June 5, 2020

விழி!














நாங்கள் கருஞ்சிறுத்தையொன்று பொறியில் சிக்கி உயிரை விட்டதற்காகக் கண்ணீர் சிந்துவோம். ஆனால், பொறிகளை எலிக்கு வைத்து அவற்றைத் துடிதுடிக்கக் கொல்வதனை ஆட்சேபிக்க மாட்டோம். நாங்கள் யானை ஒன்றுக்கு அன்னாசியில் வெடி வைத்துக் கொலை செய்ததற்காக சீறியெழுவோம். ஆனால், தூண்டிலில் இரை வைத்துப் பிடித்த மீனை ருசித்து உண்போம். இங்கே தராசின் இரு பக்கமும் இருப்பது ஓர் உயிர்தான். ஆனால், தராசின் முள் எப்போதுமே நடு நிலையாக இருப்பதில்லை. இந்த முரண் எங்கள் சமூகத்தினால் பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை. அல்லது புரிந்து கொள்ளப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. கடந்த சில நாட்களாக பெரும் பேசு பொருளாய் ஆகியிருந்த இலங்கையின் நல்லதண்ணி என்னும் இடத்தில் பொறியில் சிக்கி காயமுற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கருஞ்சிறுத்தைக்காகவும், கேரளாவில் வெடி வைக்கப்பட்டிருந்த அன்னாசியை உண்டதனால் வாய் சிதைந்து உயிரை விட்ட கர்ப்பிணி யானைக்காகவும் சமூக ஊடகங்களில் அள்ளி வீசப்பட்டிருக்கும் அனுதாபங்களினூடே நடந்து சென்று யதார்த்தத்தை நோக்கிப் பயணிப்போம் வாருங்கள்.

உயிரிழந்த அந்த இரு விலங்குகளுக்காகவும் நாங்கள் கவலைப்படுவது ஞாயமானதுதான். ஆனால், எதன் அடிப்படையில் என்பதே இங்கு எழுப்பப்பட வேண்டிய வினாவாக இருக்கின்றது. அவற்றுக்காக நாங்கள் கவலைப்பட வேண்டியது, பரிதாபகரமான மரணத்திற்காக மாத்திரமல்ல. மாறாக அருகிக் கொண்டு வரும் தொன்மையான ஓர் உயிரினத்தை எம்மால் காப்பாற்ற முடியவில்லையே என்பதற்காகத்தான். அவற்றின் பரிதாபகரமான மரணத்திற்காக மட்டுமே வருத்தப்படுவதாகயிருந்தால், முன்பே சொன்னது போல பொறி வைத்துக் கொல்லப்படும் எலிகளுக்காகவும், இரை வைத்துப் பிடிக்கப்படும் மீன்களுக்காகவும் ஏன் நாங்கள் வருத்தப்படுவதில்லை? ஏனெனில், உலகின் உயிர்ப் பரப்பில் தாராளமாக நிறைந்து கிடக்கும் உயிரினங்களின் இறப்பைப் பற்றி நாங்கள் கரிசனை கொள்வதில்லை. எங்கள் கரிசனைகள் எல்லாமே அரிதான உயிரினங்களை மாத்திரம் சார்ந்தது. எனவேதான், அந்தக் கருஞ்சிறுத்தையினதும், கர்ப்பிணி யானையினதும் நேயமற்ற கொலைக்காக நாங்கள் பரப்பவேண்டியது அனுதாபங்களையல்ல மாறாக விழிப்புணர்வுகளை என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். எங்கள் அனுதாபங்களை உயிரிழந்த அந்த விலங்குகள் கூட எதிர்பார்க்கப் போவதில்லை. அவற்றின் எதிர்பார்ப்புகளாக விழிப்புணர்வுகள் மட்டுமே இருக்க முடியும்.

இன்றைய நிலையில் ஒரு மில்லியன் அளவிலான வன விலங்குகள் அழியும் தருவாயில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். இதற்குப் பெரும்பாலான காரணமாக இருப்பது நீங்களும் நானும்தானேயன்றி வேறொன்றல்ல. நேரடியாகவும் மறைமுகமாகவும் நாங்கள் இயற்கை மீது செலுத்துகின்ற பாரியளவிலான செல்வாக்குகளே இன்று இந்த அரிய விலங்கினங்களின் உலக இருப்புக்களை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாக அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பத்து உயிரினங்களையேனும் இன்றைய நாளில் அடையாளம் கண்டு வைப்பதன் மூலமாக, ஒரு கர்ப்பிணி யானையையும் ஒரு அரிய கருஞ்சிறுத்தையையும் போல மற்றோர் இயற்கையின் அரிய படைப்பை இழந்துவிடாமல் இருப்போம்.


10. பிலிப்பைன்ஸ் முதலைகள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் சதுப்பு நிலங்களில் மட்டுமே வாழும் இந்த அரிய வகை முதலைகளானவை அண்மைய கணக்கெடுப்புக்களின்படி 200 மட்டுமே எஞ்சியிருப்பதாக கூறப்படுகிறது. தோல்களுக்காக வேட்டையாடப்படும் இவ்வகை முதலைகள், இதே நிலை நீடிக்குமானால், உலகில் இருந்து முற்றாக காணாமல் போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதே நிதர்சனம்.

9. வகுய்டா

1958 ஆம் ஆண்டிலேயே முதன் முறையாகக் கண்டறியப்பட்ட வகுய்டா என்ற டொல்பின் வகை அரிய உயிரினங்கள் கால நிலை மாற்றத்தினால் மிக விரைவாக அழிவடைந்துகொண்டு வரும் உயிரினமாகப் பட்டியற்படுத்தப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு கணக்கெடுப்பிலேயே அவற்றில் தொண்ணூற்று இரண்டு விழுக்காடு வகுய்டாக்கள் அழிவடைந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது.

8. கருப்புக் காண்டாமிருகம்

கொம்புகளினது சந்தை மதிப்புக் காரணமாக, ஏராளமாக வேட்டையாடப்பட்ட இந்தக் காண்டாமிருகங்களானவை, இன்றளவில் வெறும் 5400 ஐ விடக் குறைவானதாகவே உலகில் உயிர் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஐம்பதே ஆண்டுகளுக்குள் அவற்றின் தொண்ணூற்றெட்டு விழுக்காடு காண்டாமிருகங்கள் கொன்றழிக்கப்பட்டிருக்கின்றன.

7. சுமத்ரா ஊரங்குட்டான்

கிழக்காசியக் காடுகளில் அதிகம் வசிக்கும் இந்த ஊரங்குட்டான்களின் அழிவினால் காடுகளும், காலநிலையும் வெகுவாகச் சமநிலை தடுமாறியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பழங்களை உணவாக உண்ணும் இவை, காடுகள் பூராகவும் அப் பழங்களின் விதைகளைப் பரப்பும் இயல்பை உடையவை. காடழிப்புகளால் அதிகளவில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இவை, அண்மைய கணக்கெடுப்புக்களின்படி அண்ணளவாக 14 600 மட்டுமே எஞ்சியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

6. போர்போயிஸ்

சீனாவின் யாங்க்ட்சே ஆற்றில் மாத்திரம் வசிக்கும் இந்த அரிய வகை உயிரினமானது, டொல்பின்களைப் போன்று நுண்ணறிவும் உடலமைப்பும் கொண்டவையாகும். தற்போதைய கணக்கெடுப்புக்கள் இவற்றில் 1800 க்கு குறைவானவையே எஞ்சியிருப்பதாக உறுதிப்படக் கூறுகின்றன.

5. தென் சீனப் புலி

தென்சீனக் காடுகளில் மட்டுமே வசிக்கும் இப் புலியினமானது 1950 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 4000 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் வெகுவாகக் குறைவடைந்து 100 இற்குக் குறைவான புலிகளே இருக்கிறதென்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. பாதக நிலையை உணர்ந்த சீன அரசின் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவற்றின் இன விருத்தியில் தற்போது சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4. ஹாவ்க்ஸ்பில் கடல் ஆமைகள்

வண்ணமயமான ஓடுகளுக்காகவும், இறைச்சிக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படும் இவ்வகை ஆமைகள் வெப்ப மண்டலக் கடற்பகுதிகளில் அதிகம் வாழும் உயிரினமாகும். அவற்றில் எண்பது சதவீதத்திற்கு அதிகமானவை ஏற்கனவே வேட்டையாடப்பட்டுவிட்ட நிலையில், சொற்ப அளவிலானவை மாத்திரமே எஞ்சியிருக்கின்றன.

3. ஏசியன் யுனிகோர்ன்

இது ஒரு காட்டு ஆடு வகை உயிரினமாகும். வியட்னாம் மற்றும் லாவோஸ் காடுகளில் மட்டுமே இவை அவதானிக்கப்பட்டிருக்கின்றன. வெகு சில தடவைகள் மாத்திரமே ஆராய்ச்சியாளர்களால் அவதானிக்கப்பட்டிருக்கும் இவ்விலங்குகளின் சரியான எண்ணிக்கை விபரம் தெரியாவிட்டாலும், மிகக் குறைந்தளவானவைகளே உயிருடனிருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகிறது.

2. ஆபிரிக்க மலைக் கொரில்லா

ஆபிரிக்க மலைகளில் மட்டுமே காணப்படும் இத்தகைய கொரில்லாக்கள் இன்றளவில் 900 அளவிலேயே எஞ்சியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. போதிய சூழல் பாதுகாப்பின்மைகளால் விரைவாக அழிவடைந்து செல்கின்ற விலங்குகளின் பட்டியலில் இதற்கும் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

1. அமுர் சிறுத்தை

ரஸ்யாவின் அமுர் நதிக்கரைகளில் மாத்திரம் வசிக்கும் இத்தகைய அரிய வகைச் சிறுத்தைகளானவை இன்றைய நிலையில் அறுபதை விடக் குறைவாகவே காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மணிக்கு முப்பத்தேழு மைல்கள் வேகத்தில் ஓடக்கூடிய இவை, பதினேழு அடிகள் உயரத்தைத் தாண்டக்கூடியவை என்று கூறப்படுகிறது.


இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவை வெறும் பத்து உயிரினங்கள் மாத்திரம்தான். இதேபோன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தங்களின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன. இவற்றின் இருப்பு கேள்விக்குட்படுகிற போது, எமது இருப்பும் கேள்விக்குட்பட்டுத்தான் போகும். உலகையும் இயற்கையையும் சீராக வைத்திருக்கும் உயிர்ப் பல்வகைமை அற்றுப்போகுமாயின் அதற்கு முன்னரே மனித இனம் வேரோடு மடிந்திருக்கும். எனவே, அனுதாபங்களையல்லாது விழிப்புணர்வுகளைப் பரப்புவோம். பரிதாபங்களுக்காக அல்லாமல் இயற்கையின் உயிர்ப்பை உறுதி செய்வற்காக அரிய விலங்கினங்களைப் பாதுகாப்போம். ஆகையினால், இனியும் கண்ணீர் வேண்டாம். விழித்தால் போதும். விழி!


- உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.





No comments:

Post a Comment