு மகனே
கனவிலும் வெளிவர எண்ணி விடாதே
நிலவறைக்குள்ளே ஒழிந்திருக்கிறேன்
நிற்கட்டும் போர் உனைப் பெற்றெடுக்கிறேன்
துளைக்கும் குண்டுகள் துன்பத்திற்கு
துணைக்கு நீ வரத் துணிந்து விடாதே
பிழைக்கும் நம்பிக்கையில் தானிருக்கிறேன்
பிழைத்ததும் உன் வலி நான் பொறுக்கிறேன்
வெடிக்கும் குண்டுச் சத்தங்களால்
வேறேதும் காதுக்குக் கேட்கவில்லை
வெடிக்கும் சத்தங்கள் நிற்கும் வரை பொறு – உன்
அழுகுரல் கேட்க நான் விரும்புகிறேன்
வீட்டில் பொழிந்த இரும்புகளால்
விரல்களில் நான்கு எனக்கு இல்லை
ஏட்டில் எழுதாக் கவியமுதே – உனை
ஏந்தும் பாக்கியம் அவைக்கு இல்லை
தைரியமான உந்தன் தந்தை
தருணத்தில் இங்கில்லை என்றறிந்து
தாயவள் தனிமையின் பயம் விரட்ட
தலைப் பிள்ளை நீ வர விளைகிறாயோ
தனித் தமிழ் ஈழத்தின் தாகத்தினை
தாய்ப்பாலாய் ஊட்டவே நினைத்திருக்க
கனித் தமிழ் அமுதே கண்மணியே
கருவிலே அதை உணர்ந்து விரைகிறாயோ
நீ கருவிலே தமிழ் காக்க விரைகிறாயோ
No comments:
Post a Comment