May 29, 2020













திரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அவன் தூக்கத்தைத் தொலைத்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவன் நிகழ் உலகத்தையே கிட்டத்தட்ட மறந்திருந்தான். இவை எல்லாவற்றுக்கும் காரணம் அந்தப் புத்தகம் தான். அந்தப் புத்தகம் அவனைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது. அதிலிருந்து மீளவும் முடியாமல் அதை உதாசீனப்படுத்தவும் முடியாமல், அவன் தடுமாறிக் கொண்டும், எதையோ சிந்தித்தபடி தனக்குத் தானே பேசிக் கொண்டுமிருந்தான். அதை படித்தது தவறென்று தன்னைத் தானே நொந்து கொள்வதா அல்லது அதன் எழுத்துக்களைக் கண்டு பூரிப்பதா என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். அந்தக் குழப்பங்களினால்தான் அவன் தூக்கமற்ற இரவுகளோடு போராட வேண்டியிருந்தது. அவனின் இந்த அசாதாரண நிலைமைக்குக் காரணம், ஒரு வாரத்திற்கு முன்னர் அவன் படித்த ஒரு புத்தகம்தான் என்று சொன்னால் எவரும் அதை நம்பப் போவதில்லை.

கதிர் மிகப் பெரிய புத்தகப் பிரியன். அவனைப் பிரியன் என்று சொல்வதைக் காட்டிலும் பித்தன் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். அவனும் அப்படிச் சொல்லிக் கொள்வதைத்தான் பெரிதும் விரும்பினான். ஆனாலும், அவனது பொருளாதார நிலை புத்தகங்களை புதிதாக விலைக்கு வாங்கிப் படிக்கும் படியாக எப்போதுமே இருந்ததில்லை. வறுமைக்கென்றே எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு விவசாயக் குடும்பத்தின், அந்தப் பதினாறு வயது இளவலுக்கு பெரும்பாலும் புத்தகங்கள் என்பவை இரவல் சொத்து மாத்திரம்தான். சில விதி விலக்கான சமயங்களில் மாத்திரம் பிறர் படித்துவிட்டு விற்பனை செய்கிற பழைய புத்தகங்களை இரண்டாம் உடமையாளனாக விலைக்கு வாங்கும் பாக்கியம் கிட்டும். அப்படியான சந்தர்ப்பங்கள் பெரும்பாலும் வருடத்திற்கு ஓரிரு முறையாகவே அமையும். அதற்குக்கூட அவன் பல மாதங்களாக பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்தாக வேண்டியிருக்கும்.

அப்படி ஒரு நிகழ்வாகத்தான் அவன் அன்றும் அந்தக் கடைக்குச் சென்றிருந்தான். அது அவனுக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கி விற்கின்ற கடை. பெரும்பாலும் அங்கு கிடைக்கும் புத்தகங்கள் அதன் உண்மை விலையில் பாதி விலைக்குக் குறைவாகவே இருக்கும். ஆனாலும், அங்கு ஒரேயொரு சங்கடம் மட்டும் தவிர்க்க இயலாதது. அங்கு அவனுக்குப் பிடித்த புத்தகங்களைக் கேட்டு வாங்க முடியாது. அங்கு என்ன இருக்கிறதோ அவற்றைத்தான் வாங்கிக் கொள்ள முடியும். சில சமயங்களில் பையில் இருக்கும் பணத்தின் பெறுமதிக்கு எது கிடைக்குமோ அதை மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். ஆனாலும், அவன் அவற்றையெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. தனக்குச் சொந்தமாக ஒரு புத்தகம் கிடைப்பதே அவனுக்குப் பேரானந்தமாகவிருக்கும்.

அன்று அவன் அந்தக் கடையின் புத்தக அடுக்குகள் வழியே உலாவிக் கொண்டிருந்தபோது மிகப் பழமையான பருமனான ஒரு புத்தகம் அவனது கண்ணில் பட்டது. அதன் சிதைந்த முகப்பு அட்டையில் சாமுரா என்று தலைப்பிடப்பட்டிருந்ததை சற்று சிரமப்பட்டு படிக்க முடிந்தது. முகப்பு அட்டைதான் சிதைந்திருந்ததேயொழிய அதன் உட்பக்கங்கள் பெரும்பாலும் உயிர்ப்போடுதான் இருந்தன. அதன் பழுப்பேறிய பக்கங்கள் எழுத்துக்களை சிதைத்துவிடவில்லை என்பது சற்றுத் திருப்தியளித்தது. அதைத் தவிரவும் அது ஒரு புதினம் என்பதுதான் அவனுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. கதைகள் படிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டிருந்த அவன் அதை திருப்தியோடு மிகக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டான்.

அவன் நினைத்தது போலவே அந்தப் புத்தகம் மிகச் சுவாரசியமானதாக இருந்தது. சாதாரண புத்தகம் ஒன்றையே ஆர்வத்தோடு படிக்கும் அவனுக்கு அப்படியொரு சுவாரசியமான புத்தகம் கிடைத்தால் கேட்கவும் வேண்டுமா! அவன் பள்ளி சென்று வருகிற சமயம் தவிர்த்து மற்றைய அனைத்துப் பொழுதுகளையும் அந்தப் புத்தகத்துடனேயே கழித்தான். அதன் கதையோட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அது சாமுரா என்ற ஒரு இளைஞனைப் பற்றிய கதை. வாழ்வில் மிகக் கொடிய வறுமையின் பிடியில் இருக்கும் சாமுரா என்ற அந்த இளைஞன், தன் கனவுகளை அடைந்து கொள்ள எப்படியெல்லாம் வாழ்வோடு போராடுகிறான் என்பதாகவே அந்தக் கதை நகர்ந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட தன் வயதையும் தன் பொருளாதாரச் சூழ்நிலையையும் ஒத்திருந்த சாமுராவின் கதை கதிரினது தற்கால வாழ்வுக்கு மிக நெருக்கமாக இருந்தமையால், அவன் அதை தன் கதைபோலவே எண்ணிக் கொண்டான். அதனால்தான் அவனால் அவ்வளவு ஆர்வமாகவும் அதனைப் படிக்க முடிந்தது.

இவ்வாறு அதிக ஆர்வத்தோடு அந்தப் புதினத்தைப் படித்துக்கொண்டு, அதன் இறுதிப் பக்கத்தை அவன் அடைந்தபோது, அவனுக்கு ஓர் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் நிறைவடைந்துவிட்ட போதும், அதன் கதை முற்றுப் பெற்றிருக்கவில்லை. இறுதிப் பக்கத்தின் இறுதி வாக்கியம் முற்றுப் பெறாமலேயே திடீரென இடை நடுவே நின்றுபோயிருந்தது. அந்தப் புத்தகத்தின் இறுதிப் பக்கங்கள் சில காணாமல் போயிருக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொள்ள கதிருக்கு வெகுநேரங்கள் ஆகவில்லை. எல்லாவற்றையும் விட சாமுரா கதை நடுவே திக்குத் திசையற்று நின்று கொண்டிருப்பதுதான் கதிருக்கு எரிச்சலைத் தந்தது. அவனுக்கு தன்னை நினைக்கக் கோபம் கோபமாக வந்தது. ஒரு புத்தகத்தை அதன் அனைத்துப் பக்கங்களும் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து வாங்க முடியாத அளவுக்கு தான் ஒரு ஏமாளியாய் இருந்ததையிட்டு அவன் தன்னைத் தானே சபித்துக் கொண்டான். அவனால் அதனை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

உடனே புறப்பட்டு புத்தகம் வாங்கிய கடையை அடைந்தான். ஆனாலும், கடைக்கார வயோதிபர் அதற்குப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். அவனுக்கு புத்தகம் முழுமையானதாக இல்லை என்பதை விட, சாமுராவின் மீதிக் கதை என்னவென்று தெரியாததுதான் பெரும் துன்பமாக இருந்தது. சாமுராவின் மீதிக் கதை என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளாமல், அவனால் ஒரு நிமிடத்தைக் கூட நிம்மதியாகக் கடந்துவிட முடியவில்லை. அந்தக் கடையில் அந்தப் புதினத்தின் வேறு பிரதி இருக்கிறதா என்று தேடினான். ஆனால், அந்த ஒன்றைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தான் புத்தகம் இரவல் பெறும் நண்பர்களை விசாரித்தான். அவர்களுக்கு அப்படியொரு புத்தகம் இருப்பதே தெரிந்திருக்கவில்லை. அவனுக்குத் தெரிந்த எந்தவொரு நூலகங்களிலும் அப்படியொரு புத்தகத்தைக் காண முடியவில்லை. இந்த எழுத்தாளர் ஒரேயொரு புத்தகத்தை மட்டும்தான் வெளியிட்டாரா என்பது போல ஆச்சரியமாகவும், ஏமாற்றமாகவுமிருந்தது. அவனால் சாமுராவின் மீதிக் கதையை அறிந்து கொள்ளாமல் நிம்மதியடைய முடியவில்லை.

சில நாட்களில் அதிலிருந்து வெளி வந்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் சாமுரா அவனை விடுவதாயில்லை. ஒரு வாரத்திற்கு மேலாகியும் அதன் பாதிப்பிலிருந்தும், சாமுராவின் மீதிக் கதை தெரியவில்லை என்ற ஏமாற்றத்திலிருந்தும் அவனால் வெளிவரவே முடியவில்லை. வாழ்க்கையில் முதன் முறையாக இப்படியொரு புத்தகமும், அதன் கதாபாத்திரமும் தன்னைத் தொல்லை செய்வதை எப்படிப் கையாள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. எங்கு தேடியும் அந்தப் புத்தகத்தின் வேறு ஒரு பிரதியையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. இறுதியாக அவன் ஒரு முடிவுக்கு வந்தான். தனிமையான பொழுது ஒன்றில் ஒரு பேனாவையும் சில காகிதங்களையும் கையில் எடுத்தான். ஆம்! அவன் மீதிக் கதையை தானே எழுதிவிடுவதென்று தீர்மானித்திருந்தான். அது அவனுக்குச் சுவாரசியமாகவும் இருந்தது. அவன் விருப்பம் போல சாமுராவிற்கு அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்று அவனது சொந்தக் கற்பனைகளின் வழியே எழுதத் தொடங்கினான்.  உண்மையில் தன்னையே சாமுராவாக எண்ணிக் கொண்டுதான் எழுதினான்.

முதன் முறையாக கதை எழுத ஆரம்பித்த முயற்சி அவனுக்குக் குதூகலமாகவிருந்தது. அவன் தன் கற்பனையெல்லாம் திரட்டி எழுதிக் கொண்டேயிருந்தான். அவனது எழுத்தில் எழுத்தாளர்களுக்குண்டான நெளிவு சுளிவுகள் இருக்கவில்லை என்றபோதும், அவன் அதற்காக அலட்டிக் கொள்ளவுமில்லை. அவன் மனம் போன போக்கில் சாமுராவாகவே பயணப்பட்டான். இரண்டு வாரங்கள் முழுக்க இப்படி எழுதிக் கொண்டேயிருந்தவனுக்கு ஒரு கட்டத்திற்கப்பால் சலிப்புத் தட்டிய போதுதான், அவன் சாமுராவின் கதையை முடித்து வைத்தான். தான் எழுதிய பகுதிகளையும் அந்தப் புத்தகத்துடன் இணைத்துக் கொண்டான். அவனது மனம் அத்தோடுதான் ஆசுவாசப்பட்டது. தனக்கு மிகப் பிடித்த புத்தகம் ஒன்றை படித்த திருப்தி மட்டுமல்லாமல் அதை எழுதி நிறைவு செய்து வைத்த திருப்தியும் அவனைப் பூரணப்படுத்தியிருந்தன. அதன் பின்னர் அவன் எப்போது புத்தகங்கள் வாங்கினாலும் மிக அவதானமாக புத்தகங்களைப் பரிசோதித்து வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். தான் எழுதிய அந்தப் புத்தகத்தை அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்தாலும், கால ஓட்டத்தில் அதை அவன் மறந்திருந்தான்.

***

ன் படிப்பை வெற்றிகரமாக முடித்து ஒரு ஆசிரியராக ஆகியிருந்த அவனுக்கு, சில வாரங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது. வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பித்திருந்தவனுக்கு வெளியூர் ஒன்றுக்குப் பணி இடமாற்றம் வரவே, மனைவியோடு அங்கு குடிபெயர வேண்டியிருந்தது. அப்படியான சந்தர்ப்பத்தில் தன் பொருட்களை பொதிசெய்கிற போதுதான், பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தப் புத்தகம் அவனது கண்களில் பட்டது. அதைப் பார்த்ததுமே அது பற்றிய இனிமையான பழைய நினைவுகள் அவனை நிறைத்துக் கொண்டன. அன்றைய நாட்களில் தான் எப்படியெல்லாம் குறும்புத்தனமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சிரிப்பாகவும் இருந்தது. மறக்காமல் அந்தப் புத்தகத்தையும் தன் கையோடு எடுத்துக் கொண்டான். அதன் கதையை தன் புது மனைவியிடம் சொல்லி அவளைப் பூரிக்கச் செய்ய விரும்பினான்.

வாடகைக் கார் ஒன்றில் அவர்கள் புதிய ஊரை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். மனைவி ராதா அவனது தோளில் சாய்ந்தபடி காரின் ஜன்னல் வழியாக தூரத்துக் காட்சிகளை இரசித்தபடி இருந்தாள். அந்த அமைதியான பயணத்தில் அந்தப் புத்தகத்தை அவன் மீண்டும் புரட்டினான். அடுத்த கணமே அவனது பள்ளிக் கால நினைவுகள் எல்லாம் கண் முன்னே ஓடி வந்தன. அவை நினைக்க நினைக்க இனிமையாகத் தோன்றின. அவன் பக்கங்களை மெல்ல மெல்லப் புரட்டிக் கொண்டிருந்தான். தன் எழுத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தவனை தீடீரென்று ஒரு பதற்றம் பற்றிக்கொண்டது. நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அதை வாசிக்க வாசிக்க ஆச்சரியமாக இருந்தது. அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அந்தப் புத்தகத்தில் அவன் பல ஆண்டுகள் முன்பு எழுதிய கதை அச்சொட்டாக அவனின் கதையாகவும் இருந்தது. அந்தக் கதையை எழுதிய பின்னர் அவனது வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் அந்தக் கதையில் அதற்கு முன்பே அவனால் எழுதப்பட்டிருந்தன. எழுதியது அவன்தான் என்றாலும், அதை வெகு காலங்களுக்கு முன்னரே முற்றிலுமாக மறந்திருந்தவனுக்கு, எப்படி இது சாத்தியம் என்று வியப்பாக இருந்தது. சாமுரா என்ற காதாபாத்திரத்தின் வாழ்வில் நடப்பதாக அந்தக் கதையில் தான் எழுதியிருந்த பல்வேறுபட்ட சம்பவங்கள் தன் வாழ்வில் கடந்த காலங்களில் எப்படி நடந்தது என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. `இது ஏதும் மாயாஜாலமா? அல்லது நான் எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய தீர்க்கதரிசியா?` என்று தன்னைத் தானே கேள்வி கேட்டான். வியப்பு ஒன்றைத் தவிர அவனிடம் பதில் எதுவும் இருக்கவில்லை.

அந்த ஆச்சரியத்தை ராதாவிடம் கூறலாமா என்று யோசித்தான். ஆனாலும் அவளை நம்பச் செய்யக்கூடிய எந்தவொரு விடயங்களும் தன்னிடம் இருக்கவில்லை என்பதனால், இன்னும் இன்னும் பக்கங்களைப் புரட்டி அதில் இருக்கின்ற வேறு என்னென்ன சம்பவங்கள் தனக்கு நடந்திருக்கிறது என்பதை வியப்போடு தேடிக் கொண்டிருந்தான். ஆசிரியப் பணியில் இணைந்தது, அப்பாவின் மறைவு மற்றும் சொந்த மாமாவின் மகளையே திருமணம் செய்து கொண்டது என பல்வேறுபட்ட சம்பவங்கள் சாமுராவுக்கு நடப்பது போல, தான் எழுதியவைகளே தன் வாழ்விலும் நடந்திருப்பதைக் கண்டு அவனால் ஆச்சரியப்படாமலும், அச்சப்படாமலும் இருக்கமுடியவில்லை. அப்போதுதான் அந்தக் கதையில் சாமுரா என்ற கதாபாத்திரம் அடிக்கடி தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் வாசகமான “நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்.” என்ற வாசகம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அது அவனுக்கும் பிடித்த வாசகம்தான். எண்ணங்கள் மிக வலிமையானவை என்று அவன் சமீப காலமாகக் கேள்விப்பட்ட விடயங்களும், படித்த விடயங்களும் அவனுக்கு ஞாபகம் வந்தன. எண்ணங்களை வடிவமைப்பதன் மூலம் எங்கள் வாழ்வை எப்படி வேண்டுமானாலும் நாங்கள் விரும்புகிறபடி மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்ற அவனது சமீபகால நம்பிக்கை அவனுக்கு முற்றிலும் உண்மை என்று ஊர்ஜிதமாகிற்று.

`ஆகா! எப்போதோ ஒரு காலத்தில் என் கதை என்று எண்ணியபடி சாமுராவுக்காக நான் எழுதிய கதை உண்மையிலேயே இன்று பலித்திருக்கிறதே` என்று எண்ணுகிற போது, அவனுக்குப் புலங்காகிதமாய் இருந்தது. நாம் எங்களை எதுவாக நினைத்துக் கொள்கிறோமோ, எங்களுக்குள் என்ன எண்ணங்களை விதைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்ற தன் அண்மைக் கால நம்பிக்கையில் அவனுக்கு அசைக்க முடியாத பற்று உருவாகியது. `அந்தக் கதையை எழுதுகிறபோது, இந்த உண்மை தெரிந்திருந்தால், சாமுராவை இதைவிடவும் மிகப் பெரும் வெற்றியாளனாகவும் அதிஸ்டக்காரனாகவும் வடிவமைத்து அதன் பலனை நாம் இன்று அனுபவித்திருக்கலாமே` என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். `அதனால் என்ன! விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து எழுதலாம். இனி என் வாழ்வில் நடக்கப் போகும் ஒவ்வொன்றும் எனக்குப் பிடித்ததாகவே இருக்கப் போகிறது` என்று எண்ணியபடி கதையின் தொடர்ச்சியை வடிவமைக்க இறுதிப் பக்கத்தைப் படித்தான்.  ஆனால் துரதிஸ்டவசமாக அதன் இறுதி வாக்கியத்தில் சாமுரா மரணமடைந்த செய்தி எழுதப்பட்டிருந்தது. அவன் அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது எதிரில் ஒரு லாரி தன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து திமிறியபடி வந்து கொண்டிருந்தது!

முற்றும்.


- உங்களுக்கு இந்தச் சிறுகதை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இந்தச் சிறுகதை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.




May 22, 2020














`ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்` என்ற வாக்கியத்தினால்தான் எம்மில் பலரது குழந்தைப் பருவ இரவுகள் அழகூட்டப்பட்டது என்று சொன்னால், அதில் மிகை எதுவும் இருக்கப் போவதில்லை. ஸ்மார்ட் ஃபோன்களும், தொலைக் காட்சிகளும் எம் வாழ்வியலில் பெரும்பாலும் நுழைவதற்கு முன்பு அந்தத் தொழில்நுட்பத்தின் பணியை நிறைவேற்றியது எம்மில் பலரதும் வீடுகளில் இருந்த பாட்டன் அல்லது பாட்டி என்ற அற்புதமான கதை சொல்லிகள்தான். அவர்களிடம் கதை கேட்பதற்காகக் காத்துக் கிடந்த பொழுதுகளையும் தவிப்புகளையும் இன்றைய நாட்களில் ஏக்கத்துடன் எண்ணிப் பார்க்கிறபோது, அந்தத் தவிப்பை இன்றைய எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் ஈடு செய்துவிட முடியவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை. எனக்கு அவ்வாறாக கதைகளின் உலகத்தை அறிமுகம் செய்தவர் என் பாட்டனார்தான். அதிகம் கல்வி கற்றிடாத அவரது கதைகள்தான் எனக்குள் விழுந்த முதல் கற்பனை விதை என்பதில் எனக்குத் தெளிவான நம்பிக்கையுண்டு.

தினம் இரவில் தொடங்கும் அந்தக் கற்பனைப் பயணம் பெரும்பாலும் `ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான்` என்பதாகவே தொடங்கும். அவ்வாறு இல்லையென்றாலும் முடிகிறபோதாவது ராஜாவோடு முடியும். என் பாட்டனுக்கு பல ராஜாக்களைத் தெரிந்திருப்பது அப்போது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. அவர் எனக்கு அறிமுகம் செய்த ராஜாக்களை என்னால் எங்கள் தெருக்களிலோ அல்லது ஊரிலோ பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், அது மேம்போக்கானதுதான். ஏனெனில், அந்த ராஜாக்களை என் கற்பனையினூடே பார்க்கும் வித்தையை நான் என் பாட்டனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தேன். ஒரு வேளை என் தெருக்களில் ராஜாக்களை நான் காண நேர்ந்திருந்தால்கூட, என் கற்பனையில் உலாவிய ராஜாக்களின் அளவுக்கு அவர்கள் நேர்த்தியானவர்களாகவும் வீர தீரர்களாகவும் இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனாலும் அந்தக் கதைவழிப் பயணங்கள் எனக்கு வெகுகாலங்கள் நீடிக்கவில்லை என்பது துர்ப்பாக்கியமான உண்மைதான். என் கதை சொல்லிப் பாட்டன் தன் சொந்தக் கதையை நிறைவு செய்து கொண்டு மாற்று உலகை நோக்கிப் புறப்பட்டதுமே அந்த ராஜாக்களும் அவரோடு சேர்ந்தே போய்விட்டிருந்தனர்.

அதன் பின்னர் என் கற்பனை ஊற்று பெரும்பாலும் தடைப்பட்டுத்தான் போனது. அதை மீண்டும் ஊற்றெடுக்கச் செய்யும் வித்தையை மிக நீண்ட காலங்களுக்கு என்னால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தமையால், அந்தத் தாகத்தை நான் தொலைக்காட்சிகளின் காட்சிப் பிம்பங்களினூடு தணித்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்டேன். ஆனாலும், என் கற்பனையில் அரசாட்சி நடாத்திய  ராஜாக்களின் அளவுக்கு தொலைக்காட்சி ராஜாக்கள் என்னை பாதிப்பதாக இல்லாதது பெரும் ஏமாற்றமாகவே இருந்து வந்தது.  எனினும், எதிர்பாராத சந்தர்ப்பம் ஒன்றில் அந்தக் கற்பனை ராஜாக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வித்தையை நான் கற்றுக்கொண்டேன். அந்த வித்தை ஒளிந்துகொண்டிருப்பது எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட ஒரு காகித அடுக்கிற்குள் என்பதை நான் கண்டுகொண்டேன். அதன் பெயர் புத்தகம் என்று நீங்கள் சொன்னாலும் நான் அதை மறுக்கப் போவதில்லை. ஆம், எப்போது நான் புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேனோ, அந்தக் கணமே பல ஆண்டுகள் உயிரற்றுக் கிடந்த என் ராஜாக்கள் உயிர் பெற்றுக் கொண்டு வாள் வீசத் தொடங்கினார்கள். அவர்களுக்கு நான் மீண்டும் வாழ்க்கை கொடுத்ததற்காக எனக்கு நன்றி பாராட்டிக் கொண்டார்கள்.  அன்றுதான் நான் அறிந்துகொண்டேன், கற்பனை அறிவை விட உயர்வானது என்றும், எழுத்துக்கள் காட்சிகளை விட வீரியமானது என்றும். அன்றிலிருந்து என் கற்பனைகளும் நான் படிக்கும் எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. சில நேரங்களில் எழுத்து வெற்றி பெற்றாலும், பெரும்பாலான நேரங்களில் கற்பனை எழுத்தைக் காட்டிலும் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றதுண்டு. ஆனாலும், இரண்டும் தனித் தனியாக இயங்க முடியாதவை என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

மகாபாரதத்தை பெரும் தொலைக்காட்சித் தொடராக பார்த்த போது ஏற்படாத ஆச்சரியம், அதைக் கதையாகப் புத்தகங்களில் படித்த போது ஒவ்வொரு பக்கங்களிலும் எனக்குள் ஏற்பட்டதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதைவிடவும், அதுவரை பாதகனாக பலராலும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த துரியோதனன் அதன் பின் நாயகனாகவும், உத்தமர்கள் என்ற சான்றிதழ் பொறித்திருந்த பாண்டவர்கள் சதிகாரர்களாகவும் மாறிப்போனார்கள். இவையெல்லாவற்றையும் விட, கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி பிரம்மாண்டப் படைப்பென்று உருவாக்கப்பட்ட பாகுபலி திரைப்படமோ, அதன் போர்க் காட்சிகளோ தந்துவிடாத மிகப் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும், வர்ணனை மன்னன் எனக் குறிக்கப்படும் சாண்டில்யனின் கடல் புறா புதினத்தின் இறுதி யுத்தமான ஸ்ரீ விஜய மாநகர யுத்தத்தைப் படிக்கிற போது என் கற்பனைகள் எனக்குத் தந்தன. அப்படியான பிரம்மாண்ட யுத்தத்தை அதன் பிரம்மிப்புக் குன்றாமல் காட்சியாக்க வேண்டுமாயின், சில நூறு ராஜமௌலிகளாவது எமக்குத் தேவைப்படும் என்பதை என்னால் தைரியமாகச் சொல்லவும் முடியும்.

இப்படியாக நான் என்றோ தொலைத்த ராஜாக்கள், நான் திரைகளில் தேடியும் கிடைகாத அந்த ராஜாக்கள் எனக்கு எழுத்துக்களினால் திரும்பக் கிடைத்தார்கள். இது வெறுமனே என் கதை மாத்திரம் தான். இதைக் காட்டிலும் உங்கள் கதை சுவாரசியமாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருக்கக் கூடும். ஆனால், நான் கேட்க விரும்புவது, நம் அடுத்த சந்ததியும் இந்தக் கற்பனை ஊற்றை உபயோகிக்கக் கற்றுக் கொள்கிறார்களா என்ற கேள்வியைத்தான். விரும்பியோ விரும்பாமலோ இந்தக் கேள்விக்கு இல்லை என்ற பதிலைத்தான் எம்மால் தர முடிகிறது. கதை சொல்லிப் பாட்டன்களோ பாட்டிகளோ இல்லாத அளவிற்கு குடும்ப உறவுகள் மிகச் சுருங்கிவிட்ட இன்றைய சூழ்நிலையில், வீடியோ காணொளியொன்றாக அல்லாமல் இன்றைய குழந்தைகள் எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. எழுத்துக்கள் அவர்களுக்கு அந்நியமாக ஆகிக்கொண்டிருக்கின்றன. புத்தக வாசிப்புக்கள் வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் கதைகளைக் கூட எழுத்துக்களாக அல்லாமல் வெறும் காணொளிக் காட்சிகளாகவே அறிந்துகொள்ளப் பிரியப்படுகிறார்கள். இதனால் கற்பனைத் திறன் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும் கற்பனைக் கதையை எழுதுவதற்காக அல்ல, குறைந்த பட்சம் தனக்குப் பொருத்தமான உடையைத் தேர்ந்தெடுப்பதற்காகவேனும் அவர்கள் கற்பனையாற்றலை வளர்த்துக் கொள்ள முடியாத காலகட்டத்தை நோக்கி வாழ்க்கை முறை சென்றுகொண்டிருக்கிறது.

மின்குமிழ் பற்றிய கற்பனை எடிஷனுக்குத் தோன்றாது போயிருந்தால், நாம் இன்றும் குப்பி விளக்குக்கு மண்ணெண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்திருப்போம். வானளாவிய தஞ்சைப் பெருங்கோவில் பற்றிய கற்பனை பேரரசன் இராஜராஜச் சோழனுக்கு தோன்றாது போயிருந்தால், எம் மூதாதைத் தமிழர்கள் எம்மை விட புத்திசாலிகள் என்பதை ஏற்க மறுத்திருப்போம். ஆக, இதுவரை நிகழ்ந்த அனைத்துப் புத்தாக்கங்களும் கற்பனையின் விளைவுகள்தானேயன்றி வேறொன்றல்ல. அவ்வாறு இல்லையேல் உலக ஓட்டம் என்றோ ஸ்தம்பித்து நின்றிருக்கும். ஆகையினால், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதைத் தரப்போகிறீர்கள்? எவரோ ஒருவர் வடிவம் கொடுத்த காட்சிகளையா அல்லது தாங்களே வடிவமிட்டுக் கொள்ளும் கற்பனைகளையா என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


- உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.



May 15, 2020














என் வாழ்க்கையையே மொத்தமாகப் புரட்டிப்போட்ட அந்த நிகழ்வு நடந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் தாக்கத்திலிருந்து என்னால் இன்னமும் முழுதாக வெளிவந்துவிட முடியவில்லை. அப்போது நான் ஒரு யூடியூப்பராக இருந்தேன். என் யூடியூப் சேனலை நீங்கள்கூட அன்றைய நாட்களில் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஓரளவு பிரபல்யமாக இருந்த `ட்ராவல் பாய்ஸ்` என்ற யூடியூப் சேனலை நடாத்திக் கொண்டிருந்த ஆதவன் என்பவன் நான் தான். நான் என்றால் நான்மட்டுமே அதை நடாத்தவில்லை. நானும் என் நண்பன் விக்கியும் சேர்ந்து அந்தச் சேனலை நடாத்திக்கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் கல்லூரிக் காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்குமே பயணம் செய்வதில் பெரும் ஆர்வமும் ஆசையும் இருந்தது. நாங்கள் பயணம் செய்கிற புதுப்புது இடங்களையெல்லாம் மேலும் அழகாக உலகுக்குக் காட்ட வேண்டும் என்று முதலில் விக்கிதான் விரும்பினான். அவனது சிந்தனையின்படி ஆரம்பிக்கப்பட்ட ட்ராவல் சேனல்தான் அந்த `ட்ராவல் பாய்ஸ்`. ஆரம்பத்தில் விளையாட்டாக அப்லோட் செய்த வீடியோக்கள் மெல்ல மெல்ல பிரபல்யமடையத் தொடங்கியது. எங்கள் சேனலுக்கு அன்றைய நாட்களில் வரவேற்பு கூடிக்கொண்டிருந்தது. அந்த வரவேற்பைக் கண்டு பூரித்துப்போன நாங்கள் எங்கள் வீடியோக்களை முன்பை விடத் தரமாகவும் புதுமையாகவும் வழங்க விரும்பினோம். மக்களால் பெரிதும் அறியப்படாத புதுப் புது இடங்களையும் அதன் அழகையும் தேடி பயணப்பட ஆரம்பித்தோம். அங்குதான் எங்களுக்குப் பிரச்சனையும் ஆரம்பித்தது.

எனக்கு அந்தப் பயணம் இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. இலேசான மழைநாள் ஒன்றில் நாங்கள் கன்னல் நீர் வீழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மோட்டர் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். பெரும்பாலான பயணங்களைப்போலவே, அந்தப் பயணத்தையும் போவது ஒரு பாதையாகவும், வீடு திரும்புவது மற்றுமொரு பாதையாகவும் திட்டமிட்டு அதன்படியே பயணப்பட்டுக்கொண்டிருந்தோம். நாங்கள் பயணம் செய்கிற பாதைகளையும், அந்தப் பாதைகளில் நிறைந்திருக்கிற இயற்கைகளையும் அனுபவித்துக் கொண்டே பிரயாணப்பட்டுக்கொண்டிருந்தோம். எங்கெல்லாம் மனம் தாமதிக்கச் சொல்கிறதோ, எங்கெல்லாம் இயற்கை கண்களை வசீகரித்துக் கொள்கிறதோ அங்கெல்லாம் தவறாது பைக்கை நிறுத்திவிட்டு இயற்கையை வேண்டிய அளவுக்குப் பருகிக்கொண்டோம். கூடவே கேமராவில் அந்தக் காட்சிகளையும் பதிவு செய்து கொண்டோம். பச்சைப் பசேலென்ற அந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஊரைக் கடந்துகொண்டிருந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த விக்கி பைக்கை நிறுத்துமாறு என் தோளில் தட்டினான். வழக்கம்போல பைக்கை நிறுத்திவிட்டு அவன் கை காட்டிய திசையைப் பார்த்தேன். ஆகா! அங்கே அழகான ஒரு மலைக் குன்று பள்ளத்தாக்கிற்கு அருகில், எங்களை வா என்று அழைப்பது போல கம்பீரமாக நின்றிருந்தது. சாதாரண மலைக்குன்றுதான் என்ற போதும், அதனிடம் ஏதோ ஒரு இனம் புரியாத வசீகரம் எங்களை அதை நோக்கி ஈர்ப்பது போல தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் மேல் ஏறி நின்று அந்தப் பள்ளத்தாக்கைப் பார்த்துப் பூரிக்கும் எண்ணத்திற்காகவே அதில் ஏறிவிடுவதென்று முடிவு செய்தோம்.

ஒருவாறாக அந்தக் குன்றைச் சென்றடையக்கூடிய பாதையைக் கண்டுபிடித்து அதன் வழியே சென்றுகொண்டிருந்தோம். அந்தக் காட்டுவழிப் பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கப்பால் பைக்கில் தொடர்ந்து செல்ல முடியவில்லை. பாதை மிகக் கரடுமுரடாகவும் மேடாகவும் இருந்தமையால், பைக்கை ஸ்டாண்டில் போட்டுவிட்டு குன்றை நோக்கி நடக்கத் தொடங்கினோம். பயணம் முழுக்க மழைச் சாரலில் நனைந்திருந்த எனக்கு, தடிமன் பீடித்து மூக்கிலிருந்து நீர் வடிந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தது. ஆனாலும், என் எதிர்பார்ப்புகள் அந்த அசௌகரியங்களைக்கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது, அந்த ஒற்றையடிப் பாதையில் சுறுசுறுப்போடு என்னைப் பயணிக்கச் செய்துகொண்டிருந்தன. திடீரென்று நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்த அந்தக் குறுகலான பாதை ஓர் இடத்தோடு முடிவடைந்து எங்களுக்குச் சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதற்கப்பால் பாதை இல்லை என்பது, யாரும் அந்த இடத்தைத் தாண்டி மேற்கொண்டு பயணிப்பதில்லை என்று உணர்த்தியது. மனிதர்கள் தொந்தரவு செய்யாத இயற்கைதான் அழகை தன்னுள் புதைத்துக் கிடக்கிறது என்று எண்ணிக்கொண்டே மலைக் குன்று இருந்த திசையை நோக்கி முன்னேற எத்தணித்த போது, ஒரு பலமான கை என் தோளைப் பிடித்து நிறுத்தியது.

நான் துணுக்குற்று பின்னால் திரும்பினேன். அங்கு ஒரு விசித்திரமான கிழவன் நின்றிருந்தான். அவனது வாயில் நீளமான மலைச் சுருட்டு புகைந்து கொண்டிருந்தது. அவனது பழுத்த சடை முடியும், வெண்தாடியும் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ஒரு பிச்சைக்காரனைப் போல அவன் கிழிசலான ஆடைகளை அணிந்திருந்தான். அவனது சிவந்த கண்கள் எங்களை மிரட்டுவது போல் பார்த்தன.

“யாரு நீங்கெல்லாம்? எங்கே போறீங்க?”
அவன் சற்றுக் கோபமாகக் கேட்டான்.

“ஐயா, நாங்க அந்த மலைக்குன்றுக்குப் போறோம். அது பார்க்க ரொம்ப அழகா இருக்கு. அதை படம் புடிக்கலாம்னு போய்ட்டிருக்கோம்.” 
என்று கூறியவாறு நான் எங்கள் கேமராவை தூக்கிக் காட்டினேன்.

“அழகா இருக்கா! ஹா.. ஹா.. நம்பாதீங்க. அவளை நம்பவே நம்பாதீங்க.. அவ மோசக்காரி. மயக்கியே கொன்னுருவா. அவகிட்டப் போகாதீங்க.”

“ஐயா நீங்க சொல்றது புரியலையே. நீங்க யாரைப் பற்றி சொல்றீங்க?”

“வேற யாரைப் பற்றி! அவதான்… அந்த சாம்பல் கண்ணியைப் பற்றித்தான் சொல்றேன்.”

“சாம்பல் கண்ணியா? யாரது?”

“உங்களை அந்த மலைக்கு அழைச்சது அவள்தான். அவளை நம்பாதீங்க. அவ ரொம்ப மோசக்காரி.”

“ஐயா, நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே?”

“சாம்பல் கண்ணினு முப்பது வருசத்துக்கு முதல்ல இந்த ஊர்ல ஒருத்தி இருந்தா. அவளுக்கு அந்தப் பேரு வந்ததுக்குக் காரணம் அவளோட கண்கள் சாம்பல் நிறத்துல இருந்ததுதான்.  அவள் ஒரு நடத்தை கெட்டவள்னு சொல்லி இந்த ஊர்க்காரங்க அவளை அடிச்சு விரட்டிட்டாங்க. உறவுன்னு யாரும் இல்லாத அவள், எங்கே போறதுன்னு தெரியாம, அந்த மலைமேல ஏறி தற்கொலை பண்ணிக்கிட்டா. அவளோட ஆவி அங்கதான் சுத்திக்கிட்டிருக்கு. அந்த மலைக்குப் போன யாரையும் அது விட்டு வச்சதில்லை. அங்க போறவங்களை அவளோட அழகைக் காட்டி மயக்கி அந்த மோசக்காரி கொன்னுருவா. அப்படிப் பல பேரை அவ பலியெடுத்திருக்கா. உங்க நல்லதுக்காகத்தான் சொல்றேன். திரும்பிப் போய்டுங்க.”

அவர் அப்படிச் சொன்னதும் நானும் விக்கியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். ஆனால், எங்களால் வெகு நேரத்துக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சத்தமாகச் சிரித்தேவிட்டோம். விக்கி சற்று அதிகப்பிரசங்கித்தனமாக அந்தக் கிழவரையும் கேலிசெய்துவிட்டான்.

“போய்யா கூமுட்ட! இதை சொல்றதுக்கன்னே நீ இதுல உட்காந்திருக்கிறியா! உன் கண் சிவந்திருக்கும்போதே நினைச்சேன். இந்த ஊர்ல கஞ்சா தாராளமாக் கிடைக்கும் போலருக்கே.”

அந்தக் கிழவனுக்கு கோபம் சீறிக்கொண்டு வந்தது.

“அடே நாய்களா! நான் உங்க நல்லதுக்காகத்தான் சொன்னேன். போறதுன்னா தாராளமாப் போங்க. ஆனா, நான் சொன்னது உண்மைனு உங்களுக்குப் புரியும்போது நீங்க சாவுக்குப் பக்கத்துல இருப்பீங்க. அப்போ நான் சொன்னதை நினைச்சு வருத்தப்படுவீங்க. ஆனா, பொழைக்க மாட்டீங்க. அவ உங்களை விட மாட்டா. நீங்க எங்க ஓடி ஒளிஞ்சாலும் விடமாட்டா. அந்த சாம்பல் கண்கள் உங்களை கொல்லாம விடாது.”

என்று சபித்துக்கொண்டே அவன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தான். அவனது சுருட்டின் புகை நீண்ட நேரம் அவன் போன திசையில் சுழன்று கொண்டிருந்தது.

அந்தக் கிழவனைக் கேலி செய்தபடி குன்றினினை அடைந்தோம். அந்த மலைக் குன்றில் சற்று சிரமப்பட்டு இருவரும் ஏறி நின்றோம். ஆகா! அங்கிருந்து பார்க்க அந்தப் பள்ளத்தாக்கு அத்தனை ரம்மியமாய் தெரிந்தது. பள்ளத்தாக்கின் அடியில் ஓடிக்கொண்டிருந்த நீரோடையொன்று பெரும் இராட்சச நாகம் நெளிவதைப்போல் இருந்தது. எங்கோ தூரத்தில் உயர்ந்து நின்றிருந்த மலைகளையெல்லாம் கரு மேகங்கள் தழுவிக்கொள்வதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பேரானந்தமாகவிருந்தது. குன்றின் அடிவாரங்களில் கொத்துக்கொத்தாக பல வர்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அவையெல்லாம் எங்குமே காணக்கிடைக்காத தனி அழகாய் தோன்றின. அந்த மொத்த இடத்தையும் இரசித்ததோடு மாத்திரம் நின்றுவிடாது, அந்த மனதுக்கினிமையான அழகை வேண்டியளவு கேமராவில் பதிவு செய்துகொண்டோம். அந்த மலைக்குன்றுக்கு மட்டுமே தனியாக ஒரு வீடியோ அப்லோட் செய்துவிடலாம் என்பதுதான் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தளவுக்கு அங்கு அழகு நிறைந்து கிடந்தது.  ஆனால், விக்கிதான் அங்கு ஏதோவொரு கெட்ட வாடை வீசுகிறதென்று அடிக்கடி கூறிக்கொண்டேயிருந்தான்.

அங்கிருந்து புறப்பட்டு மாலை வேளையில் நேராக வீட்டை வந்து சேர்ந்தோம். விக்கி வரும் வழியில் அவனது வீட்டிலேயே இறங்கிக் கொண்டான். எனக்குக் களைப்பாக இருந்தது. ஆனாலும், வீடியோவை அப்லோட் செய்துவிடவேண்டும் என்பதற்காக பொறுமையாக அதை எடிட் செய்து முடித்தேன். வீடியோ எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருந்தது. அப்லோட் செய்வதற்கு முன் விக்கியை வரச் சொல்லி, அதனைப் பார்க்கச் செய்யலாம் என்று அவனது செல்ஃபோனிற்கு கால் செய்தேன். ஆனால், அவனது செல்ஃபோன் ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பயண அசதியில் நித்திரையாகியிருப்பான் என்று நினைத்துக்கொண்டு, வீடியோவை அப்லோட் செய்துவிட்டு நானும் நன்றாகப் படுத்துறங்கிவிட்டேன். 

பயணக் களைப்பினால் நன்றாக நித்திரையாகியிருந்தேன். அடுத்த நாள் நண்பகல் பன்னிரெண்டு மணியளவில்தான் நித்திரை கலைந்தது. அப்போது எனக்குப் பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நான் அப்லோட் செய்த அந்த மலைக்குன்று வீடியோவை 12 மணித்தியாலங்களுக்குள் முதன் முறையாக ஐந்து இலட்சம் பேர் பார்த்திருந்தார்கள். என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. அதுவரை எங்களுடைய அதிகபட்ச வியூஸ் என்பது ஒரு இலட்சம் மட்டுமே. என் செல்ஃபோனைப் பார்த்தேன். விக்கியிடமிருந்து மிஸ்ட் கால் எதுவும் இருக்கவில்லை. நான் அவனுக்குக் கால் செய்தேன். அப்போதும் அவனது செல் ஸ்விச் ஆஃபில் தான் இருந்தது. அவன் இன்னும் எழும்பியிருக்கவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவனிடம் அந்த சந்தோசத்தை உடனே பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று என் மனம் துடியாய் துடித்தது. முடிந்தவரை வேகமாக தயாராகிக்கொண்டு அவசர அவசரமாக அவனது வீட்டை அடைந்தேன்.

அங்கே அவனது படுக்கையறை உட்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. எவ்வளவு தட்டியும் அவன் திறப்பதாக இல்லை. எனக்கு சற்றுப் பதற்றமாக இருந்தது. ஜன்னல்களும் இறுக்க மூடப்பட்டிருந்தன. எனக்கு அந்த மலைச்சுருட்டு புகைத்துக்கொண்டிந்த கிழவன் மனக் கண்ணில் தோன்றி மறைந்தான். மனம் படபடக்கத் தொடங்கிவிட்டது. வீட்டிலிருந்தவர்களின் உதவியோடு கதவை உடைக்க முயற்சி செய்தேன். என்னை விட அவனின் அண்ணனும் அம்மாவும் பதறிப்போயிருந்தார்கள். அவனது அம்மா அழுது கொண்டிருந்தாள். அவளது முகம் எனக்கு எதையோ ஞாபகப்படுத்தியது. அது என்னவென்று புரிவதற்கு எனக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. ஆம்! அந்த சாம்பல் கண்ணி!  அந்த சாம்பல் கண்ணியின் கற்பனையான உருவமொன்று என் மனதுக்குள் வந்து வந்து சென்றுகொண்டிருந்தது. எனக்குப் பதட்டம் முன்பைவிட அதிகரித்துவிட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கதவின் தாழ்ப்பாள் நொறிங்கி விழவும் கதவு மெல்லத் திறந்துகொண்டது.

அங்கு நான் கண்ட காட்சி இப்போதும் என் இதயத்தை நொறுக்கிக் கொண்டிருக்கிறது. அங்கே விக்கி இரத்த வெள்ளத்தில் படுக்கையில் விழுந்து கிடந்தான். அவனது வலது கையில் சிறிய கத்தி ஒன்று இருந்தது. அவனது இடது கை முழுக்க கத்தியால் அறுத்துக்கொண்ட அடையாளங்கள் நிறைந்து கிடந்தன. அந்தக் காயங்களிலிருந்து இரத்தம் வடிந்து உலர்ந்து போயிருந்தது. நிச்சயமாக சம்பவம் நடந்து நீண்ட நேரமாகிவிட்டது என்பது புரிந்தது. அவன் தன்னைத்தானே கொன்று கொண்டிருந்தான். அனைத்தும் கை மீறிப் போயிருந்தது. அழுதோம், புரண்டோம், ஒப்பாரியிட்டோம். ஆனாலும் என்ன பயன்! அவன் வெகுதூரம் போய்விட்டிருந்தான். ஆனால், எல்லோருக்குள்ளும் எழுந்தது ஒரேயொரு கேள்விதான். `தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு விக்கிக்கு என்ன பிரச்சனை இருந்தது?` என்பதே அந்தக் கேள்வி. நான்தான் அவனது நெருங்கிய நண்பன் என்றபடியால், எல்லோரும் அந்தக் கேள்விக்கு என்னிடமே பதிலை எதிர்பார்த்தார்கள். ஆனால், அதே கேள்விதான் எனக்குள்ளும் தெளிவான பதில் அற்றுக்கிடந்தது. ஆனால், என் உள் மனமோ நான் நம்ப மறுத்தாலும் அந்தக் கேள்விக்கு வேறு விதமாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. அச்சமூட்டக்கூடிய இரண்டு சாம்பல் நிறக் கண்கள் என் மனக் கண்ணில் தோன்றித் தோன்றி மறைந்தன. அந்தக்  கேள்வி எனக்குள் எழுகிறபோதெல்லாம் அந்தக் கண்கள் அடுத்தது நீதான் என்பது போல நகைத்தன.

என்னால் அந்தச் சம்பவத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. அரைப் பித்துப் பிடித்தவன் போல தன்னந் தனியாக புலம்ப ஆரம்பித்துவிட்டேன். என் உயிர் நண்பனின் பிரிவை விட, அந்தச் சாம்பல் நிறக் கண்கள்தான் என்னை மிக மோசமாகத் தொந்தரவு செய்தன. நான் கண்களை மூடுகிறபோதெல்லாம் அந்த சாம்பல் நிறக் கண்கள் விழித்துக் கொண்டு என்னையே பார்ப்பது போல பெரும் பிரம்மை என்னைச் சூழ்ந்துகொண்டது. நான் தூங்கிப் பல வாரங்களானது. தூக்கமற்ற என் கண்கள் எந்நேரமும் எரிச்சலடைந்தன. ஒரு மனநோயாளிபோல என் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தேன். என் நிலையைப் பார்த்து பெரிதும் மனமுடைந்துபோன என் பெற்றோர்கள் என்னை இந்த ஆசிரமத்தில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தார்கள். இங்கே வந்த பிற்பாடுதான், நான் மெல்ல மெல்ல என் சுய நிலையை அடையத் தொடங்கினேன்.

உண்மையில் இது ஒரு புனிதமான இடம் தான். ஆசிரமம் என்றவுடன் இது ஒரு சாமியார் மடம் என்று நினைத்துவிட வேண்டாம். இது ஒரு உளவியல் பயிற்சிகூடம். இங்கு பல்வேறுபட்ட மக்கள் தங்கள் உளவியல் பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு திருப்தியோடு வெளியேறுகிறார்கள். அந்த சிகிச்சைகளுக்காக பெரும்பாலும் மருந்துகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. சில பயிற்சிகளைத்தான் மேற்கொள்ள வைக்கிறார்கள். அப்படியான சிகிச்சைகள்தான் எனக்கும் தரப்பட்டன. நான் இங்கு அழைத்து வரப்பட்ட முதல் நாள், இந்த ஆசிரமத்தின் தலைமை குரு என்னை வந்து பரிசோதித்தார். அவரே வந்து ஒருவரை பரிசோதிக்கிறார் என்றால், அந்த நோயாளி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம் என பின்னாளில் அவர்கள் சொல்ல அறிந்துகொண்டேன். அவர் என்னைப் பரிசோதித்துவிட்டு ஒரு இருள் சூழ்ந்த விசாலமான அறையின் மத்தியில் தரையில் அமர வைத்தார். எனக்குச் சற்றுத் தொலைவில் ஒரேயொரு அகல் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதனுடைய மிக மிக மெல்லிய ஒளியைத் தவிர அந்த விசாலமான அறையில் வேறு வெளிச்சம் சிறிதளவும் இருக்கவில்லை. அந்த நிசப்தம் சூழ்ந்த இருளே என்னை மிரட்டுவதற்குப் போதுமானதாகவிருந்தது. அந்த சாம்பல் நிறக் கண்கள் இந்த இருளுக்குள்தான் எங்கோ மறைந்திருக்கின்றன என்பது போல மனம் பட படத்துக்கொண்டிருந்தது. ஆனாலும், அந்த குருவானவரின் கம்பீரமான குரலும் மங்களகரமான அகல் விளக்கின் ஒளிக் கீற்றுக்களும் என்னை சற்று சாந்தப்படுத்தின. சில நிமிடங்களின் பின்னர் அவர் சிகிச்சையை ஆரம்பித்தார். அவர் இருளில் எங்கோ என் கண்களுக்குப் புலப்படாதவாறு  மறைந்திருந்தபடி பேசத் தொடங்கினார்.

“மகனே! நீ இங்கு பாதுகாப்பாக இருக்கிறாய். இந்த இடம் என் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இங்கு என்னை மீறி உன்னை யாரும் நெருங்க முடியாது. தைரியமாக இரு.”

“ம்…..”

“நான் அதிகம் பேசி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். உனக்கு முன்னால் ஒரு அழகிய அகல் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. அதன் தீபம் மிகப் புனிதத் தன்மை வாய்ந்தது. நான் நிறுத்தச் சொல்லுகிறவரை நீ அதையே பார்த்துக்கொண்டிரு. அதை பார்த்துக்கொண்டிருக்கிற சமயத்தில் உன் உள்ளத்தில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும் கவலைகளும் தோன்றலாம். எதுவாக இருந்தாலும் அந்த எண்ணங்களை அதன் போக்கிலேயே விட்டுவிடு. உன் மனம் அதன் விருப்பம் போல பயணிக்கட்டும்.”

“ம்….”

“நல்லது”

அதன் பின் அவர் எதுவும் பேசவில்லை. நான் அந்தத் தீபத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அந்தச் சாம்பல் நிறக் கண்கள் மட்டும்தான் மனதில் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தன. தீடீரென்று அங்கு ஒரு துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. அந்த துர்நாற்றத்தை அதற்குமுன் என் வாழ்நாளில் நான் எங்குமே அனுபவித்ததாக நினைவிலில்லை. அது ஒரு மோசமான நாற்றமாக என் நாசிவழியேறி என்னை ஏதோ செய்யத்தொடங்கியது. ஒரு வேளை இதுதான் பிண நாற்றமோ என்று தோன்றியது. பிசாசுகள் வருகிற போது அப்படியான துர்நாற்றங்கள் வீசும் என்று சிறுவயதில் யாரோ சொல்லிக் கேள்விப்பட்டது நினைவில் வந்தது. அப்படியென்றால் அவள் என்னைத் தேடி வந்து விட்டாளா என்று இதயம் படபடக்கத் தொடங்கியபோது, பட்டென்று அந்தத் துர்நாற்றம் விலகிவிட்டது புரிந்தது. மனம் சற்று ஆசுவாசப்பட்டது.

நான் தொடர்ந்து தீபத்தையே பார்த்த வண்ணம் இருக்க, மனம் மெல்ல மெல்ல பாரமாவதுபோல் இருந்தது. பயம் காணாமல் போனதுடன் பெரும் கவலைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன. எனக்கு விக்கி நினைவுக்கு வந்தான். நான் அழத்தொடங்கினேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினேன். எவ்வளவு அழுதாலும் போதாது என்பது போல அழுதுகொண்டே இருந்தேன். எனக்கு இன்னும் இன்னும் நீண்ட நேரம் அழவேண்டும் போல இருந்தது. யாரும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. யாரும் என்னை ஏன் என்று கேட்கவும் இல்லை. நான் எனக்குள் தேங்கிக் கிடந்த கவலைகளையெல்லாம் ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து அழுதேன். உடல் களைத்து தொண்டை வரண்டு நானாக ஓய்கிறவரை அழுதுகொண்டேயிருந்தேன். எவ்வளவு நேரம் அப்படி அழுதேன் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், சில மணித்தியாலங்களாவது அப்படி அழுதிருப்பேன். உடல் சக்தியற்று தரையில் உருண்டு புரண்டு அழுது ஓய்கிற சமயத்தில், என்னை யாரோ இருவர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். அவர்கள் யார் என்பதை நிமிர்ந்து பார்க்கிற சக்திகூட எனக்கு இருக்கவில்லை. ஒரு அமைதியான அறையில் படுக்கையில் படுக்க வைத்தார்கள். நான் அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டேன்.

நீண்ட நெடிய உறக்கத்திற்குப் பின்னர் விழித்துக் கொண்டேன். உடல் அசதியாய் இருந்தது. மனம் சற்று இலேசாகிவிட்டது போல் தோன்றியது. கவலைகளும் பயமும் சற்றுக் குறைந்திருந்தன. நீண்ட நாட்களுக்குப் பின் சிறு உற்சாகத்தை உள்ளத்தில் உணர முடிந்தது. ஒரேயொரு சிகிச்சையில் இத்தனையும் சாத்தியம்தானா என்று வியப்பாக இருந்தது. ஆனாலும், நான் பூரணமாகக் குணமாகிவிட்டதாக குருவானவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சிறிது காலம் இங்கு தங்கியிருந்து சில உடல் உள பயிற்சிகளை கடைப்பிடிக்கும்படி கூறினார். சில யோக ஆசனங்கள் முதற்கொண்டு பல்வேறுபட்ட பயிற்சிகளை அவர்கள் எனக்கு வழங்கினார்கள். என்னைப் போலவே பலர் அவ்வாறான சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டிருந்தார்கள். மூன்று மாதங்களை நான் சிகிச்சைகளுக்காகக் கழித்தேன். நானே விரும்பி அந்தப் பயிற்சிகளையெல்லாம் எடுத்துக்கொண்டதுக்கு முக்கியமாக மற்றுமொரு காரணமும் இருந்தது. அவளின் பெயர் இசையி. பெயரைப்போலவே அவளும் வித்தியாசமானவளும் இனிமையானவளும் தான். அவள் குருவானவரின் ஒரே மகள். ஆசிரமத்தில் குருவானவரைப் போலவே அவளும் செல்வாக்கானவள். குருவானவருக்கு நிகராக அவளும் பலருக்கு சிகிச்சைகள் அளித்துக்கொண்டிருந்தாள். ஆரம்பத்திலேயே நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். அவள் என்னை நோயாளியாக இல்லாமல் நண்பனைப் போலவே நடாத்தினாள். அவளது கனிவும் அன்பும் தான் என்னை அவளிடம் வசீகரிக்கச் செய்தது. அவளின் கண்கள் சாம்பல் நிறக் கண்களாக இல்லாமல் இருந்தது பெரும் ஆறுதலாக இருந்தது.

எங்கள் நட்பு விரைவிலேயே காதலாகவும் மாறியிருந்தது. நான் அப்போது சிகிச்சைகளை பூர்த்தி செய்துகொண்டு வெளியேறுகிற தருணத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஆனபடியால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்கள் காதலை குருவானவரிடம் வெளிப்படுத்தினோம். அவர் அவ்வளவு சீக்கிரத்தில் என்னையும் எங்கள் காதலையும் ஏற்றுக் கொண்டது பெரும் இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருவரின் பெற்றோரது ஆசிர்வாதங்களோடு எங்களுக்கு திருமணம் நடந்தது. இனியென்ன, ஆசிரமமே எனக்குக் கதியென்று ஆகிவிட்டது. எனக்கும் அது தான் பிடித்திருந்தது. மெல்ல மெல்ல சிறிய சிறிய பயிற்சிகளையும், சிகிச்சை முறைகளையும் எனக்கு இசையி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவற்றைக் கொண்டு நானும் நோயாளிகளுக்கு என்னாலான பயிற்சிகளும் சிகிச்சைகளும் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சிகிச்சை முறையிலும் நான் தேறத் தேற அவற்றுக்கு அடுத்தடுத்த கட்டமான சிகிச்சை முறைகளை அவள் எனக்குப் பயிற்றுவித்தாள். அன்றும் அப்படித்தான், புதிய ஒரு சிகிச்சையை கற்றுக் கொடுப்பதாகக் கூறி அவள் என்னை அழைத்துச் சென்றாள்.

அந்த சிகிச்சைக்குப் பெயர் புஷ்பப் பரிகாரம் என்பதாகும். நான் ஆசிரமத்துக்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு முதன் முதலில் வழங்கப்பட்ட சிகிச்சைதான் அது. இசையி என் கையில் பட்டுத் துணியொன்றினால் மூடப்பட்டிருந்த ஒரு கண்ணாடிப் பெட்டியைக் கொடுத்தாள். அந்தத் துணியை அகற்றிப் பார்த்தேன். உள்ளே அழகான சிவப்பு நிற மலரொன்று இருந்தது. அது பார்ப்பதற்கு ஓர் சூரியகாந்தி மலர் அளவுக்கு இருந்தாலும், அதன் இதழ்கள் சற்று விசாலமானவையாக இருந்தன. அதைச் சுட்டிக் காட்டி இசையி பேசத் தொடங்கினாள்.

“இந்தப் பூவோட பேரு மகாமல்லி. ரொம்ப அபூர்வமான மருத்துவப் பூ. பரிகார மண்டபத்துக்குள்ள இப்போ ஒரு பொண்ணு சிகிச்சைக்காகக் காத்துக்கிட்டிருக்கா. நீங்க அவள் பார்க்காத மாதிரி உள்ள போயி, இருட்டுல ஒரு மூலையில இந்தப் பெட்டியை திறந்து வச்சிட்டு வந்துடுங்க. இந்தப் பெட்டியத் திறந்ததும் இந்தப் பூவிலே இருந்து ஒரு துர்நாற்றம் வெளிய வரும். அந்தத் துர்நாற்றத்துக்கு ஒரு மருத்துவ சக்தி இருக்கு. அவள் அந்த துர்நாற்றத்தை தொடர்ச்சியா அஞ்சு நிமிசங்களுக்கு சுவாசிக்கும் போது, கொஞ்ச நேரத்துல அந்தத் துர்நாற்றம் அவளுக்கு ஒரு எதிர் மறையான போதையை கொடுக்கும். அந்த எதிர் மறையான போதை மனசுக்குள்ள புதைஞ்சு கிடக்கிற கவலை, கோபம், பொறாமை, நிறைவேறாத ஆசைகள் மாதிரியான எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி அவளை தொந்தரவு செய்யும். அது கொஞ்ச நேரத்துல அழுகையாக வெளியே வரும். அழுது அழுது தீர்க்கிறப்போ அந்த எதிர்மறை எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமா விலகும்.”

அவள் சொன்னதைக் கேட்டு நான் பிரம்மித்துப்போய் நின்றேன். `இப்படித்தான் எனக்கும் சிகிச்சை கொடுத்தார்களா! இதனால்தான் அன்று நான் அப்படி அழுது தீர்த்தேனா!` என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் அந்த அகல் விளக்கின் ஒளியில்தான் ஏதோ வித்தை இருக்கிறது என்று அத்தனை நாளாய் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் பெரியதொரு புதிருக்கு விடைகிடைத்தது எனக்கு நிறைவாக இருந்தது. அவள் கூறியபடி அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு அந்த இருள் படர்ந்த விசாலமான அறைக்குள் நுழைந்தேன். அங்கே குருவானவர் அந்தப் பெண்ணுக்கு சில ஆலோசனைகள் கொடுத்து சிகிச்சைக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அவர் எனக்குச் சைகை செய்யவும், நான் இருளில் மறைந்தவாறே சென்று, அந்தப் பெண்ணுக்கு சற்று முன்பாக அந்தப் பெட்டியை சத்தம் இல்லாது தரையில் வைத்துவிட்டு, அதைத் திறந்துவிட்டு வெளியேறினேன். இசையி கூறியது போல சரியாக ஐந்து நிமிட இடைவெளியின் பின்னர் அந்தப் பெட்டியை அகற்றுவதற்காக அறைக்குள் மீண்டும் நுழைந்தேன். அந்தப் பெண்ணுக்கு எதிரே சற்றுத் தொலைவில் இருந்த பெட்டியை, இருளிலும் சரியாக அடையாளம் கண்டுகொண்டு, அரவம் இல்லாமல் அதை மூடிய போதுதான் எனக்கு மனதுக்குள் பொறி தட்டியது. பட்டென்று நிமிர்ந்தேன். அப்போதுதான் முதன் முறை அந்தப் பெண்ணின் முகம் மங்கலான ஒளியில் என் கண்களில் பட்டது. அதே சாம்பல் நிறக் கண்கள். அவள் தீபத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் வேகமாக வெளியேறி ஓடினேன்.

இசையி வெளியே நின்றிருந்தாள். அவளின் கையில் என் செல்ஃபோன் இருந்தது. அதை அவசர அவசரமாகப் பறித்து யூடியூப்பைக் கிளறினேன். இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இறுதியாக எங்கள் சேனலில் அப்லோட் செய்த அந்த மலைக்குன்றின் வீடியோவை ப்லே செய்தேன். நான் சந்தேகித்தது சரிதான். அந்த வீடியோவில் விக்கி நின்றிருந்த குன்றுக்கு மிக அருகில் கொத்துக் கொத்தாய் மகாமல்லி மலர்கள் பூத்துக் கிடந்தன. சற்று நேரத்துக்கு முன்னர் எனக்கு இசையி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“இந்தப் பெட்டிய அஞ்சு நிமிசங்களுக்கு திறந்து வையுங்க. அதோட துர்நாற்றம் எதிர் மறை எண்ணங்களைத் தூண்டி அழுகையை வரச் செய்யும். ஆனால். ஒரு விசயத்தை மறந்துடாதீங்க. அஞ்சு நிமிசத்தை விட அதிகமாக அந்த துர்நாற்றத்தை நுகர்ந்தால், எதிர் மறை போதை உச்சத்துக்குப் போயி, அவங்க ரொம்ப ஆக்ரோஷமாகிடுவாங்க. அப்படி நடந்தா அவங்க தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கவோ தற்கொலை செய்துக்கவோ தயங்கமாட்டாங்க!”

முற்றும்


- உங்களுக்கு இந்தச் சிறுகதை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- `சாம்பல் நிறக் கண்கள்` சிறுகதை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.


May 8, 2020














பெரும்பாலான மக்கள் இளம் பராயத்திலேயே தாம் வாழ்வதற்கான காரணத்தை அறிந்து கொள்கிறார்கள். எளிதில் அறிந்து கொள்கின்றமையினால்தானோ என்னவோ, விரைவிலேயே அதனைக் கைவிடவும் செய்கிறார்கள். இருந்தபோதும், ஒரு சிலர் தங்களின் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள். ஆனால், அப்படியான பயணங்கள் அவ்வளவு எளிதானதல்ல. அவை மிக நீண்ட பயணங்களாக இருக்கலாம். ஆபத்துக்களை உள்வாங்கியவையாக இருக்கலாம். இவ்வளவுயேன், அந்தப் பயணங்களுக்காகப் பெரும் விலையைக்கூட கொடுக்க நேரிடலாம். தடைகளைக் கண்டு பின்வாங்காது பெரும் வைராக்கியத்தை மனதுக்குள்ளும், தங்களின் கனவுக்குள்ளும் சுமந்து செல்கிறவர்கள் மாத்திரமே இலக்கை அடைகிறார்கள். அந்த வெற்றி சாமான்யமானதல்ல. அது விபரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. உலக வரலாற்றை நிரப்பிய பல சாதனையாளர்கள் அவ்வாறுதான் தங்களின் வெற்றிச் செய்தியை உலகுக்கு உரக்க அறிவித்தார்கள். அவ்வாறாக ஏதேனுமொரு மகத்தான கனவை நோக்கிப் பயணிப்பவராக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கானதே.


நூல் விமர்சனம்: ரஸவாதி

சந்தியாகு என்பவன் ஸ்பெய்னின் கிராமமொன்றில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இளைஞன். அவனது பெற்றோர் அவன் ஒரு பாதிரியாராக வருவதையே விரும்பினார்கள். அது ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திற்கு மிகப் பெரும் கௌரவமும் கூட. ஆனால், அவனது கனவு அதைவிட மிகப் பெரியது. அவன் வெறுமனே மத உபதேசங்களைச் செய்துகொண்டு ஒரே இடத்தில் தன் வாழ்வைத் தொலைத்துவிட விரும்பவில்லை. மாறாக, அவன் இந்தப் பரந்த உலகத்தை அனுபவிக்க விரும்பினான். வெறும் கதை வழிச் செய்திகளாக மட்டும் அறிந்து கொண்ட தூர தேசங்களுக்கெல்லாம் பயணம் செய்வதற்கும், பல்வேறு புதுமைகளைக் காணவும் அனுபவிக்கவும் விரும்பினான். ஆனால், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்துவிட்ட அவனுக்கு அது அவ்வளவு எளிதானதல்ல. எனினும், தன் கனவுகளுக்கு பணம் ஒரு தடையாக இருக்குமென்று அவன் பின்வாங்கவில்லை. தன் தந்தையின் உதவியோடு சில ஆடுகளை தனக்கென விலைக்கு வாங்கிக்கொண்டான். இனி அவன் ஒரு ஆடு மேய்ப்பவனாக தன் மனம் போன திசைகளெல்லாம் பயணப்பட்டான். ஒரு நல்ல இடையனாக ஆடுகளின் மேய்ச்சல் நிலங்களைத் தேடி மாத்திரம் அவன் பயணம் செய்யவில்லை, தன் கனவுகளின் திசைகளைத் தேடியும்தான் பயணம் செய்தான்.

இவ்வாறு பல இடங்கள் தோறும் பயணித்தவனுக்கு எதிர்பாராவிதமாக எகிப்தின் பிரமிட்டுக்களுக்கருகில் புதையல் இருப்பது தெரியவரவே, அதை நோக்கி தரை வழியாகவே பயணப்பட்டான். மிக நீண்டதும், அபாயகரமானதுமான அந்தப் பயணத்தின் கதையே இந்த ‘ரஸவாதி’ என்ற புதினமாகும். 1987 ஆம் வருடம் பௌலோ கொய்லோ என்பவரால் எழுதப்பட்டு உலகப் புகழ் பெற்ற ‘The Alchemist’ என்ற புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே இதுவாகும். இந்த நூல் மற்றைய சாதாரண நூல்களைப் போல அவ்வளவு எளிதில் கடந்துவிடக் கூடியதல்ல. இதன் வலிமை மிகப் பெரியது. நாம் படிக்கின்ற அனைத்து நூல்களும் எம்மைக் கவர்ந்துவிடுவதோ பாதித்துவிடுவதோ கிடையாது. வெகு சில மாத்திரமே அப்படிச் செய்யக்கூடியவை. அப்படியான நூல்களின் பட்டியலில் ரஸவாதிக்கு மிகமுக்கிய பங்கு இருப்பதற்குக் காரணம், அதன் கதை நெடுங்கிலும் நிறைந்து கிடக்கின்ற ஆழமான தத்துவங்கள் தான். அந்தத் தத்துவங்கள் அந்த இளைஞனை நோக்கிக் கூறப்படுகிறவையாக கதை நெடுங்கிலும் அமைந்திருந்தாலும், அவை வாசகர்களை நோக்கியும் பேசப்படுவதாக மிகத் தத்துரூபமாக கதையுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பவன் எதிர்கொள்ளக்கூடிய தடைகளும் சவால்களும் அந்த இளைஞனின் கதாபாத்திரம் வாயிலாக இந்நூல் வாசகர்களுக்கு உபதேசம் செய்கிறது. பெரும் இலட்சியப் பயணத்தின் இடர்பாடுகளில் எங்கெல்லாம் ஒரு மனிதன் தடுமாறக்கூடும் என்ற உண்மைகளை மிக எளிய வசனநடைகளினூடாக, இந்தப் புதினம் வாசகர்களின் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகச் சென்றடைகிறது. ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் அற்புதமான சக்தியை எப்படி வெளிக்கொணர்வது என்ற கோட்பாட்டின் பிரதிபலிப்பே இந்தக் கதை. கதையில் ஆங்காங்கே தோன்றும் சில மாயாஜாலக் காட்சிகள், யதார்த்தவாதச் சிந்தனையுள்ள வாசகர்களுக்கு சில சமயம் சலிப்பைத் தரலாம். ஆனால், அந்த மாயாஜாலங்களைத் தாண்டி கதைக் கரு கொண்டிருக்கின்ற தத்துவங்கள் மிக ஆழமானவை.

இந்தக் கதையைப் படிக்கின்றபோது ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துகிடக்கும் வாழ்வைப் பற்றிய விடை தெரியாக் கேள்விகளுக்கு நிச்சம் விடைகள் கிடைக்கும். ஆனால், அந்த விடைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவையாக நிச்சயம் அமையாது. கேட்பவர் யார் என்பதைக் கொண்டு விடைகளும் தனித்தன்மையானவையாக இருக்கும். ஏனென்றால், அந்தக் கேள்விகட்கெல்லாம் பதில் சொல்லப்போவது இந்நூல் அல்ல, படிப்பவரின் மனம் தான். ஆம், இத்தனை நாளாய் பேசாது கிடந்த எங்கள் மனங்களை இந்நூல் பேச வைக்கிறது. அது பேச ஆரம்பித்த பின்னர் எங்கள் கேள்வி எதுவாகயிருந்தாலும், எங்கள் மனங்களை நோக்கிக் கேட்க முடிகிறது. மனம் நிச்சயமாக அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் செய்கிறது. ஏன் என்றால், எங்கள் மனதுக்கு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தெரியும். அந்த உண்மையைத் தான் இந்தக் கதையும் உணர்த்துகிறது. 

1987 ஆம் வருடம் ‘The Alchemist’ என்ற இந்நூல் வெளிவந்த போது ஆரம்பத்தில் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆரம்பத்தில் மெல்ல மெல்ல விற்பனையாகத் தொடங்கி ஒரு கட்டத்திற்கப்பால் சடுதியாக விற்பனை அதிகரித்தது மட்டுமல்லாமல், உலகின் அதிக பிரதிகள் விற்றுத் தீர்த்த புத்தகங்களின் பட்டியலில் இணைந்து மகத்தான சாதனையும் படைத்தது. இதுவரை முப்பது மில்லியனுக்கு அதிகமான பிரதிகள் விற்பனையாகியது மட்டுமல்லாமல் உலகின் அறுபத்து இரண்டு மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டுமிருக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் மேற்கத்தேய நாடுகள் பலவற்றின் பள்ளிகளில் பாடப் புத்தகமாகவும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை `ரஸவாதி` என்ற பெயரில் தமிழில் சி.முருகேசன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் எளிமையான மொழிநடைகள் கதையைச் சலிப்பில்லாது நகர்த்திச் செல்கிறது.

கனவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவராக நீங்களும் இருந்தால், இந்நூல் உங்களுக்கு மகத்தான ஒரு பொக்கிஷமாக இருக்குமென்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. உங்கள் இலட்சியப் பயணத்தில் நீங்கள் தற்போது நடந்து செல்பவராகயிருந்தால், இது உங்களை இனி துடிப்புடன் இலக்கை நோக்கி ஓட வைக்கும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருப்பவராகயிருந்தால், காற்றைவிட வேகமாகப் பறக்க வைக்கும். பயணத்தை தொடங்கலாமா வேண்டாமா என்று தயங்குபவர்களை முதல் அடியெடுத்து வைத்து துவக்கி வைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்தை இடைநடுவில் கைவிட்டவர்களை மீண்டும் முன்பைவிட வேட்கையுடன் பயணிக்கவும் வைக்கும்.  இனியென்ன! படித்தவுடன் உங்கள் பயணத்துக்குத் தயாராகிவிடுங்கள்.



- உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.




May 1, 2020














காலம் சில இரத்த சரித்திரங்களை போகிற போக்கில் புதைத்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், உண்மைகள் காலத்தின் பிணக்குழிகளிலிருந்து தாமதமாகவேனும் வெளிவரத்தான் செய்கின்றன. 1964 ஆம் வருடம் வேடமலைக் காடுகளில் நடந்த அந்த நரவேட்டைகள், அவ்வளவு எளிதில் மறக்கப்பட முடியாதவை. சுமார் நாப்பது ஆண்டுகள் கழித்து உண்மை வெளிவந்தபோது, சிங்கநாடு கிராமம் மட்டுமல்ல, முழுத் தேசமும் நடுங்கித்தான் போனது. அன்றைய நாட்களில் இரண்யனுக்கும் அவனது தம்பி இருவேளனுக்குமிடையே பரம்பரை சொத்துத் தகராறு பெரும் குடும்பப் பகையாக மாறியிருந்தது. அண்ணன் தம்பி இருவரும் சொத்துக்காக ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கிற அளவுக்கு வெறிகொண்டிருந்தார்கள். இருவரும் காங்கோச்சடையருக்குப் பிறந்த இரு மகன்கள்தான். ஆனால், தாய் இருவருக்கும் வேறு வேறு. காங்கோச்சடையர் வேடமலைக் காடுகளை அண்டியிருக்கும் சிங்கநாடு என்ற அகன்று விரிந்த ஊரில் மிக முக்கியமானவர். அந்த ஊரில் பாதி நிலம் அவரின் பேரில்தான் இருப்பதாக சிங்கநாட்டு மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். ஊரையே தன் அந்தஸ்த்தின் பாதத்திற்குக் கீழ் வைத்திருந்த காங்கோச்சடையர் இறந்த பின்னர், அவரின் முதல் மனைவியின் மகன் இரண்யனுக்கும், இரண்டாம் மனைவியின் மகன் இருவேளனுக்குமிடையே சொத்துத் தொடர்பில் முரண்பாடு முற்றிவிட்டது.

காங்கோச்சடையர் இறக்கும்போது இருவருக்கும் சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுத்திருந்தாலும், தான் வாழ்ந்த வீட்டை மட்டும் யார்பேரிலும் எழுதாமல் இருவருக்கும் பொதுச் சொத்தாக விட்டுச் சென்றுவிட்டார். இப்போது அந்த வீடு யாருக்குச் சொந்தம் என்பதில்தான் இரண்யனுக்கும் இருவேளனுக்கும் பகை முற்றியிருந்தது. தன் தாய் வாழ்ந்த வீடு என்ற படியால் அது தனக்குத்தான் உரிமையானது என்பது இரண்யனின் வாதம். தானும் தன் தாயும் அங்கு வாழ்ந்ததில்லை என்றபோதும், இருவருக்கும் பொதுவான சொத்தை இரண்யன் சுருட்டிக்கொள்ளப் பார்ப்பதால், அதில் தான் முந்திக்கொள்ள வேண்டும் என்பது இருவேளனின் தந்திரம். ஆக, இது தீராப் பிரச்சனையாக தினம் தினம் வளர்ந்துகொண்டேயிருந்தது.

பெரும் தலைவலியாக மாறிப்போயிருந்த இந்தச் சிக்கலுக்கு இரண்யனிடத்தில் தீர்வு எதுவும் இருக்கவில்லை. இறுதியாக கருமுனியிடமே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்தான். கருமுனி என்பவர் சிங்கநாட்டிலும் அதை அண்டிய ஊர்களிலும் மிகப் பிரபலமான சாமியார். அவரை சாமியார் என்று சொல்வதைக் காட்டிலும், முனி என்றுதான் அதிகம் பேர் அழைத்தார்கள். அந்த ஊர்களிலுள்ள மக்கள் கருமுனிக்கு மிகப்பெரும் ஞான சக்தி இருப்பதாக நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு இரண்யன் மட்டும் விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப்போனால், இரண்யனுக்கு கருமுனிதான் குரு, ஆலோசகர் எல்லாமே. என்ன முக்கியமான காரியமாக இருந்தாலும், என்ன குழப்பமான சூழ்நிலையாக இருந்தாலும் அவன் உடனே கருமுனியிடம் ஓடிப் போய்விடுவான். அதன் பின் அவர் சொல்வதுதான் அவனுக்கு வேத வாக்கு.

பெருங்குழப்பத்தோடு கருமுனியின் குடிசை ஆசிரமத்தை அவன் சென்றடைந்த போது, அவர் அவனுக்காகவே காத்திருப்பது போல சிறு புன்னகையோடு ஆசிரமத்தின் மையத்தில் சம்மாளம் கோலி அமர்ந்திருந்தார். அவரின் புன்னகையை புரிந்துகொள்ள முயன்ற அவன், தான் வரப்போகும் தகவலை யாராவது முன்பே இவருக்குச் சொல்லியிருப்பார்களோ என்று சிந்தித்தான். இல்லை இல்லை, இது அவரின் தீர்க்கதரிசனமாகக்கூட இருக்கலாமல்லவா என்று, அவன் தன்னைத் தானே சமாதானமும் செய்துகொண்டான். அவருக்கு முன்னால் பவ்வியமாக அமர்ந்துகொண்டு தன் பிரச்சனையைக் கூறிவிட்டு அவரின் பதிலுக்காகக் காத்திருந்தான். முழுவதையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு சிறு புன்னகையோடு கண்களை மூடிய கருமுனி, சில நிமிடங்கள் கழித்து கம்பீரமான குரலில் கண்களைத் திறக்காமலேயே பேசத் தொடங்கினார்.

“இரண்யா! நீ யாசகம் கேட்டு வந்திருப்பது வெறும் வீட்டையல்ல, ராஜயோகத்தை.”

“புரியல்லையே சாமி.”

“ம்… உனக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லைதான். சொல்கிறேன் கேள். உனக்கு மிகப் பெரும் ராஜயோகம் காத்திருக்கிறது. உனக்கு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது. ஆனால், இத்தனையும் நடக்கவேண்டுமாகயிருந்தால், உன் அப்பன் வாழ்ந்த வீடு உன்னுடையதாக இருக்கவேண்டும். அது உனக்கு உடமையானால் மாத்திரம்தான், உனக்கு ராஜயோகமும், போகமும் தேடி வரும். ஆக அந்த வீடு தான் ராஜயோகத்துக்கான சாவி.”

“அது நடக்கணும்னா, நான் என்ன பண்ணணும் சாமி?”

“நீ ராஜாவாகவேண்டுமாகயிருந்தால், நீ இன்னுமொரு ராஜாவைப் பலியெடுக்க வேண்டும்.”

“ராஜாவையா? யாரை சாமி?”

“ராஜவாகன்.”

“ராஜவாகனையா?” என்று இரண்யன் வாய் பிழந்தான்.

ராஜவாகன் என்று கருமுனி சொன்னது வேடமலைக் காடுகளில் மட்டுமே வாழும் ஒரு அரிய வகைக் கழுகுகளைத்தான். அவற்றின் இறக்கைகள் இருபுறமும் விரிந்த நிலையில் ஆறு அடிகள் இருக்கும், அவற்றின் உயரம் மூன்று அடிகளுக்குக் குறையாமல் இருக்கும். சிங்கநாட்டை அண்டிய பகுதிகளில் ராஜவாகன்கள் என்பது கழுகு இனப் பறவைகளுக்கே ராஜாவாக மக்களால் கருதப்பட்டது. இதைவிட சிறப்பம்சம் என்னவென்றால், வேடமலைக் காடுகளில் வாழ்ந்து பெரும்பாலும் அழிந்துபோன, நீறிகள் என்ற வேட்டுவ இன மக்கள், ராஜவாகன்களைத் தங்களின் கடவுள்களாக வணங்கினார்கள். ராஜவாகன்கள் பார்ப்பதற்கே கம்பீரமாகவும், பார்ப்பவரை பயங்கொள்ளச் செய்யும் தோரணையும் கொண்ட இராட்சசப் பறவைகள். அதன் பெயரை கருமுனி சொன்னதும், இரண்யனுக்கு பெரும் வியப்பாகவும் பதற்றமாகவும்தான் இருந்தது.

கருமுனி தொடர்ந்தார்;

“ஆம்! ராஜவாகனேதான். அதன் ராஜலக்கினத்தால் மட்டுமே உன்னை ராஜாவாக்க முடியும். ஒரு ராஜவாகனைப் பலியெடுத்து அதன் தலையை உன் அப்பன் வாழ்ந்த வீட்டின் முற்றத்தில் புதைத்து வை. அந்த வீடு சீக்கிரத்தில் உன்னை வந்து சேரும்.”

“ஆகட்டும் சாமி.”

“ஆனால் ஒரு நிபந்தனை. நீ ராஜவாகனை வேட்டையாடப்போவதோ, அதன் மூலம் ராஜாவாகப்போவதோ உன்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியக் கூடாது. மீறினால், அனைத்தும் கைமீறிப் போகலாம்.”

“ஆகட்டும் சாமி.”

கருமுனி இப்படி தெய்வ வாக்குச் சொன்னதும், இரண்யனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த நாளே தன் குலதெய்வத்தை வணங்கிவிட்டு, தன் வேட்டைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கிழம்பிவிட்டான். அவன் துப்பாக்கியோடு காட்டுக்கு வேட்டைக்குச் செல்வது வழமையான ஒன்றுதான் என்றபடியால், அவனுக்கு அதிக சிரமங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், ராஜவாகனை வேட்டையாடுவது மற்ற மிருகங்களை வேட்டையாடுவதனைப்போல அவ்வளவு எளிதல்ல. அதன் கூர்மையான கண்கள் காட்டை எந்நேரமும் அளந்துகொண்டேதானிருக்கும். அதன் கண்களில் படாது, அதற்கே குறி வைத்தாக வேண்டும். ராஜவாகன்கள் வானத்தில் வட்டமிடுவதை மட்டும்தான் அவன் பல முறை பார்த்திருக்கிறான். வானத்தில் வட்டமிடும் போது நிச்சயமாக அதைச் சுட முடியாது. எனவே அது எங்காவது ஓய்வெடுக்கும் போது தான் சுட வேண்டும். ஆனால், அவை எங்கு ஓய்வெடுக்கும் என்ற விபரம் இரண்யனுக்குத் தெரியாது. அந்தத் தகவல்கள் தெரிந்திருக்கக்கூடியவன் உவக்கி ஒருவன் மட்டும் தான். ஆகையினால், அவன் உவக்கியின் குடிசையை அடைந்தான்.

உவக்கி எலும்பும் தோலுமான ஒரு பரிதாபகரமான தோற்றம் கொண்டவன். வயது நாப்பதுக்கு சற்றுக் குறைவாக இருக்கலாம். கிராமத்திற்கும் காட்டிற்குமான எல்லையில் சிறு குடிசையமைத்து தன்னந்தனியாக தன் சீவியத்தைக் கடத்திக்கொண்டிருந்தான். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவனான அவன், நீறிகள் இனத்தைச் சேர்ந்தவன். நீறிகள் என்பவர்கள் வேடமலைக் காடுகளில் விலங்குகளை வேட்டையாடியும், அவற்றைக் காட்டை அண்டிய கிராமங்களுக்குக் கொண்டு சென்று பண்டமாற்றுச் செய்தும் வந்த மிகச் சிறிய வேட்டுவ இனக்கூட்டம். மிகவும் தொன்மையான பழங்குடியினரான அவர்கள், ராஜவாகன்களை தங்களின் கடவுளாக வழிபட்டார்கள். ஒரு நாள் பொழுதுசாயும் வேளையில், வேடமலைக் காட்டில் நீறிகள் வசித்த பகுதியைச் சூழ திடீரென்று தீ பரவியது. அந்தத் தீயில் உவக்கியைத் தவிர நீறிகள் இனம் வேரோடு எரிந்து அழிந்து போனது. அந்த சம்பவம் நிகழ்ந்த வேளை, பதின்ம வயதுச் சிறுவனாகயிருந்த உவக்கி, காட்டுத் தேன் விற்க கிராமத்திற்குள் வந்திருந்தான். அவன் காடு திரும்புவதற்கு முன் அவனின் இனமே எரிந்து அழிந்து போனது. அதிஷ்டவசமாக அவன் ஒருவன் மாத்திரம் உயிர் பிழைத்தான். ஆனால், அது துரதிஷ்டவசமானதும் தான்.

அந்தக் கொடுந்தீயை நேரில் பார்த்த சிலர், நீறிகள் கடவுளாக வணங்கிய ராஜவாகன்கள்தான் தீப்பொறிகளை எங்கிருந்தோ சுமந்துவந்து, நீறிகளின் குடியிருப்புக்களைச் சூழ வீசி, தீ மூட்டியதாகக் கூறினார்கள். ராஜவாகன்களை ஏதோ காரணத்தால் நீறிகள் வஞ்சித்துவிட்டதாகவும், அதற்குப்  பழிவாங்க, அவை நீறி இனத்தையே கொன்றொழித்ததாகவும் ஊர்களில் மக்கள் பேசிக் கொண்டார்கள். இதில் எது உண்மை, எது கட்டுக்கதை என்று தெளிவில்லாவிட்டாலும், ராஜவாகன்கள் வஞ்சம் தீர்க்கும் கொடிய இராட்சசப் பறவைகள் என்ற எண்ணம் மட்டும் பலர் மத்தியில் இருக்கத்தான் செய்தது. பொதுவான மக்கள் மத்தியிலேயே இப்படியொரு அச்சம் இருக்கும் போது, உவக்கியின் நிலையோ இன்னும் கவலைக்கிடமானது. தனது மூதாதையர்களையே வேரோடு கொன்றழித்த ராஜவாகன்கள், நீறி இனத்தில் தான் ஒருவன் மட்டும் உயிர் தப்பியதை அறிந்துவிட்டால் அவை தன்னையும் விட்டுவைக்காது என்று அஞ்சிக்கொண்டே வாழ்வைக் கடத்திக்கொண்டிருந்தான். பெரும்பாலும் அவன் ராஜவாகன்களின் கண்களில்படுவதைத் தவிர்த்தே வந்தான். தன் மூதாதையர்கள் போல, காடுதான் தனக்கும் வாழ்வாதாரம் என்றிருந்தபோதும், காட்டில் எங்காவது ராஜவாகன்களைக் காண நேர்ந்தாலோ, அவை வானத்தில் வட்டமிடுவதைக் கண்டாலோ பதறியடித்து ஓடிச் சென்று மறைவுகளில் ஒளிந்துகொள்வான். அவை அந்த இடத்தைவிட்டு அகல்கிற வரை, அவன் அவ்விடத்தை விட்டு அசைய மாட்டான்.  இதனால் ராஜவாகன்கள் காட்டில் எங்கு தங்கும், எங்கு ஓய்வெடுக்கும் எங்கிருந்து முழுக்காட்டையும் நோட்டமிடும் என்ற விபரங்கள் முழுக்க அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனபடியினால்தான், இரண்யன் உவக்கியின் குடிசையைத் தேடிச் சென்றான்.

“டே... உவக்கி, உன்னையத்தான் தேடி வந்தேன்.”

“வாருங்கோ ஐயாவே! வாருங்கோ!”

“டே உவக்கி, எனக்கு உங்கிட்ட ஒரு சேதி தெரிஞ்சிக்கணுமே.”

“கேளுங்கோ ஐயாவே, எனக்குத் தெரிஞ்ச சேதியின்னா, மறைக்காமச் சொல்லிப்புடுவேன்.”

“ராஜவாகன் காட்டுக்குள்ள எங்க இளைப்பாறும்னு உனக்குத் தெரியுமில்லே. அது எங்கேன்னு எனக்குச் சொல்லு.”

இரண்யன் ராஜவாகன் என்று சொன்னதுதான் தாமதம், உவக்கிக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டத் தொடங்கிவிட்டது.

“டே! ஏன் இப்படிப் பயப்படுறே.”

“ஐயோ எனக்கு அந்தப் பேரைக் கேட்டாலே நெஞ்சு வெடிச்சுப் போகும் ஐயாவே. எதுக்காகக் கேக்குறீயன்னும் புரியல்லையே ஐயாவே?”

“டே பயப்படாதே. ராஜவாகன்களுக்கு நம்ம ஊர் மேல ஏதோ கோபம் இருக்குறதா பெரியவங்க பேசிக்கிறாங்க. ஆதனாலதான் பிராயச்சித்தமா அதுங்களுக்குப் புடிச்ச மாமிசங்களை வேட்டையாடி படையலொன்னு போடலாமுன்னு தீர்மானிச்சிருக்கோம். அதுகளோட கோவம் தணிஞ்சிதுன்னா நீ கூட தைரியமா நடமாடலாமில்லே.”

“உண்மைதான் ஐயாவே. அவயலோட கோபம் தணியிற வரைக்கும் எனக்கு விமோசனமே கிடையாது ஐயாவே.”

“ம்… அதனாலதான் கேக்கிறேன். எங்கேன்னு சொல்லு.”

உவக்கி சொன்ன திசையில் வெகுதூரம் காட்டில் நடந்து சென்ற இரண்யன், பளிங்குப் பாறையின் அடிவாரத்தை அடைந்தான். பளிங்குப் பாறைதான் ராஜவாகன்கள் இளைப்பாறுகிற இடம் என்பது, அங்கு கிடந்த அவற்றின் எச்சங்களினாலும், அவை உண்டு வீசிய மாமிச எலும்புத் துண்டுகளாலும் தெளிவாக நிரூபணமாகியது. இளைப்பாறுவதற்கு மட்டுமல்லாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டு காட்டை மொத்தமாக நோட்டம் விடுவதற்கும் ராஜவாகன்களுக்கு இந்தப் பாறைதான் பொருத்தமான இடமாக இருக்க முடியும் என்று அவன் எண்ணிக்கொண்டான். பாறையின் பக்கவாட்டிலிருந்த புதர்களுக்குள் தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு, ஏதேனுமொரு ராஜவாகனுக்காகக் காத்திருந்தான். ஆனால், அவன் பொறுமையை சோதிக்குமளவுக்கு வெகு நேரத்திற்குக் காத்துக் கிடக்கவேண்டியிருந்தது. பொறுமையிழந்து போய்விடலாமா என்று அவநம்பிக்கை எழுந்தபோது, பட படவென்று பலமாக இறக்கைகளை அடித்துக்கொண்டு கம்பீரமாக ஒரு ராஜவாகன் பாறையின் முனையில் வந்தமர்ந்தது. முதன் முறை இவ்வளவு அருகில் ராஜவாகனைப் பார்த்த இரண்யனுக்கு மயிர்க்கூச்செறிந்தது. ராஜவாகனின் சூரத் தோற்றம் அடிமனதில் சற்றுக் கிலி கொள்ள வைத்தது. ஆனாலும், அவனின் புத்தி தடுமாறவில்லை. துப்பாக்கியை தன் இலக்கிற்குக் குறிபார்க்கத் தொடங்கினான். ராஜவாகன் சற்று அயர்ந்து அதன் அலகை மலைப்பாறையில் உரசிக்கொண்டிருந்த சமயம் பார்த்து துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தினான். தோட்டாவொன்று பாய்ந்து சென்று அதன் நெஞ்சைப் பதம்பார்க்க, அது அடித் தொண்டையில் அலறியபடி சாய்ந்து விழுந்து இறந்தது. தன் வேட்டைத் திறனில் எப்போதும் கர்வம் கொண்டிருந்த இரண்யன் கம்பீரமாக நடந்து சென்று, தன் வேட்டைக் கத்தியால் அதன் தலையைக் கொய்தெடுத்துக்கொண்டு வெற்றி உறுமலுடன் வீட்டை நோக்கி நடந்தான். இதையெல்லாம் பார்த்தவாறு மற்றோர் ராஜவாகன் மேகங்களுக்குக் கீழாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

கருமுனி சொன்னது போல ராஜவாகனின் தலையை முற்றத்தில் புதைத்து நான்காவது நாள், இருவேளனிடமிருந்து இரண்யனுக்குச் சேதி வந்தது, அந்த வீட்டை நீயே வைத்துக்கொள் என்று. இரண்யன் மெய் சிலிர்த்துப்போனான். ராஜவாகனுக்கு இப்படியொரு சக்தியிருக்கிறதா என்று பிரம்மித்து நின்றான். ஆனால், அதன் பின்னர்தான் அவனுக்குக் கெட்ட நேரம் ஆரம்பமாகியது. வீடு கைக்கு வந்த மகிழ்ச்சியில், குடியும் கூத்துமாக பொழுதைக் கழித்த இரண்யன் குடிபோதையில் தான் ராஜவாகனை வேட்டையாடிய கதையை உளறிவிட, அந்தச் செய்தி ஊர் முழுக்கப் பரவி கிலி கொள்ள வைத்தது. ராஜவாகன்கள் மற்றப் பறவைகள் போல சாதாரணமானவையல்ல, அவை வஞ்சம் தீர்க்கக்கூடியவையென்று வெகுவாக நம்பியிருந்த ஊர் மக்களுக்கு, இரண்யன் இப்படி ராஜவாகனையே வேட்டையாடிய கதை தெரியவரவே, நீறிகளுக்கு ஏற்பட்ட நிலையே தங்களுக்கும் நிகழ்ந்துவிடப்போகிறது என்று மிரண்டுபோனார்கள். வானத்தில் ராஜவாகனைக் காண்கிறபோதெல்லாம் வீடுகளுக்குள் ஓடி ஒழிந்துகொண்டார்கள். இன்னும் சிலர் கையெடுத்து அதைக் கும்பிட்டுக் கொண்டார்கள். கிராமமே இப்படி அஞ்சிக் கொண்டிருந்தபோது, இரண்யனுக்கு மட்டும் புத்தி வேறு விதமாக வேலை செய்தது.

ராஜவாகனில் மிகப் பெரும் அதிஷ்ட சக்தி இருப்பதாக நம்பிய இரண்யன், இன்னுமொரு முறை அதைப் பரீட்சித்துப் பார்த்தால் என்ன என்று சிந்தித்தான். ஒரு முறை வெற்றியைச் சுவைத்த அவனுக்கு தயக்கம் சிறிதும் இருக்கவில்லை. தீர்மானித்தது போலவே, இன்னுமொரு ராஜவாகனை வேட்டையாடுவதற்காகத் துப்பாக்கியுடன் காட்டுக்குக் கிழம்பினான். ஆனால், வேட்டைக்குச் சென்றவன் அதன் பின்னர் வீடு திரும்பவேயில்லை. பலரும் சந்தேகித்ததுபோல, வேட்டைக்குச் சென்று மூன்றாம் நாள், அவனது பிணம் பளிங்குப் பாறைக்கு அருகில் கிடந்ததனை அவனைத் தேடிச் சென்றவர்கள் கண்டுபிடித்தார்கள். அவனின் உடலில் தலை இருக்கவில்லை. உடம்பு முழுவதும் ராஜவாகனின் அலகுகள் பதிந்த தடம் இருந்தது. அவைகள் உண்டது போக சிதைந்த மீதிப் பிணமே அவர்களுக்குக் கிடைத்தது. ராஜவாகன் வஞ்சம் தீர்த்த கதை ஊர் முழுக்கப் பரவி, மிச்சம் மீதியிருந்த நிம்மதியையும் மக்களிடையே இழக்கச் செய்தது.

இந்தச் சம்பவங்களும் நம்பிக்கைகளும் இருவேளனைப் பிரம்மிக்க வைத்தது. தான் அந்த வீட்டை வேண்டாம் என்றதற்கு, ஒரு வேளை ராஜவாகனின் சக்திதான் காரணமாகவிருக்குமோ என்று ஐயம் கொள்ளத் தொடங்கினான். அவன் அந்த வீட்டை வேண்டாம் என்றதற்கு நேரடியான காரணம் அவனின் தாயார்தான்.  அந்த வீடு தனக்கு அதிஷ்டம் இல்லாதது என்று கருதி, அவள் அதை விட்டுவிடும்படி கூறியதனாலேயேதான், அவன் அவ்வாறு செய்தான். ஆனால், ராஜவாகனின் சக்தியால்தான் அவனின் தாயாருக்கு அப்படியொரு சிந்தனை திடீரென்று தோன்றியிருக்குமோயென்று அவனுக்குத் தோன்றியது. அது மட்டும் உண்மையாக இருந்தால், தான் ஒரு சக்கரவர்த்தி போல வாழலாம் என்று கனவுகண்டான். இரண்யனால் ஓர் ராஜவாகனை வேட்டையாட முடியுமென்றால் தன்னால் ஏன் முடியாது என்று சிந்தித்தவன், பளிங்குப் பாறைக்கு அருகே துப்பாக்கியுடன் வெறிகொண்டு காத்திருந்தான்.

சில நாளிகைகள் காத்திருப்பின் பின்னர், ஒரு மகாராஜாவுக்கான வீர தோரணையோடு காற்றைக் கிழத்துக்கொண்டு ஒரு ராஜவாகன் பாறையின் மீது வந்தமர்ந்தது.  அது அங்கு அமர்ந்திருந்தவாறே கூரிய விழிகளால் தன் பார்வையை காடுகளுக்குள் வீசி இரை தேடிக்கொண்டிருந்தது. அதன் கண்களில் கொடும் பசியும் கொலை வெறியும் மின்னிக் கொண்டிருந்தன. அதன் நீண்ட அமைதியானது எப்பேற்பட்ட இராட்சச இரையையும் ஒரே அடியில் வீழ்த்தும் மனவலிமையை அதற்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஏதேனுமொரு இரையின் சிறு அசைவுக்காக அது காத்துக்கொண்டிருந்தது. அதன் கால்கள் எப்போது வேண்டுமானாலும் பறப்பதற்குத் தயாராகவிருந்தன. அதை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்த இருவேளன், மறைந்திருந்தவாறே அரவம் இல்லாமல், துப்பாக்கியை ராஜவாகனின் கழுத்துக்குக் குறிவைத்தான். இன்னும் சில நொடிகளில் தோட்டாவைப் பாயவைக்கத் தயாராகவிருந்தான். அவனுக்கு அதன் கழுத்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவன் ட்ரிகரை அழுத்தத் தயாரானான். மறுகணம் கழுத்திலிருந்து இரத்தம் பீறிக்கொண்டு பாய்ந்தது. ஓ…வென்று கத்திக்கொண்டே இருவேளன் சுருண்டு விழுந்தான். அவனது கழுத்தில் வேலினைப் பாய்ச்சியவாறு கோரத் தோற்றத்தோடு உவக்கி நின்றிருந்தான். இருவேளனின் கழுத்திலிருந்து பீறிட்டுப் பாய்ந்த குருதி உவக்கியின் முகமெங்கும் தெறித்து, சூரசம்ஹாரம் செய்த காளியைப்போல அவன் நின்றிருந்தான். இருவேளன் சுருண்டு விழுந்து இறக்கும்வரை தன் கண்களை அகல விரித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த உவக்கி, காடே அதிரும்படி கர்ஜித்தான். பின்னர், அண்ணனைப் போலல்லாமல், இவன் அதிகம் துடிக்காமலேயே செத்துவிட்டானே என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு, ராஜவாகன்களை வஞ்சிக்க நினைப்பவர் எவராயிருந்தாலும் அவர்கள் நரவேட்டையாடப்பட வேண்டியவர்களே, அது இரண்ய இளவேளனாகயிருந்தாலென்ன, நீறிகளாகயிருந்தாலென்ன என்று எண்ணியவாறே மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தான். அவனது நெஞ்சுக்குள் பெரும் காட்டுத் தீயொன்று எரிந்துகொண்டிருந்தது.


முற்றும்.

- உங்களுக்கு இந்தச் சிறுகதை பிடித்திருந்தால், `Share` செய்யுங்கள்.

- `நரவேட்டை` சிறுகதை தொடர்பான உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.





.