December 31, 2017


கடந்த வாரத் தொடர்ச்சி……

அந்தக் கடையை அடைவதற்குக் குறைந்த பட்சம் பத்து அடிகள் தூரம் இருக்கின்ற போது, பலமாக வீசிக் கொண்டிருந்த காற்று அந்தக் கடையின் கூரைத் தகரத்தில் ஒன்றைக் கழற்றி வீசியெறிந்தது. கூரையிலிருந்து கழன்று காற்றில் பறந்த அந்தத் தகரம், நாங்கள் ஆரம்பத்தில் நின்று கொண்டு இளைப்பாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த இடத்தில் விழுந்து, தரையில் குத்தித் தெறித்து மீண்டும் கீழே பறந்து சென்றது. எங்களுக்கு அதைப் பார்த்ததும் ஒரு கணம் உயிர் போய் உயிர் வந்தது. நாங்கள் அங்கு நின்று இளைப்பாறியிருந்தால், எங்களில் எத்தனை பேருக்குத் தலை உடம்பில் இருந்திருக்கும் என்பதை இப்போதும் என்னால் உறுதியாகக் கூற முடியாமலிருக்கிறது.

அந்த நம்ப முடியாக் காட்சியைக் கண்களால் பார்த்த எங்களுக்கு, நாங்கள் எந்தளவு ஆபத்தான பயணத்தில் இருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்தது. அந்தக் கொடூர விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய எங்களுக்கு, கடவுளுக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு சிந்தனை ஏது இருக்க முடியும். கடவுள்தான் எங்களைக் காப்பாற்றினார் என்பதை மாறி மாறி வாய்விட்டும் சொல்லிக் கொண்டோம். இப்படி ஆபத்து நெருங்க நெருங்க நாங்களும் விரைவாக மலையை ஏறியாக வேண்டிய தேவைக்கு உள்ளானோம். அந்தத் தகரம் போல அடிக்கடி தகரங்கள் பறக்கின்ற சத்தத்தை மலையேறுகின்ற போது பல சந்தர்ப்பங்களில் எங்களால் கேட்க முடிந்தது. அப்படிச் சத்தம் கேட்கிற போதெல்லாம் தலையைக் குனிந்துகொண்டு வேகமாக ஓடவேண்டியிருந்தது. அந்த நேரத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு சிந்தனை எதுவுமிருக்கவில்லை. இதில் ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னவென்றால், அதுவரைக்கும் மலைப் படிகளை ஏற முடியாமல் திணறிக்கொண்டிருந்த அந்த நண்பன் அந்த விபத்தைக் கண்களால் கண்ட பின்னர், அவனையே அறியாது களைப்பை மறந்துவிட்டு எங்களோடு சேர்ந்து வேகமாக ஓடி மலையேறத் தொடங்கியதுதான். உயிர்ப் பயம் அவனுக்கு இனம்புரியாத சக்தியைக் கொடுத்திருந்தது.

அந்த இடத்திலிருந்து ஏறத் தொடங்கி கிட்டத்தட்ட அரை மணித்தியாலங்களின் பின்னர், எங்கள் அனைவருக்குமே கடுமையாக மூச்சுவாங்கவும், களைக்கத் தொடங்கியும் விட்டது. அப்போது தான் நாங்கள் வேகமாக ஓடி வந்திருக்கிறோம் என்ற உண்மை புரிந்தது. ஆகையினால், எங்கள் எல்லோருக்குமே சிறு ஓய்வு தேவையாய் இருந்தது. அந்த மலைப் பாதையில் இருந்த ஒரு தேனீர்க் கடையில் ஒதுங்கினோம். அங்கு எங்களைப் போல சில யாத்திரிகள் தேனீர் அருந்திக்கொண்டும், தாங்க இயலாத களைப்பிற்கு ஓய்வெடுத்துக்கொண்டுமிருந்தனர். நாங்களும் தேனீரை வாங்கி அருந்திக்கொண்டே, அந்த உயிர் நடுங்கும் குளிரிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் என் கால் பாதத்தைப் பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. என் வலது காலின் பாதத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஆனால் எனக்கு அந்த இடத்தில் வலி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நிச்சயமாக அது அட்டை கடித்ததனால் ஏற்பட்ட காயம் தான் என்பது புரிந்தது. உடனே மற்றக் காலையும் சோதனையிட்டுப் பார்த்த போதுதான் அங்கும் இரண்டு இடங்களில் இரத்தம் கசிந்துகொண்டிருப்பது புரிந்தது. அட்டை இரத்தத்தை உறிஞ்சிவிட்டு அதுவாகவே கழன்று விழுந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிந்தது. அது ஆபத்தில்லை என்று தெரிந்திருந்தாலும், இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது என்று எண்ணும் போது அது ஒரு வகை அசௌகரியமாகவேயிருந்தது. என்னைப் போல இன்னுமொரு நண்பனுக்கும் காலில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.

பத்து நிமிடமளவில் அந்தக் கடையில் இளைப்பாறிவிட்டு, மீண்டும் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். அந்த அடைமழை புகை மண்டலம் போல் பாதையை மறைத்து விட்டிருந்தது. மிகவும் அவதானமாக ஒவ்வொரு படியாக ஏறவேண்டியிருந்தது. அப்போது பாதை நெடுங்கிலும் மலையேறும் யாத்திரிகள் பலரை எங்களால் பார்க்க முடிந்தது. அவர்களில் பலர் வயோதிபர்களாக இருந்ததுதான் எங்களுக்கு வியப்பிலும் வியப்பாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் சிங்களவர்களாகவேதான் இருந்தார்கள். அந்த மழையிலும், குளிரிலும் அப்படியொரு ஆபத்தான மலையை அந்த வயோதிபர்கள் ஏறிக்கொண்டிருப்பது வார்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், அவர்களில் ஒரு பரஸ்பர இணக்கப்பாட்டை அங்கு பார்க்க முடிந்தது. மலையேறிக் கொண்டிருக்கும் வயோதிபர்களுக்கு மலையேறும் பலர் பரஸ்பரம் உதவி செய்வதும், கடினமான படிகளில் ஏறும்போது அவர்களைத் தூக்கி விட்டு ஏற்றிவிடுவதுமாகவிருந்தனர். ஆனால், அப்படியானவர்களில் பலர் அந்த வயோதிபர்களுக்கு முன் பின் தெரியாதவர்கள்தான். உதவி செய்ய வேண்டும் என்கிற ஓரே நோக்கத்துக்காக அவர்கள் அதைச் செய்து கொண்டிருந்தனர்.

அந்த மோசமான அடை மழையோடும், பேய்க் காற்றோடும், கண்களைக் கட்டிவிட்ட இருளோடும், பேரிரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்த பாய்ந்தோடும் பள்ளத்தாக்கு அருவிகளின் உயிரை மிரட்டும் சத்தத்தோடும் எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. சிறிது தூரம் சென்ற பின்னர் எங்களுக்காகத் தான் காத்திருப்பது போல ஒரு ஆபத்து மலைப் படி ஓரத்தில் நின்றிருந்தது. பாதையின் ஓரத்தில் ஒரு நீண்டு வளர்ந்திருந்த மரம் பாதைக்குக் குறுக்காகச் சரிந்து விழுவதற்குத் தயாராகவிருந்தது. அடிக்கின்ற பேய்க் காற்றில் அது அசைந்து அசைந்து எங்களைத் திரும்பிப் போகச் சொல்லிப் பாசாங்கு செய்வது போல் நின்று கொண்டிருந்தது. வருகிற வழி முழுக்கப் பல ஆபத்துக்களையும் விபத்துக்களையும் கடந்து வந்திருந்த எங்களுக்கு மனதில் ஒரு இனம்புரியாத தைரியமும், அந்த ஆபத்தான பயணத்தில் ஒரு அளவு கடந்த சுவாரசியமும் மனதில் குடிகொண்டுவிட்டது. ஆகையால், அந்த மரத்தையும் அதன் நிலையையும் பார்த்துச் சில நொடிகளிலேயே, என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். அந்த மரத்திற்குச் சற்று அருகில் வந்து, அது உடனே விழுவதற்கான அறிகுறி தெரிகிறதா என்று எங்கள் கண்களாலேயே எடை போட்டோம். எங்கள் கணிப்பின் பிரகாரம், நாங்கள் அதைக் கடந்து செல்லும் காட்டிலும் அது விழுந்து விடாது என்று ஊகித்துக் கொண்டோம். எனவே, அதற்கு மேல் நேரத்தை வீணாக்க விரும்பாமல், ஓரேயோட்டமாக ஓடிப் படிகளில் ஏறி அந்த மரத்திற்குக் கீழாக அதைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயம் மெல்ல மெல்ல உருமாறி சுவாரசியமாகி விட்டதாக எங்களுக்குத் தோன்றியது.

நாங்கள் கடந்து வந்த அபாயங்களால் முற்றிலும் சுவாரசியமாகிப்போன அந்தப் பயணம், எங்களைப் பயத்தை விலக்கி ஆர்வத்தோடு மலையை ஏறச் செய்தது. இன்னும் ஏதாவது ஆபத்துக்கள் வருமா, அதை எப்படிச் சுவாரசியமாகக் கடந்து செல்வது என்று அரட்டையடித்துக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தோம். இதற்கிடையில் ஆங்காங்கே நண்பர்களில் இரண்டு பேர், மலைப் பாதைக் கடைகளில் மலைச் சுருட்டுக்கள் வாங்கி புகை விட்டபடியே வந்துகொண்டிருந்தார்கள். அது மழையில் நனைவதும் எரிவதுமாக புகைந்து கொண்டிருந்தது. மலைச் சுருட்டுக்கள் அண்ணளவாக ஐந்து அங்குலம் நீளம் வரையில் இருக்கும். அதை சாதாரணமாக அங்குள்ள அனைத்து மலைப் பாதைக் கடைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். அது அங்கு குளிரிலிருந்து உடம்பை பாதுகாத்துக் கொள்வதற்கான மருந்தாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர, போதைப் பொருளாக இல்லை.

நாங்கள் தொடர்ந்து நடந்துகொண்டும், ஏறிக்கொண்டும் இருந்தோம். அந்தப் பாதையில் ஒரு வளைவான இடத்தைக் கடந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு தேனீர்க் கடை ஒன்றில் பலர் களைப்பிற்கு ஒதுங்கியிருப்பதைப் பார்க முடிந்தது. மலை ஏறிக்கொண்டிருப்பவர்களும், அங்கிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர்களும் அவர்களில் இருப்பார்கள் என்பது எங்கள் ஊகம். நாங்கள் அந்தக் கடையைப் பார்த்த வாறே அதைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்தக் கடைக்குள் இருந்தவர்களில் ஒரு வயதான பெண் ஒருத்தர் ஏதோ சொல்லி எங்களை அழைத்தார். அவர் எங்களைத்தான் அழைக்கிறார் என்பதை இரண்டு முறை உறுதிப்படுத்திக் கொண்டு அந்தக் கடையருகில் சென்றோம். அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த வயதான சிங்களப் பெண், நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இன்னுமொரு வயதான பாட்டியைக் காட்டி அவரை மேலே மலைக்குக் கூட்டிச் செல்ல உதவுமாறு எங்களைக் கேட்டார். அந்தப் பாட்டிக்கு குறைந்தது அறுபது வயது இருக்கும் என்பதை அவரது தள்ளாடும் தோற்றத்திலும், குளிருக்கு நடுங்கிய அவரது நிலையிலுமிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. அவரின் நிலையை ஒரு முறை பார்த்து விட்டு, எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்ல இணங்கி விட்டோம்.

(வாசகர்கள் மன்னிக்கவும். பிறருக்கு உதவி செய்தவற்றை விளம்பரம் செய்வதாக இனிவரும் பகுதிகளில் நான் குறிப்பிடுவதாக எண்ணிவிட வேண்டாம். இனிவரும் பகுதிதான் அந்தப் பயணத்தை முழுமைப்படுத்திய சம்பவங்களையும் அனுபவங்களையும் எங்களுக்கு அளித்தது என்பதாலும், அந்தப் பயணத்தில் அவர்களுடனான பகுதி தவிர்க முடியாதது என்பதாலும் நடந்தவற்றை நடந்தவாறே எழுத முனைகிறேன். தற்பெருமை கூறுவதாகத் தோன்றின் மன்னிக்கவும்)

இரண்டு பக்கமும் நாங்கள் இருவர் அந்தப் பாட்டியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து ஏறத் தொடங்கினோம். எங்களுடனேயே மற்ற வயதான பெண்ணும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் சிங்களவர்கள் தான் என்றதும், நாங்கள் தமிழில் கதைப்பது அவர்களுக்குப் புரியாது என்பதனால் எங்களுக்குள் பேசிக் கொண்டோம், ஏன் இவர்கள் இந்த தள்ளாடும் வயதில் அதுவும் இந்த மழை நேரத்தில் இப்படி மலையேற வருகிறார்கள் என்று. உண்மையில் அவர்களை எங்களால் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. சாதாரணமானவர்களுக்கே அந்த மலைப் பயணம் அசாத்தியமானதாக இருக்கும் போது, இப்படி உறுதியாக ஓரிடத்தில் நிற்கக்கூட முடியாத வயதில் அவர்களுக்கு மலையேறும் ஆசை தேவைதானா என்று அடிக்கடி யோசித்துக்கொண்டும், எங்களுக்குள் சொல்லிக் கொண்டுமிருந்தோம். ஆனால், அவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் உதாசீனப்படுத்த எண்ணாது, பாதுகாப்பாக அழைத்துச் சென்றுகொண்டிருந்தோம்.

அந்தப் பாட்டி மழையில் நனைந்ததனால், குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார். அதனால், அவரால் அதிகம் பேச முடியவில்லை. ஆகையினால், மற்ற வயதான பெண்ணே அடிக்கடி எங்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் புரிந்தது, அவர்களுக்கும் அதுதான் அந்த மலைக்கான முதல் பயணமென்று. ஆனால், அவர் கேட்ட கேள்விக்குத்தான் எங்களிடம் பதில் இருக்கவேயில்லை. நாங்கள் தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்தோம். அதுவரை பெய்துகொண்டிருந்த அடைமழை சற்றுக் குறைந்திருந்தமையால், வீசிக்கொண்டிருந்த காற்று ஜில்லென்று எங்கள் மீது மோதி உடம்பை குளிரில் ஆட்டங்காண வைத்துக்கொண்டிருந்தது. அதை விட அந்த அடை மழையே பறவாயில்லை போலிருந்தது. ஆனாலும் நாங்கள் ஏறிக்கொண்டிருந்தோம். ஆனால், அந்தப் பாட்டி குளிர் தாங்காமல் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு அந்தக் குளிரைத் தாங்குகின்ற சக்தி இருக்கவில்லை. ஆனாலும் அவர் ஒரு விடாப்பிடியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்களோடு ஏறிக்கொண்டேயிருந்தார். அந்தப் பாட்டியோடு வந்த மற்றப் பெண், சிங்களத்தில் ஏதோ தெய்வீகப் பாடலைப் பாடிக்கொண்டு எங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். அந்தப் பாடல் அந்தப் பாட்டியை அடிக்கடி தெம்படையச் செய்ததை எங்களால் உணர முடிந்தது. அந்தப் பாட்டி குளிரில் முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்த போதும், அந்தப் பாடலோடு இணைந்து தானும் பாடுவதற்கு அடிக்கடி முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர்களின் முதுமையால் அவர்களின் உடல்தான் அடிக்கடி களைப்படைந்ததே தவிர, அவர்கள் மனதளவில் துளியளவும் களைப்போ சலிப்போ அடையவில்லை. அவர்கள் தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருந்தார்கள்.

தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருக்க, தூறல் மழை மீண்டும் அடை மழையாக மாறி கொட்டத் தொடங்கிவிட்டது. அந்த இருளைவிட தான் எந்தவிதத்திலும் சளைத்தவனில்லை என்பதை நிரூபிக்க அந்த மழை புகை மூட்டம் போல் பாதையை மறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டது. அந்த அடை மழையால் அதுவரைக்கும் இல்லாத அளவு மலைப்படிகளில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிட்டது. இருளோடும், காற்றோடும், மழையோடும் மட்டுமல்லாமல் படிகளில் வழிந்தோடி வரும் வெள்ளத்தோடும் முட்டி மோதி எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. சாதாரணமாக இருந்த சவால்களோடு, எங்களை நம்பி வந்த இருவரைக் காக்கிற சவாலோடும் முன்னேறிக்கொண்டிருந்தோம். அப்படி ஏறிக் கொண்டிருக்கும் போதுதான் நாங்கள் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அது அந்த மலைப் பாதையிலேயே மிகவும் அபாயகரமான பகுதியாகத் தெரிந்தது. அங்கிருந்து மலைப் படிகள் செங்குத்தாக உயர்ந்து செல்வது போல் தெரிந்தது. அதுவரை கடந்து வந்த தூரங்கள் அத்தனையும், படிகளாகவும் பின்னர் சமாந்தரமாகவும் என்று மாறி மாறியே வந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த இடம் மிகவும் ஆபத்தான வகையில் மேலே உயர்ந்து சென்று கொண்டிருந்தது. பார்ப்பதற்கே பிரம்மிப்பாகவும், ஆபத்தாகவுமிருந்த அந்தப் படிகளை மிகவும் சிரமப் பட்டே ஏறவேண்டியிருந்தது. காரணம், அந்தப் பாட்டியை சிரமத்தோடு அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் எங்களைப் போல தயங்கியவர்களாகத் தெரியவில்லை. தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருந்தார்கள். ஏதோ ஒரு வைராக்கியம் அவர்களை எங்களை விடத் துணிச்சலானவர்களாக வழிநடத்திக் கொண்டிருந்தது.

அந்த ஆபத்தான செங்குத்துப் படிகள் ஓர் இடத்தில் இடப் பக்கமாகத் திரும்பி இன்னும் அதிக செங்குத்துப் படிகளாகப் போய்க் கொண்டிருந்தது. அந்தத் திருப்பம் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத அளவுக்கு ஆபத்தானதாகவும், அழகானதாகவும் தெரிந்தது. அந்தத் திருப்பத்திற்கு வலது பக்கத்தில் பல நூறு மீற்றர்கள் ஆழமான பள்ளத்தாக்கு இருப்பது அதன் வெறுமையில் விளங்கியது. பிரம்மிப்பூட்டும் அந்தப் பள்ளத்தாக்கைப் பார்ப்பதா தவிர்ப்பதா என்று அஞ்சிக்கொண்டே அந்த மூலையின் திருப்பத்தில் திரும்பி ஏறத் தொடங்கினோம். அங்குதான் எங்களுக்கு அடுத்த சுவாரசியம் காத்துக் கொண்டிருந்தது.

அடைமழையால் பெருக்கெடுத்து படிகளில் ஓடிக்கொண்டிருந்த வெள்ளம், அந்த இடத்தில் படிகள் மிகவும் செங்குத்தாக இருந்தமையால் மிக வேகமாக மேலிருந்து கீழே ஓடி வந்துகொண்டிருந்தது. மேலிருந்து வழிந்தோடி வந்துகொண்டிருந்த மழை வெள்ளம் எங்கள் கால்களில் மோதித் தெறித்து எங்கள் முகத்தில் மோதுகிற அளவுக்கு பலமுள்ளதாக இருந்தது. மழைத் துளிகள் மட்டுமல்லாமல் அப்போது அந்த வெள்ள நீரும் எங்கள் முகத்தில் மோதியடிக்கத் தொடங்கிவிட்டது. அதுவரை தூரம் ஏறியது போல் அந்தப் படிகளில் விரைவாக ஏறிவிட முடியவில்லை. சிறிது உயரத்திற்கு ஏறுவதும், பின்னர் நின்று ஆசுவாசப்படுவதுமாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். அந்த ஆபத்தான படிகளில் கிட்டத்தட்ட அந்தப் பாட்டியைத் தூக்கிவிட்டுத் தூக்கிவிட்டுத்தான் ஒவ்வொரு படிகளிலும் ஏற வைக்க முடிந்தது. அப்படிக் கொஞ்சம் சொஞ்சமாக அந்த ஆபத்தான படிகளில் வழிந்தோடிவந்த நீரில் முட்டி மோதிக் கொண்டே ஓரளவு சமாந்தரமான இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கு மலைக்கோயில் இன்னும் நூறு மீற்றர்கள் தூரத்தில் இருப்பதாக ஒரு பலகை தொங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் எங்கள் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சாக வெளிவந்தது. அந்த இடத்திலிருந்த ஒரு தேனீர்க் கடையில் சிறிது நேரம் களைப்பாறி விட்டுச் செல்லலாம் என அந்தப் பாட்டியை கைத்தாங்கலாகவே அழைத்துக் கொண்டு ஒரு நாற்காலியில் உட்கார வைத்தோம். அவர் முழுதாய் உட்கார்ந்தும், உட்காராமலும் எங்களைப் பார்த்துக் கையெடுத்து வணங்கினார்.. அவரின் கண்களில் நீர் பெருகிக் கிடந்தது. அவர் எங்களை வணங்கியது நன்றியுணர்விற்காகத்தான் என்ற போதும், அதைச் சற்றும் எதிர்பார்த்திராத எங்களுக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது. ஒரு புல்லரிப்பைச் சில நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாக என்னால் உணர முடிந்தது. அந்தப் பெண் தன் கைப்பையிலிருந்து ஒரு பிஸ்கட் பக்கட்டை எடுத்து எங்களிடம் நீட்டினார். நாங்கள் அன்பாக அதை மறுக்க முயற்சி செய்தோம். ஆனால், அவர்களின் மகிழ்ச்சிக்காக அதை ஏற்றுக்கொண்டோம். ஆனாலும், அவர்கள் இருவரும் சிறு துண்டைக்கூட உண்ணவில்லை. அவர்கள் ஒரு பிரார்த்தனையோடு வந்திருப்பதாகவும், மலைக் கோவிலுக்குப் போய் அந்தப் பிரார்தனையை நிறைவேற்றி விட்டுத்தான் தங்களால் உண்ண முடியும் என்றும் கூறினார்கள்.

இன்னும் பயணிக்க வேண்டியது வெறும் நூறு மீற்றர்கள் தூரம் தான் என்று தெரிந்துவிட்டதால், அந்த இடத்தில் அதிக நேரங்கள் தாமதிக்காமல் ஆர்வத்தோடு மீண்டும் படிகளில் ஏறத் தொடங்கினோம். மெல்ல மெல்ல முன்னேறி மலையின் உச்சியை அடைந்தோம். சாதாரணமாக மூன்றரை மணித்தியாலங்களில் ஏறி அடைந்திருக்கக்கூடிய மலை உச்சியை, வழியில் ஏற்பட்ட பல தடைகளாலும் தாமதங்களாலும் ஐந்து மணித்தியாலங்களின் பின்னரே அடைந்தோம். அங்கே சிறிய கோவில் ஒன்று மலையின் மையத்திலிருப்பது தெரிந்தது. அது பௌத்த மதக் கட்டடக் கலை அமைப்பிலேயே இருந்தது. அதற்குள் நுழைவதற்கு முன்னர் வெளியில் பாதணிகளைக் கழற்ற வேண்டியிருந்தது. பாதணிகளைக் கழற்றியதும் எங்களால் சில நொடிகள் கூட ஓர் இடத்தில் நிற்க முடியவில்லை. அந்தளவுக்குக் குளிர் உள்ளங் கால்களைத் தைக்கத் தொடங்கிவிட்டது. பங்குனி மாத வெயிலில் மணல் பரப்பில் நடப்பதைக் காட்டிலும், அந்தக் குளிர் மோசமான வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் அந்தச் சிறிய கோயிலுக்குள் நுழைந்தோம். அங்கே திரைச் சீலை ஒன்றினால் மூடப்பட்ட அறையை அதற்கு முன் நின்ற ஒரு பிக்குவிடம் சில நாணயத்தாள்களை நீட்டிவிட்டு, திரையை விலக்கிப் பார்த்தோம். அங்கே ஒரு பெரிய பாதச்சுவடு போன்ற அமைப்பு தெளிவாகத் தெரிந்தது. அதற்கு மேலே சில மெல்லிய துணிகள் விரிக்கப்பட்டிருந்தது. அதுதான் சிவனின் பாதமா என்று கண்களை அகல விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பாட்டி தாங்கள் கொண்டுவந்திருந்த ஒரு பட்டுப் போன்ற துணியை எடுத்து எங்கள் கைகளில் கொடுத்து அந்தப் பாதத்தின் மேல் விரிக்கச் சொன்னார். அவர் எங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகத்தான் அப்படியொரு வாய்ப்பை எங்களுக்களிக்கிறார் என்று தெரிந்து கொண்டு, அன்பாக அதற்கு மறுப்புத் தெரிவித்தோம். ஆனால், அவரின் அன்பு அந்த வேண்டுகோளை தட்டிக்கழிக்க முடியாமல் செய்யவே, அவர்களோடிணைந்து அந்தத் துணியை அந்தப் பாதத்தின் மீது விரித்து அந்தப் பாதத்தைத் தொட்டு வணங்கினோம்.

பின்னர் அங்கிருந்து வெளியில் வர, அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்திருந்த உலர வைத்த தேங்காய்த் துண்டுகளை அங்கிருந்த காரியாலயம் ஒன்றில் ஒப்படைத்தார்கள். அதற்கான காரணம் எதுவென்று அப்போது எங்களுக்குப் புரியாவிட்டாலும், அவற்றையும் ஒப்படைத்த பின்னர்தான் அவர்களின் பிரார்த்தனை முழுமையடைந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பின்னர் அந்தப் பெண் எங்களுடன் சில நிமிடங்கள் பேசினார். அவர்கள் குருணாகல் மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், அந்தப் பாட்டி தனது அக்கா என்றும், தனது பத்து வயது மகன் புற்று நோய்க்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாகவும், அவனுக்காகப் பிரார்த்தனை செய்யத்தான் தாங்கள் அங்கு வந்ததாகவும் கூறினார். எங்களுக்குக் கண்ணீராலேயே மீண்டும் மீண்டும் நன்றி கூறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் எங்களுக்குப் பல கேள்விகளுக்கு விடைகள் புரிந்தது. ஏன் இந்தத் தள்ளாடும் வயதில் இந்த மலையேற விரும்பினார்கள் என்று புரிந்தது. நாங்கள் கூட அஞ்சிக் கொண்டு பயணித்த ஆபத்தான பயணத்தை எப்படி அவர்களால் தைரியமாக பயணிக்க முடிந்தது என்று புரிந்தது. அந்த நள்ளிரவில் அடை மழையில் உணவின்றி மலையேறிய பிரார்த்தனையின் வலி எங்களுக்குப் புரிந்தது. அந்த அத்தனை கேள்விகளுக்கும் அவர்களின் இரு சோடிக் கண்களிலிருந்து வந்து கொண்டிருந்த கண்ணீர்த் துளிகள் பதில் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருந்தது. அது தாய்ப் பாசம் என்ற பதிலை மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் தந்து கொண்டிருந்தது.

அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, நாங்கள் அந்த மலை உச்சியைச் சுற்றிப் பார்ப்பதற்காக அவர்களிடமிருந்து அன்பைப் பரிமாறி விடைபெற்றுக் கொண்டோம். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்த பெரும் கூட்டத்தோடு கலந்துவிட்டார்கள். அதன் பின்னர் அவர்களை எங்களால் கண்டு கொள்ள முடியவில்லை. மலையிலிருந்தே இயற்கையின் அழகை இரசித்துவிட்டு கீழே மீண்டும் இறங்கத் தொடங்கினோம். கடுமையான மழையால் நாங்கள் திட்டமிட்டது போல சூரியோதயத்தைப் பார்க்கின்ற பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அது குறித்து சிறிதளவு கூட எங்களுக்குக் கவலை இருக்கவில்லை. ஏனென்றால், அந்தக் கண்ணீர் தோய்ந்த இரு சோடிக் கண்களில் நாங்கள் ஆயிரம் ஆயிரம் சூரியோதயங்களைப் பார்த்திருந்தோம். அவை ஒரு நாளும் அஸ்த்தமித்திடாத சூரியனாய் இன்றுவரை கனன்று கொண்டிருக்கிறது உள்ளத்தில்.

பயணம் முற்றுகிறது.

December 24, 2017


இந்தக் கட்டுரை எந்தவொரு கற்பனையோ கட்டுக்கதையோ கலப்பில்லாத முற்று முழுதாய் நிகழ்ந்த ஓர் மறக்க முடியாப் பயணத்தின் பிரதிபலிப்பு. கால ஓட்டத்தில் ஏதேனுமொரு சம்பவங்கள் மறந்து இங்கு எழுதப்படாது விடுபட்டிருக்கலாமே தவிர, நடக்காத எந்தவொன்றும் இங்கு மிகைப்படுத்தி எழுதப்படவில்லை.

தேதி - 15.05.2016

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் ஆறு பேரும் அந்தப் பயணத்திற்காக எங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தோம். இலேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அந்த அழகிய தூறல்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் அடைமழையாக மாறி எங்களுக்கு உயிர் பயம் காட்டப் போகின்றது என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஓர் இனிமையான பயணத்தைத் தொடங்குவதற்கான ஆர்வம் எங்கள் ஆறு பேருக்குள்ளும் பொங்கிக் கொண்டிருந்தது. ஆயினும், அது ஓர் சாகசப் பயணமாக மாறி எங்களை மரண வாசல்வரை கூட்டிச் செல்லப்போவதை அந்த நொடி நாங்கள் யாரும் ஊகித்திருக்கவில்லை. நாங்கள் நல்லதண்ணி என்னும் இடத்தில் பயணத்தைத் தொடங்குவதற்காக நின்று கொண்டிருந்தோம்.

அது சிவனொளிபாத மலைக்கான பயணம். சிவனொளிபாத மலை இலங்கைத் தீவின் சப்ரகமுவ, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கூம்பு வடிவிலான அழகிய மலையாகும். அதன் உச்சியில் உள்ள 1.8 மீட்டர் அளவான பாதச்சுவடு போன்ற அமைப்பு இந்துக்களினால் சிவனின் பாதச் சுவடாகவும், பௌத்தர்களால் கௌதம புத்தரின் பாதச் சுவடாகவும் பூஜிக்கப்படுகிறது.

நண்பர்கள் எங்கள் ஆறு பேருக்குமே அதுதான் சிவனொளிபாத மலைக்கான முதல் பயணம். அதற்கு முன்னர் நாங்கள் யாரும் அங்கு சென்றிருக்கவில்லை. ஆகையினால், அனைவருமே அதிகம் எதிர்பார்ப்பிலிருந்தோம். சாதாரணமாக அந்த மலையை ஏறி முடிப்பதற்கு மூன்று தொடக்கம் மூன்றரை மணித்தியாலங்கள் வரை ஆகலாம். நிதானமாக ஏறுபவர்களுக்கு ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலும் ஆகக் கூடும். சிவனொளிபாத மலையின் சிறப்பு அதன் உச்சியில் இருக்கும் அந்தப் பாதச் சுவடு மட்டுமல்ல. அந்த மலை உச்சியிலிருந்து அதிகாலை வேளையில் சூரிய உதயத்தைப் பார்க்கின்ற பாக்கியமும்தான். அது பார்ப்பதற்கு ரம்மியமான காட்சியாக இருக்கும். அவ்வாறு அங்கிருந்து சூரியோதயத்தைப் பார்க்க வேண்டுமாயின் நள்ளிரவில்தான் மலை ஏறத் தொடங்க வேண்டும். அப்போதுதான் அதிகாலை வேளையில் மலை உச்சியை அடைவதற்கும் சூரியோதயத்தைப் பார்ப்பதற்கும் சரியாக இருக்கும். அன்று எங்களது திட்டமும் அதுவாகத்தான் இருந்தது.

அந்த மலையடிவாரத்திலுள்ள கிராமமான நல்லதண்ணி என்னுமிடத்தில் உள்ள ஒரு கடையில் எங்களது இரவு உணவை உண்டுவிட்டு, மலையடிவாரத்தை அடைவதற்கான பாதையிலிருந்த கடையில் மழையிலிருந்து தப்பிக்கொள்ள பொலீத்தினாலான ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டோம். அந்த மழைத் தூறல்கள் எங்களுக்கு சூரியோதயத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பறித்து விடுமோ என்ற கவலை அப்போது எங்களிடம் இருந்தது.

நள்ளிரவு பன்னிரெண்டு மணியாகியதும் நாங்கள் எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். முதலில் அந்த மலையடிவாரத்தை அடைவதற்கான பாதையிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று இறைவனை மனதார வணங்கிக் கொண்டோம். நாங்கள் ஆறு பேரும் அமைதியாக கடவுளை வணங்கினாலும், எங்கள் அனைவரினுடைய பிரார்த்தனையும் ஒன்றாகவேதான் இருந்தது. “கடவுளே எப்படியாவது இந்த மழையை நிறுத்திடு. நாங்க சூரியோதயம் பார்த்தே ஆகணும்”

அங்கிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். மலையடிவாரத்திலிருந்து அதன் உச்சியை அடையும் வரை ஆங்காங்கே தேனீர்க் கடைகள் இருக்கும் என்பது எங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. ஏனென்றால், அந்தக் குளிரில் உடம்பை உஷ்ணப்படுத்திக்கொள்ள தேனீரையும், மலைப் பாதைக் கடைகளில் கிடைக்கும் மலைச் சுருட்டுக்களையும் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆனால், எங்கள் ஆறு பேரில் இருவரைத் தவிர நாங்கள் நான்கு பேரும் புகைப்பிடிக்காதவர்கள் என்பதனால், எங்கள் நால்வருக்கும் அந்தத் தேனீரை விட்டால் வேறு கதி இருக்கவில்லை. நாங்கள் மெல்ல மெல்ல மலையேறத் தொடங்கினோம். எங்களுடன் சேர்ந்து மெல்ல மெல்ல மழையும் அதிகரிக்கத் தொடங்கியது.  

எங்கும் இருட்டு மட்டுமே நிறைந்திருந்தது. பெய்து கொண்டிருந்த மழையால் அந்த மலையேறும் பாதையில் இருந்த கம்பங்களில் இருந்த மின் விளக்குகள் கோளாறாகியிருக்க வேண்டும். அவை இருந்தனவே தவிர ஒன்றிரெண்டைத் தவிர வேறு எதுவும் எரிவதற்கான முயற்சியில் கூட இருப்பதாகத் தெரியவில்லை. பயணத்தைத் தொடங்கும் போது மனதிலிருந்த அந்த எதிர்பார்ப்பு, மலை ஏற ஏற கொட்டோ கொட்டென்று கொட்டத்தொடங்கிய அடை மழையாலும், மலைப் படிகள் கூடத் தெளிவாகத் தெரியாத கும்மிருட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பயமாக உருமாறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எங்களுக்குப் பாதை முற்றாகத் தெரியாத அளவுக்கு இருள் கண்ணை மறைத்துவிட்டது. படிகளின் இரு ஓரங்களிலும் பெரும் பள்ளத்தாக்குகள். இருட்டில் கால் தவறி அங்கு வைத்துவிட்டால், பல நூறு மீற்றர்கள் பள்ளத்தாக்கை சில நிமிடங்களில் அடைந்துவிட முடியும். ஆகையால், எங்கள் கைத்தொலைபேசியை எடுத்து அதன் டார்ச்சு லைட்டை ஒளிர வைத்துக் கொண்டு முன்னேறத் தொடங்கினோம். பாதையின் ஓரப் பள்ளத்தாக்குகளில் நீர் அருவிகள் வழிந்தோடுகின்ற சத்தத்தை எங்களால் தெளிவாகக் கேட்க முடிந்தது. அது எந்தப்பக்கம் இருந்து வருகிற சத்தம் என்பது கூட எங்களால் அந்த இருட்டில் ஊகிக்க முடியவில்லை. அது பயங்கரமான இரைச்சலாக மிரட்டிக்கொண்டிருந்தது.

பயத்தை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளாமல் நாங்கள் ஏறிக்கொண்டேயிருந்தோம். ஒரு கட்டத்தை அடையும் போது இலேசாக வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று மெல்ல மெல்ல வலுவடையத் தொடங்கிவிட்டது. அடைமழை, கண்ணை மறைக்கும் இருட்டு, இவற்றுக்கு அடுத்ததாய் கடும் காற்றும் சேர்ந்து விட்டது, எங்களுக்குப் பீதியை ஏற்படுத்துவதற்கு. இத்தனைக்குள்ளும் இன்னும் ஒரு விடயம் எங்களை தயக்கமடையச் செய்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்த மலையிலிருந்து பல யாத்திரிகள் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் எங்களைப் போல் மேலே ஏறிக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அந்த ஒரு விடயம் மட்டுமே எங்களைப் பயமுறுத்தப் போதுமானதாகவிருந்தது. ஆனாலும், நாங்கள் எங்கள் முயற்சியைக் கைவிட எந்த நிமிடத்திலும் யோசிக்கவில்லை. தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருந்தோம்.

சிறிது தூரம் சென்ற பின்னர், மேலேயிருந்து வருபவர் ஒருவர் எங்களைப் பார்த்து சிங்களத்தில் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தார். எங்கள் அருகில் வந்ததும் நாங்கள் தமிழ்தான் என்பதை எங்கள் நெற்றியில் பாதி அழிந்தும் மீதி அழியாமலும் மீதமிருந்த மலையடிவாரப் பிள்ளையார் கோவிலின் குங்குமத்தின் மூலம் அறிந்து கொண்டு “தம்பி! மேல போவாதீங்க. கரண்டு கம்பம் பாதையில விழுந்து கெடக்கு. மேல நீங்க போவ முடியாது” என்று சொல்லி விட்டு சிறிதும் நிற்காமல் தொடர்ந்து கீழே இறங்கிச் சென்று கொண்டேயிருந்தார். எங்களுக்கு எங்கள் எதிர்பார்ப்பு ஆசை அத்தனையையும் தீயில் போட்டு எரித்தது போலிருந்தது. இப்படிப் பாதி மலை கூட ஏறாமல் திரும்பிப் போகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்றிருந்தது.

என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டு சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தோம். ஏனென்றால், எங்கள் முயற்சியைப் பாதியிலேயே தூக்கியெறிந்துவிட்டுத் திரும்பிப் போக நாங்கள் தயாராக இல்லை. அதற்காக தெரிந்தே ஆபத்தில் மாட்டிக் கொள்ளவும் நாங்கள் முட்டாளாய் இருக்கவில்லை. சில நிமிடங்களிலேயே மேலேயிருந்து ஒரு சிங்களக் குடும்பம் இறங்கி வந்துகொண்டிருப்பதை எங்களால் பார்க்க முடிந்தது. ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறு பெண்பிள்ளை அடங்கலாக அவர்கள் ஐந்து பேர் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் அருகில் வந்ததும் அவர்களிடம் நான், “யன்ன புளுவான் த?” என்றேன். “ஒவ் ஒவ் புளுவான்” என்று பதில் வந்தது. அதற்கு மேல் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. தொடர்ந்து ஏறத் தொடங்கினோம்.

நாங்கள் அந்த இடத்தைச் சில நிமிடங்களில் அடைந்தோம். அங்கு பாதைக்குக் குறுக்காக ஒரு மின் கம்பம் சாய்ந்து கொண்டு முழுதாக விழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அது அந்த ஒடுங்கலான பாதைக்குக் குறுக்காகச் சரிந்து பாதையை முழுதாக மறித்திருந்தது. அங்கிருந்து வருபவர்களெல்லாம் மிக அவதானமாக தலையைக் குனிந்து கொண்டு அதற்குக் கீழாக வந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. நாங்களும் அந்த ஆபத்தான கம்பத்தை மிகவும் அவதானத்தோடு தலையைக் குனிந்து கொண்டு அதன் கீழாக மிக விரைவாகக் கடந்து முன்னேறத் தொடங்கினோம். ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பிவிட்டது போன்ற மன நிலை எங்களை இன்னும் சுறுசுறுப்பாய் ஏற வைத்தது. ஆனால், அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை, இனித்தான் நாங்கள் பல மோசமான ஆபத்துக்களைச் சந்திக்கப்போகிறோம் என்பதை.

தொடர்ச்சியான படிகளும் எப்போதாவது சமாந்தரமான நிலமுமாக எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதற்கு முன்னர் எங்களில் யாருமே அங்கு வந்திருக்கவில்லை என்பதால், இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டியிருக்கிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.  ஏறிக்கொண்டிருக்கும் போது தொலைவில் உயரத்தில் எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குதான் மலையின் உச்சி என நம்பிக்கொண்டு வராத தெம்பையெல்லாம் வரவழைத்துக் கொண்டு ஏறிக்கொண்டிருப்போம், சிறிது நேரத்தில் அந்த மின் விளக்கை அடையும் போது தலையை அண்ணார்ந்து பார்த்தால் இன்னுமொரு மின் விளக்கு இதுதான் உச்சி என்பது போல் தூரத்தில் எரிந்துகொண்டிருக்கும். இப்படி இன்னும் எவ்வளவு தூரம் ஏறியாகவேண்டுமென்று சிறிதும் தெரியாமல் ஏறிக்கொண்டேயிருந்தோம். கடுங்காற்று மழைத்துளிகளை எங்கள் முகங்களில் மோதியடித்துச் சுள் சுள் என்று வலி தந்துகொண்டிருந்தது. ஆனால், சிறிது நின்று இளைப்பாறுவதும் பின்பு ஏறுவதுமாக நாங்கள் முன்னேறிக் கொண்டேயிருந்தோம்.

சிறிது தூரம் நாங்கள் சென்றதும் அங்கு கண்ட ஒரு காட்சி பயத்தைப் பலமடங்காக ஆக்கிவிட்டது. அங்கு மலைப்பாதையின் ஓரத்திலிருந்த ஓர் தேனீர்க் கடையொன்றின் மேல் மலை மேட்டின் மண் சரிந்து அந்தக் கடை மொத்தத்தையும் மண்ணால் புதைத்து விட்டிருந்தது. தகரங்களாலான அந்தத் தற்காலிகக் கடை இருந்த இடம் தெரியாமல் சேற்று மண்ணால் மூடப்பட்டுக் கிடந்தது. அந்த விபத்திலிருந்து அதிஷ்டவசமாகத் தப்பிய கடை உரிமையாளர் அந்தக் கடையைப் பார்த்துக் கண்கலங்கித் தலையில் கை வைத்து நின்றதை அந்த அடை மழையிலும் எங்ளாலும் அங்கு நின்றவர்களாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த விபத்து நாங்கள் அந்த இடத்தை அடைவதற்கு அதிகபட்சமாக பத்து நிமிடங்களுக்குள்தான் நிகழ்ந்திருக்க முடியும். மின் கம்பம் சரிந்து கிடந்த இடத்தில் நாங்கள் கொஞ்சம் தாமதிக்காமல் வந்திருந்தால், அந்த விபத்தில் நாங்களும் சிக்கியிருப்போம் என்பது அந்த நொடியில் எங்களது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த அவலத்தைப் பார்த்துக் கொண்டே சிறிய தயக்கத்தோடு முன்னேறிக் கொண்டிருந்தோம்.

தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் போதே, இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானது என்பது எங்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. இன்னும் பல ஆபத்துக்களைக் காணப்போகிறோம் என்பது அடிமனதுக்குப் புலப்படத் தொடங்கிவிட்டது. ஆனாலும், பயணத்தை இடையில் முடித்துவிட்டு வந்தவழி திரும்பிச் செல்ல எங்களுக்கு எந்த ஆர்வமும் இருக்கவில்லை. ஏனென்றால் இப்போது எங்களால் எங்களைப் போல மலையேறிக்கொண்டிருக்கும் சிலரை வழியில் பார்க்க முடிந்தது. அவர்களில் சிறு பிள்ளைகளும், பல வயதானவர்களும் கூட இருந்தனர். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாது தள்ளாடித் தள்ளாடி ஏறிக்கொண்டேயிருந்தனர். அவர்கள் சிங்களத்தில் கடவுளின் பெயரைச் சொல்லிச் சொல்லி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னேறிக்கொண்டேயிருந்தனர். அந்த வயதானவர்களை ஏதோவொரு தெய்வ நம்பிக்கை வழி நடத்திக்கொண்டேயிருந்தது. அவர்களைப் பார்த்த எங்களுக்கு புதிதாக தைரியம் புகுந்து கொண்டது. நாங்கள் தொடர்ந்து நடக்கத் தொடங்கினோம்.

நாங்கள் அனைவரும் பொலீத்தீன் உறையால் ஆன உடையை அணிந்திருந்தாலும், அந்த உடை அந்த அடை மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாததனால், நாங்கள் கிட்டத்தட்ட முழுதாக நனைந்துவிட்டிருந்தோம். அதனால், எங்களில் ஒரு நண்பனுக்கு குளிரில் உடம்பு அதிகமாக நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவனால் வேகமாக நடக்க முடியவில்லை. ஐந்தடி நடப்பதும் பின்னர் நிற்பதுமாக அவன் அவதியுறத் தொடங்கிவிட்டான். அவனுக்கு அதிகமாகக் களைப்படையத் தொடங்கிவிட்டது. அவனை இரண்டு பக்கமும் இருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு அவனுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தோம். அப்படிக் கைத்தாங்கலாக அவனைக் கூட்டிச் சென்றாலும், அவனுக்குக் களைப்புக் குறைந்தபாடில்லை. ஒரு கட்டத்தில் அவனுக்கு அதிகமாக மூச்சு வாங்கத் தொடங்கி விட்டது. அவன் இனி நகரவே முடியாது என்று அந்த இடத்திலேயே நின்று விட்டான்.

“கொஞ்ச நேரம் இங்கேயே உக்காந்து இருந்திட்டு, களைப்புக் குறைஞ்சதும் போவம்” என்று சொன்னான். நாங்களும் அப்படியே அங்கேயே கொஞ்ச நேரம் இளைப்பாறுவோமா என்று யோசித்தோம். ஆனால், அந்த இடத்தில் உட்காருவதற்கு எந்த வசதியும் இருக்கவில்லை. தரையில் மழைத் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததனால், அவனை அதில் உட்கார வைத்து இன்னும் உடம்பில் குளிர் ஏறுவதை எங்களால் அனுமதிக்க முடியவில்லை. எங்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் சற்று மேலே ஒரு தகரத்தாலான தற்காலிக தேனீர்க்கடை இருப்பது அதன் மங்கலான மின் விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. அப்போது நான் சொன்னேன் “இல்லடா, இன்னும் கொஞ்சத் தூரத்துல தான் ஒரு கடை தெரியுது. நாம அங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஏறத் தொடங்குவோம்” என்று. அதற்கு அவனும் சரி சொல்ல, அவனை இரண்டு பக்கமும் இருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு அந்த கடையை நோக்கி முன்னேறினோம். அந்தக் கடையை அடைவதற்குக் குறைந்த பட்சம் பத்து அடிகள் தூரம் இருக்கின்ற போது, பலமாக வீசிக் கொண்டிருந்த காற்று அந்தக் கடையின் கூரைத் தகரத்தில் ஒன்றைக் கழற்றி வீசியெறிந்தது. கூரையிலிருந்து கழன்று காற்றில் பறந்த அந்தத் தகரம், நாங்கள் ஆரம்பத்தில் நின்று கொண்டு இளைப்பாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த இடத்தில் விழுந்து, தரையில் குத்தித் தெறித்து மீண்டும் கீழே பறந்து சென்றது. எங்களுக்கு அதைப் பார்த்ததும் ஒரு கணம் உயிர் போய் உயிர் வந்தது. நாங்கள் அங்கு நின்று இளைப்பாறியிருந்தால், எங்களில் எத்தனை பேருக்குத் தலை உடம்பில் இருந்திருக்கும் என்பதை இப்போதும் என்னால் உறுதியாகக் கூற முடியாமலிருக்கிறது.

பயணம் அடுத்த வாரமும் தொடரும்……

December 20, 2017


நான் கிட்டத்தட்ட என் இலக்கை நெருங்கியிருக்கிறேன். என் பதின்மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பலன் கிட்டும் காலம் மிக அருகில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. நான் உருவாக்கிய டிடெக்டரிலிருந்து பச்சை நிற இன்டிகேட்டர் பல்பு இரண்டு முறை எரிந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அது அங்கிருந்து எனக்கு வந்த சிக்னல்தான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நிச்சயம் அது நிகழப்போகிறது என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதனால், என்னால் அதிகாலை இரண்டு மணியாகியும் தூங்க முடியவில்லை. எந்த நேரமும் எனக்கு அங்கிருந்து தகவல் வரக்கூடும் என்பதால், கடவுள் இருக்குமிடத்தை அறிவதற்கான என் ஆராய்ச்சியை இன்னும் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்களுக்கும், கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று தங்களுக்குரிய மதங்களில் கூறப்பட்டவற்றை மட்டும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும், எனது இந்த ஆராய்ச்சி பைத்தியகாரத் தனமாக இருக்கக்கூடும். ஆனால் என் ஆராய்ச்சி அந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் தகர்த்தெறியப் போகிறது என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை.  நான் ஆன்மீகத்தோடு விஞ்ஞானத்தையும் பிரயோகித்து இந்த அரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் உருவாக்கிய கண்டுபிடிப்புக்களைப் போலவே இந்த ஆராய்ச்சியும் எனக்கு வெற்றியளிக்கப்போகிறது. பதின்மூன்று வருடங்களாக எனது விருப்பு வெறுப்புக்களை மறந்து, என்னை முற்றிலும் அர்ப்பணித்து என் பல நாள் தூக்கத்தைத் தொலைத்துச் செய்யும் இந்த ஆராய்ச்சி நிச்சயம் விரைவில் கடவுள் இருக்குமிடத்தை எனக்கு கண்டுபிடித்துத் தரப்போகிறது. எனக்கு கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு விரைவில் அழைப்பு வரப்போகிறது.

ஆம், மீண்டும் அந்த டிடெக்டரில் பச்சை பல்பு எரிகிறது. கடந்த முறை போல் விட்டு விட்டு எரியாமல், இப்போது தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கிறது. இது நிச்சம் கடவுளிடமிருந்து வரும் சிக்னல்தான். கடவுள் சக்தியின் மின் காந்த அலைதான் இந்த பல்பு எரிவதற்கான காரணம். ஆஹா! இப்போது பல்பு இன்னும் பிரகாசமாக எரிகிறது. அந்தக் கடவுள் சக்தியின் அலைகள் எனக்கு மிக அருகில் வந்துகொண்டிருக்க வேண்டும். அதனால்தான் பல்பு இப்படி பிரகாசிக்கிறது. நிச்சயம் கடவுள் சக்தியிடமிருந்து எனக்கு ஏதோவொரு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. என்னால் என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பல்பு இன்னும் பிரகாசமாகிறது!

சக்தி இன்னும் என்னை நெருங்கி வந்துவிட்டது போலும்!

பல்பு இன்னும் இன்னும் பிரகாசமாகிறது!

ஆஹா! என் ஆராய்ச்சி கைகூடப் போகிறது!

பல்பு இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. அந்தப் பல்பின் பச்சை நிற வெளிச்சம் இப்போது என் ஆராய்ச்சி அறை முழுக்க நிறைந்திருக்கிறது. எனக்கு ஆர்வம் பலமடங்காகப் பெருகிக்கொண்டிருக்கிறது. என் பல வருட உழைப்புக்குப் பலன் கிட்டப்போகிறது.

ஐயோ! என்ன இது?

ஏன் அறை முழுக்க இருளாகிவிட்டது?

எரிந்துகொண்டிருந்த பச்சை நிற இன்டிகேட்டர் பல்புக்கு என்னவாகிவிட்டது? என் அறையில் எரிந்து கொண்டிருந்த சுவர் லாம்பு கூட அணைந்துவிட்டதே! நான் ஏமாந்து விட்டேனா? என் ஆராய்ச்சியெல்லாம் பாழாகிவிட்டதா? ஐயோ கடவுளே! ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? என் உழைப்பெல்லாம் நாசமாகிவிட்டது. என் பலவருடக் கனவு பாதியிலேயே கைகூடாமல் போய்விட்டது.

என்ன இது திடீரென்று ஓர் வெளிச்சம் எனக்குப் பின்னால்? நான் ஆர்வமாகப் பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அங்கே ஓர் ஜோதிப் பிளம்பு போல் ஒன்று பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. அதன் ஒளி என் கண்களைக் கூசச் செய்யுமளவிற்குப் பிரகாசமாகவிருக்கிறது. என்னால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் கடவுளா? கடவுள் இப்படித்தான் இருப்பாரா?

என்னால் எதையும் தெளிவாக நிர்ணயிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லை. ஏனென்றால் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. இது உண்மை தானா என்று கூட என்னால் உறுதிப்பட நிச்சயிக்க முடியவில்லை. என் ஆச்சரியமும் வியப்பும் என்னைத் திணறடித்துக்கொண்டிருக்கிறது. அந்த ஜோதி ஒளி என்னை அதனிடம் இழுப்பது போல் ஓர் உணர்வை என்னால் உணர முடிகிறது. என்னை அறியாமலேயே என் கால்கள் அதை நோக்கி நடக்கத் தொடங்குகிறது. என் கால்களை என்னால் தடுக்க முடியவில்லை. அது காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பு போல அந்த ஜோதியை நோக்கி இழுக்கப்படுகிறது. என் இதயம் பயத்தில் பட படக்கிறது. இது கடவுள் சக்தியின் தண்டனையாக இருக்குமா? என்னை அந்த ஜோதி எரித்துவிடப்போகிறதா? ஐயோ! என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை, அப்படி ஒன்றை. அது என்னை மேலும் இழுக்கிறது.

நான் அதற்கு அருகில் வந்துவிட்டேன்.

என்னால் என்னைத் தடுக்க முடியவில்லை.

நான் இன்னும் அருகில் நெருங்கிவிட்டேன்.

என்னால் அந்த ஜோதியின் வெப்பத்தை லேசாக உணர முடிகிறது.

இன்னும் பக்கத்தில் வந்து விட்டேன்.

ஐயோ! நான் எரியப் போகிறேன்.

என்ன இது, அந்த ஜோதி பிளந்துகொள்கிறது? இது பார்ப்பதற்கு ஓர் நுழைவாயில் போல் இருக்கிறதே. அப்படியென்றால், கடவுள் இருக்குமிடத்தை அடைவதற்கான வாசல்தான் இதுவா? ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும். அதன் நடுவில் ஏற்பட்ட பிளவு வழியாக ஓர் பாதைபோல் தெரிகிறதே! நான் என் ஆச்சரியத்தைக் கொஞ்சம் கூடக் குறைத்துக் கொள்ள முடியாமல், சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த ஜோதிப்பிளம்பின் வாசல் வழியாக உள்ளே நுழைகிறேன்.

ஆஹா! என்ன இது ஆச்சரியம்!

பார்ப்பதற்கு இது ஓர் மாளிகை போல் இருக்கிறது. என் ஆராய்ச்சி அறையில் இருந்து எப்படி இங்கு வந்து சேர்ந்தேன்? என்ன மாளிகை இது? இது எங்கிருக்கிறது. தலையைச் சுழற்றி சுற்றும் முற்றும் பார்க்கிறேன். என் கண்ணில் படுகிற அத்தனையும் எனக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இந்த மாளிகைச் சுவர்கள் கற்களாலோ சீமெந்தினாலோ கட்டப்பட்டது போல் இல்லையே. இதன் சுவர்கள் தண்ணீரால் செய்யப்பட்டது போல் மினுமினுத்துக் கொண்டிருக்கிறதே. இது எப்படிச் சாத்தியம்? மாளிகையில் தொங்கவிடப்பட்டிருக்கும் அலங்காரங்கள் கண் சிமிட்டுகின்றனவா? ஆம் அவை என்னைப் பார்க்கின்றன. இது தான் கடவுள் இருக்குமிடமா!

“மானுடா! கடவுள் நகரம் உன்னை வரவேற்கிறது. எதற்காக நீ இங்கு வர முயன்றுகொண்டிருந்தாய்?”

ஓர் கம்பீரக் குரல் கர்வமாக என் காதில் கேட்கிறது. நான் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய அங்குமிங்கும் பார்க்கிறேன். அதற்குள் மறுபடியும்

“மானுடா, நீ யாரைத் தேடுகிறாய்?”

“உங்களைத்தான் தேடுறேன் கடவுளே. நீங்க என் கண்ணுக்குத் தெரியவே மாட்டேங்கிறீங்களே!”

“ஹா… ஹா… ஹா…. அப்பனே! நான் கடவுளல்ல”

“நீங்க கடவுள் இல்லையா? அப்படீன்னா, நீங்க யாரு?”

“நான் சாதாரணமானவன். நான் கடவுளின் சேவகன்”

“நான் உங்களை என் கண்ணால பார்க்கணும் கடவுளின் சேவகரே.”

நான் சொல்லி முடிப்பதற்குள் ஓர் அழகிய இளைஞன் என் கண் முன் நிற்கிறான். அவன் என்னைப் பார்த்து ஒரு குறும்புப் புன்னகை செய்து கொண்டிருக்கிறான். அவன் பார்ப்பதற்கு ஒரு சாதாரண மனிதன் போலவேயிருக்கிறான்.

“நீங்க தான் கடவுளின் சேவகரா?”

“ஆம் மானுடா. அதில் உனக்கென்ன சந்தேகம்?”

“உங்களைப் பார்த்தா ஒரு சாதாரண மனுசன் போலதானே இருக்கிறீங்க. கடவுளோட சேவகன் ஒரு சாதாரண மனுசனா இருக்க முடியுமா?”

“நீ ஒரு சாதாரண மானுடன் என்பதால், நானும் உன் கண்களுக்கு சாதாரண மானுடனாகவே தெரிகிறேன். அல்லாமல், நீ ஒரு மீனாக இங்கு வந்திருந்தால் நானும் ஒரு மீனாகவும், நீ ஒரு நாயாக வந்திருந்தால் நானும் ஒரு நாயாகவும் உன் கண்களுக்குத் தெரிந்திருப்பேன். உன் மனதளவில் நீ யாராக இருக்கிறாயோ, அப்படியே அந்த உருவிலேயே நீ கடவுளைக் காண்பாய். கடவுள் அனுக்கிரகம் பெற்ற என்னையும் காண்பாய்.”

“என்ன சொன்னீங்க? நான் கடவுளைக் காண்பேனா? ஆமா, நான் இத்தனை வருஷமாகக் கஸ்டப்பட்டது அதுக்காகத்தான். இப்போ இங்கே வந்ததும் அதுக்காகத்தான். நான் கடவுளைப் பார்க்கணும். என்னை அவர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க.”

“அது இப்போது இங்கு சாத்தியமில்லை மானுடா. கடவுள் சிலகாலம் இங்கில்லை. அவர் தற்போது பூவுலகில் தான் இருக்கிறார்.”

“அப்படியா? எங்க இருக்கிறார்? சொல்லுங்க, நான் அவரைப் பார்த்தே ஆகணும்”

“அது சாத்தியமில்லை மானுடா. கடவுள் இருக்குமிடம் உனக்கு அறிவிக்கப்பட்டாலும் உன்னால் அவரைக் காண இயலாது.”

“ஏன் என்னால பார்க்க முடியாது? உலகத்திலே அவர் எங்கே இருக்கிறாருன்னு மட்டும் சொல்லுங்க. எந்த மூலையிலே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கிறேன்.”

“அது அவ்வளவு எளிதல்ல. கடவுள் இருக்குமிடத்தை யாராவது ஒரு மானுடன் அறிந்து கொண்டுவிட்டால், அவர் அங்கிருந்து அகன்றுவிடுவார். அவர் வேறு ஒரு புதிய இடத்தை அடைந்து விடுவார்.”

“அப்டீன்னா, நான் கடவுளைப் பார்க்கவே முடியாதா?”

“ஒரு வழி இருக்கிறது. கடவுள் இருக்குமிடத்தை நான் உனக்கு அறிவித்து அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் நீ அவரைச் சந்தித்தால் மட்டும் அவரை உன்னால் பார்க்க முடியும். தவறினால் ஐந்து நிமிடங்கள் கடந்த அடுத்த நொடியே அவர் அங்கிருந்து அகன்றுவிடுவார்.”

“சரி, எங்கேன்னு சொல்லுங்க. என்னால அவரைக் கண்டுபிடிக்க முடியும்.”

“சொல்கிறேன் அருகில்வா. அதை உன் காதில் மட்டும் தான் சொல்ல இயலும்.”

அவர் என் காதில் அந்த இரகசியத்தைக் கூறினார். அதற்குமேல் என்னால் ஒரு கணம் கூட அங்கிருக்க முடியவில்லை. ஒரு நொடியைக் கூட வீண் விரயமாக்காமல் நான் சென்ற வழியே மிக வேகமாகத் திரும்பி வந்து அவர் கூறிய கடவுள் இருக்குமிடத்தை நோக்கி ஓடுகிறேன்.

நான் கடவுள் இருக்குமிடத்தை நெருங்கிவிட்டேன்.

நான் கடவுளைக் காணப்போகிறேன்.

நான் அந்த இடத்தை அடைந்து விட்டேன்.

நான் அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைகிறேன்.

நான் கடவுளை அடையப்போகிறேன்.

ஐயோ! நான் ஏமாந்துவிட்டேன்.

நான் ஒரு நொடி தாமதித்துவிட்டேன். கடவுள் இங்கிருந்து சென்றுவிட்டார். என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை. நான் கடவுளை ஒரு நொடியால் தவறவிட்டுவிட்டேன். இல்லை… இல்லை… என் அறியாமையால் இத்தனை காலமாய் காணாது தவற விட்டுவிட்டேன். அவர் சென்றுவிட்டார். அவர் குடியிருந்த மனித உடம்பு மட்டும் இங்கே இருக்கிறது. இத்தனை காலமும் நான் ஏறெடுத்துக்கூடப் பார்க்காத, என் அப்பாவின் உயிர் பிரிந்த உடம்பு மட்டும் இங்கிருக்கிறது. அந்த உடலுக்குள் இருந்த கடவுள் இங்கிருந்து சென்று விட்டார்.

முற்றிற்று.











December 8, 2017


தமிழை நமது தாய் மொழியாகப் பெற நாங்கள் பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இருக்காதா பின்னே? அது உலகத்துலேயே மூத்த மொழியாச்சே. பல்லாயிரம் ஆண்டு பழைய மொழி, பாரதி கண்ட பாட்டு மொழி, வள்ளுவன் தந்த வள்ளல் மொழி, கம்பன் கரும்புச் சுவையூட்டிய மொழி, முது மொழி, பெரு மொழி, செம்மொழி இப்படி எப்படியெல்லாமோ தமிழைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனா, நாங்க இப்போ பேசப்போறது அதைப் பற்றியெல்லாம் இல்லைங்க. எத்தனை காலத்துக்குத்தான் இப்படி அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருக்க முடியும்? கொஞ்சம் புதுசாத்தான் யோசிப்போமே.

ஆமா, நான் சொல்லப்போறது கொஞ்சம் புதுசு தான். புதுசுன்னு நான் சொல்லுறது, நான் சொல்லவாற விசயத்தை இல்லைங்க. சமீப காலமா ஆரவாரம் இல்லாம அமைதியா அது நடந்துக்கிட்டுதான் இருக்கு. அப்படியான ஒரு விசயத்தைக் கொஞ்சம் வெளிப்படையா புதுசா ஒரு கோணத்துல இருந்து பார்த்துப் பேசலாமேன்னு நான் நினைக்கிறேன். இந்த முயற்சியைத்தான் புதுசுன்னு சொல்லுறேன். “அப்படி என்னடா சொல்லிடப் போறான் தமிழைப் பற்றிப் புதுசா, நேற்றுப் பேஞ்ச மழைக்கு முழைச்ச காளான் பய இவன்” அப்படீன்னு நீங்க நினைக்கிறது எனக்குப் புரியுது. நீங்க நினைக்கிறது சரிதான். நேற்று முழைச்ச பயலா இருக்கிறதனாலதான், இந்த விசயத்தைப் புரிஞ்சிக்க முடியுதோ என்னமோ. சரி. இனியும் விசயத்தைச் சொல்லாம சுத்தி வளைச்சுக்கிட்டிருந்தா, சரிதான் போடா நீயும் உன் கருத்தும் அப்படீன்னு விட்டுட்டுப் போயிடுவீங்கன்னு தெரியுது. அதனால நேராவே விசயத்துக்கு வாறேன்.

இத்தால் பொது மக்களுக்கு நான் சொல்லவாறது என்னன்னா, பேச்சுத் தமிழ் பொது மைய ஈர்ப்பு அப்படீங்கிற ஒரு விசயத்தைத்தான். பயப்படாதீங்க, என்னடா இது கேள்விப்படாத பெயரா இருக்குதேன்னு. இது நான் வச்ச பெயரு. அப்பறோம் எப்படி நீங்க கேள்விப்பட்டிருக்க முடியும். கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம்தான். மன்னிச்சிருங்க. பேச்சுத் தமிழ் பொது மைய ஈர்ப்பு அப்படீங்கிற பெயரால நான் எதைச் சொல்ல வாறேன்னா, ஒவ்வொரு இடத்துக்கும் பிரதேசத்துக்கும் வேறுபட்டு இருக்கிற நம்ம பேச்சுவழக்குத் தமிழ் மெல்ல மெல்ல ஒரு பொதுப் பாணிக்கு வந்துகொண்டிருக்கு அப்படீங்கிற மறுக்க முடியாத உண்மையைத்தான். அதாவது ஒவ்வொரு மாநிலத்துக்கும், மாவட்டத்துக்கும் மட்டுமில்ல ஒவ்வொரு ஊருக்கும் தனிப்பட்ட வட்டார வழக்குப் பேச்சுப் பாணி இருக்குது. இதை மண் வாசனைச் சொற்கள் அப்படீன்னு கூட சொல்லிக்க முடியும். ஒவ்வொரு ஊருக்கு ஊர் மாறுபட்டுக் கிடக்கிற இந்தப் பேச்சுவழக்குத் தமிழ் சமீப காலமா அவற்றோடைய தனித் தன்மைகளை இழந்து கொஞ்சம் கொஞ்சமா ஒரு பொதுவான பேச்சு மொழிவழக்காக உருவாகிக்கொண்டிருக்கு.

இதைத்தான் பேச்சுத் தமிழ் பொது மைய ஈர்ப்பு அப்படீங்கிற பெயரால நான் குறிப்பிட விரும்புறேன். அதாவது இடத்துக்கு இடம், ஆட்களுக்கு ஆட்கள் மாறுபட்டுக் கிடக்கிற பல வேறு வகையான பேச்சுத் தமிழ், ஒரு பொது மையத்தை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்குது. ஒரு மையத்தை அடைகிற அந்த பல வேறுபட்ட பேச்சுத் தமிழ் ஒரு பொதுவான இயல்பை ஏற்றுக் கொள்கிறது. சுத்தி வளைக்காம சுருக்கமாச் சொல்லணும்னா, தமிழினுடைய எழுத்திலக்கணம் எந்த இடத்திலேயும் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் ஓரே மாதிரி இருக்கிறது மாதிரியே, பேச்சு வழக்கும் மெல்ல மெல்ல ஒரே பாணிக்கு வந்துகொண்டிருக்கு.

ஒவ்வொரு ஊரிலேயும் வழக்கில் இருக்கிற பேச்சுத் தமிழ், வட்டார வழக்குச் சொற்கள் என்பவற்றினுடைய பயன்பாட்டுக்கும் வீரியத்திற்கும் ஏற்றாற் போல இந்த பொது மைய ஈர்ப்பினுடைய வேகம் மாறுபட்டாலும், நிச்சயமா எல்லா இடங்களிலேயும் இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கு. நான் சொல்லுறதை ஏற்றுக்கொள்ளாம யாராவது வந்து எங்கிட்ட கம்பு சுத்துனீங்கன்னா, உங்க அறியாமையை எண்ணி நான் பரிதாபப்பட மட்டும் தான் முடியும். அப்படி இல்லைங்கிறதுக்கு உங்களால ஏதாவது ஒரு ஊரையோ அல்லது ஒரு மக்கள் வகுப்பினரையோ உதாரணமாகக் காட்ட முடியும்னு நினைச்சீங்கன்னா, அந்த ஊர் அல்லது மக்கள் போதியளவு வெளியுலக இணைப்பு இல்லாதவங்களாகத் தான் இருக்க முடியும். குறிப்பாச் சொல்லணும்னா, தமிழ் சினிமாப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவங்களாகத்தான் இருக்க முடியும். ஆமாங்க. இந்தப் பேச்சுத் தமிழ் பொது மைய ஈர்ப்பு அப்படீங்கிற அமைதிப் புரட்சிக்கு பெரிய பங்களிப்பை தமிழ் சினிமாதாங்க வழங்கிக்கிட்டிருக்கு. இந்தத் தமிழ் சினிமாவினுடைய தாக்கம் தான் நேரடியாவே இதை நிகழ்த்திக்கிட்டிருக்கு.

தமிழ் சினிமா பழசுதான். நூற்றாண்டு விழாக்கண்ட தமிழ் சினிமா தான். ஆனா, ஈழத்தவர்கள் எங்களுக்கு அதனுடைய அதி உச்ச தாக்கம் சமீப காலமாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கு. ஆயுத யுத்தம் மௌனிச்சுப் போனதனால எங்களுக்கு வேறு பேசு பொருள் இல்லாமப் போச்சு. அந்த இடத்தை முழுசா இல்லேன்னாலும் பாதியளவு தமிழ் சினிமா தான் புடிச்சிருக்கு. ஒட்டுமொத்தமா இல்லேன்னாலும் கூட குறைந்த பட்சம் பல தென்னிந்தியத் தமிழ் சொற்கள் இந்தத் தமிழ் சினிமா மூலமா எங்களுடைய பேச்சு வழக்கில் சர்வ சாதாரணமாவே புழங்க ஆரம்பிச்சிருச்சு. இதை இன்னும் விளக்கமாச் சொல்லணும்னா, தென்னிந்தியத் தமிழ் மொழி உள்வாங்கல்னு சொல்லலாம். இதை தவிர்க்க முடியல்ல அப்படீங்கிறது எவ்வளவு உண்மையோ, அவ்வளவுக்கு அவ்வளவு உண்மை இதை முழுசா ஏற்றுக்கொள்ளுறதுல இருக்கிற சில சிக்கல் தான். இதை வெளிப்படையா ஏற்றுக்கொள்ள ஆரம்பிச்சிட்டா நம்மளோடைய அழகான பல நூறு வட்டார வழக்கு மண் வாசனைச் சொற்கள் மண்ணோடு மண்ணாக் காணாமப் போயிடும்.

ஆனாலும், இதைத் தடுக்கிறது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விசயம். ஏன்னா, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முதல்ல நம்ம முன்னோர்கள் தமிழை எப்படி உபயோகிச்சாங்களோ, எப்படி பேசிக்கிட்டாங்களோ அப்படியே தான் நாங்க இப்பவும் பயன்படுத்துகிறோமான்னு கேட்டா, ஒத்த வார்த்தையில சொல்லிட முடியும் அப்படி இல்லைன்னு. தமிழ் காலத்துக்குக் காலம் மாற்றத்தை உள் வாங்கிக்கொண்டுதான் வந்திருக்கு. அப்படி மாற்றத்தை உள்வாங்கி தன் நிலையை மாற்றியமைச்சுக்கிற சக்தி தமிழுக்கு இருக்கிறதனாலதான் இப்பவும் இந்த மூத்த மொழியினால உலகத்துல நிலைச்சிருக்க முடியுது. ஆகையினால சில மாற்றங்களை விரும்பியோ விரும்பாமலோ நாங்க ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கு. ஆனாலும், இதுல கவலைக்குரிய விசயம் என்னன்னா, தென்னிந்தியத் தமிழுல அதிகமா வேற்று மொழிக் கலப்பு இருக்கிறது தான். ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டுமில்லாம திராவிட மொழிக் குடும்பத்துல இருக்கிற வேறு சில மொழிகளும் தென்னிந்தியத் தமிழுக்குள்ள தாராளமாவே புழங்குது. அந்த வேற்று மொழிக் கலப்பைக் கொண்ட தமிழ் நம்ம ஈழத் தமிழோட கலக்கிறதை ஆரோக்கியமான மாற்றம்னு சொல்லிட முடியாது.

இந்த மாற்றம் இன்றைய இளம் தலைமுறையினரிடம் அதிகமாக் காணப்படுது. அவங்க தான் அதை விரைவாக உள்வாங்கிக்கிறாங்க. அதை ஒரு மொழிக் கவர்ச்சியாக எண்ணத் தோணுறதுதான் அதுக்குக் காரணம். ஆனாலும் இளைய தலைமுறையினரைக் காட்டிலும், சினிமாவுல ஒன்றிக் கிடக்கிற இன்றைய குழந்தைகள் மிக மிக வேகமா உள்வாங்கிக்கிறாங்க. இன்றைய குழந்தைகளாக இருக்கிற நாளைய இளம் தலைமுறையினரிடம் எதிர்காலத்துல இந்த மாற்றத்தை நாங்க சாதாரணமாவே பார்க்கப்போறோம் அப்படீங்கிறதுதான் உண்மை.

இந்த மாற்றத்தை ஈழத்திலே அதிகமாகப் பார்க்கக் கூடியது எங்கேன்னா, எம்மவர்களினுடைய இன்றைய கலைப் படைப்புக்களிலேதான். நம்மவர்களினுடைய இன்றைய பாடல்கள், குறுந்திரைப்படங்கள் என்பவற்றிலே இதை அதிகமா உணர முடியுது. காரணம், தென்னிந்தியக் கலைப்படைப்புல அதிகம் மூழ்கிப் போயிருக்கிற நம்ம சமூகம், அந்த சாயலைத்தான் எம்மவர்களுடைய படைப்புக்களிலேயும் எதிர்பார்க்கிறாங்க. அதுமட்டுமல்லாம, ஈழத்திலேயே பிரதேசத்துக்குப் பிரதேசம் பேச்சு வழக்கு மாறுபட்டுக் காணப்படுறதனால ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குரிய பேச்சு வழக்கை கலைப் படைப்புக்களில் பயன்படுத்தினால், மற்ற பிரதேச பேச்சு வழக்கை உடைய மக்களை அந்த படைப்பினால் கவர முடியாமலே போயிடுது. ஆகையினாலதான் இன்றைய இளம் ஈழக் கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புக்களில் மண் வாசனை பேச்சு வழக்குச் சாயலை அதிகம் பயன்படுத்த முடியாம இருக்கிறதும், எல்லோராலேயும் புரிஞ்சிக்கக் கூடிய இந்தத் தென்னிந்தியத் தமிழை கையாளுறதும்.

இத்தனை நேரமா என் கட்டுரையைப் படிச்சுக்கிட்டிருக்கிற உங்களுக்கு ஒரு விசயம் புரிஞ்சிருக்கும். அதாவது, பேச்சுவழக்குத் தமிழுல இருக்கிற இந்தக் கட்டுரை தென்னிந்தியப் பேச்சுவழக்குச் சாயலிலே தான் இருக்கு. மண் வாடை மொழி வழக்கை விட்டு இப்படி மாற்று வழக்குக்கு குடை புடிக்கிறது சரியா தப்பான்னு விவாதப் பொருள் இருந்தாலும், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லாம நான் இந்த சாயலைத்தான் என் எழுத்துக்களிலே பிரதிபலிக்க விரும்புகிறேன். காரணம், என்னுடைய எந்த எழுத்தும் குறித்த ஒரு சமூகத்தினால் மட்டும்தான் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், அந்த சமூகத்துக்கு மட்டுமே அபிமானமானதாகவும் இருந்துவிடக் கூடாதுன்னு நான் நினைக்கிறதுதான். ஆகையினாலே, பொதுவாவே எல்லோருக்கும் தெரிஞ்ச, இந்தப் பாணியையே என் பேச்சு வழக்கு படைப்புக்களினுடைய இயல்பாக உள்வாங்கிக்கொள்ள விரும்புகிறேன். மட்டுமல்லாமல், தென்னிந்திய இலக்கியப் படைப்புக்களும், திரைப்படங்களும்தான் என் எழுத்துக்களுக்கான ஆரம்பகால ஊன்றுகோல் அப்படீங்கிறதனால என்னால அதனுடைய தாக்கத்தில் இருந்து முழுசாவே விலகிட முடியாது.

ஆகவே, என் எழுத்துக்களையும் படித்து அதற்கான அங்கீகாரத்தை வழங்கிக்கொண்டிருக்கும் வாசகப் பெருமக்களுக்கு நான் இத்தால் தெரிவிக்க விரும்புறது என்னன்னா, “உங்க கவிதைகள், எழுத்துக்கள் எல்லாம் நம்ம ஊருக்கே உரிய மண்வாசனையோடு இல்லாம ஏன் தென்னிந்தியத் தமிழினுடைய தாக்கத்தை உடையதாக இருக்கு?” அப்படீன்னு இனியும் கேக்காதீங்கேன்னுதான்.






  

December 6, 2017



நான் பெத்த மகளே
நாற்று வயலே
நாளாகி ஆளாகி
நிக்கிறவளே

மாரிப் போகத்தில்
விதைச்சவளே
மாரி அம்மனப் போல்
வந்தவளே

காணி உழவு செஞ்சு
களையெல்லாம் நான் புடுங்கி
கூனிக் குறுகியொரு
கடன் வாங்கி விதை வாங்கி

நல்ல நாள் பார்த்து வந்து
நான் தனியா விதை எறிஞ்சி
மெல்ல நான் விட்ட தண்ணி
மேட்டு மண்ணும் பாய வச்சி

எறிஞ்ச விதையெல்லாம்
முளையாக முளைக்கயில
எரிஞ்ச என் உசிரில்
அனல் கொஞ்சம் அணைஞ்சதடி

தெரிஞ்ச இடமெல்லாம்
தெய்வமா நீ தெரிய
சரிஞ்ச என் பொழப்பு
சரி பாதி நிமிர்ந்ததடி

---------------------------

மழை வேண்டி மாசமொண்ணா
நான் செஞ்ச பூசைக்கெல்லாம்
மகராசி நீ தான்டி
கடன் தீர்க்க வேணுமடி

படி தாண்டி என் பொண்ணு
பக்கத்தூர் வாக்கப்பட
படியாத ஏழைக்கு நீ
படியளக்க வேணுமடி

படுக்கையிலே படுத்திருக்கும்
பாவி மக என் மனுசி
பசி தீர்க்க அடகு வச்ச
தாலிக் கொடி மீட்கணும்டி

உடுக்கையிலே கோடாங்கி
அடிச்சழைச்ச சாமி வந்து
கொடுக்கயிலே தவற விட்ட
வரமெல்லாம் கொடுக்கணும்டி

காத்தடிக்கும் வேளையிலே
நெல்லு மணி ஆடயிலே
அதில் ஒண்ணும் சிதறாம
பார்த்துக்கடி பார்த்துக்கடி

ஒரு நெல்லு விழுந்தாலும்
உன் அப்பன் என் கடனு
ஒரு ஜென்மம் கழிஞ்சாலும்
அழியாது கேட்டுக்கடி

அப்பன் அறுக்கும் வரை
காத்திருடி ராசாத்தி
ஆனைகளை காளைகளை
விரட்டிருடி ராசாத்தி

நல்ல இடம் வாக்கப்பட
பொறுத்திருடி ராசாத்தி
நல்ல விலை கிடைக்குமுண்ணு
நம்புறேன்டி ராசாத்தி

----------------------------

பேய்க் காத்து வீசுதம்மா
பெரு மழையும் பெய்யுதம்மா
பெருக்கெடுத்து வந்த வெள்ளம்
வயலோட சேருதம்மா

மூணு மாசமாவே
நான் நட்டு வளத்தவள
மூணே நிமிசத்துல
மூழ்கடிச்சுப் போகுதம்மா

பொட்டப் புள்ள நாலு பெத்து
கடன்காறன் ஆனவன
கரை சேர்க்கப் பெத்ததுவும்
கடனாகிப் போனதம்மா

கெட்ட மழை வந்து
குடி கெடுத்துப் போனதம்மா
பட்டதெல்லாம் போதும்
அலறிக் கொட்டை இருக்குதம்மா

December 2, 2017


இரு ஓரங்களும் மரங்கள் நிறைந்த அந்தக் கும்மிருட்டுச் சாலையில் எதிரே நின்று கையை அசைத்து வண்டியை நிறுத்தச் சொல்பவர் கான்ஸ்டபிள் மணி தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டு ஜீப்பை நிறுத்தினார் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்.

கான்ஸ்டபிள் மணி, “சார், இன்ஸ்பெக்டருக்கு நான் சொன்ன பங்களா பக்கத்துல தான் இருக்கு. ஜீப்பை இங்கேயே நிறுத்திட்டு நாங்க நடந்து போறது தான் சரி. இல்லேண்ணா அக்கியூஸ்ட் உசாராகிடுவானுங்க.”

“மணி, இன்ஃபார்மேஷன் கரெக்ட்டு தானே?”

“ஆமா சார். என் ரெண்டு கண்ணால பார்த்தேன் சார். அது அவனுங்க தான். போன மாசம் அவிசாவளையில நடந்த கொலைக் கேஸ்ல நாங்க தேடிக்கிட்டிருக்கிற அதே மூணு பேரு தான் சார்.”

“குட். இண்ணைக்கு அவனுங்கள மொத்தமாப் புடிச்சாகணும். இன்ஸ்பெக்டர் தான் என்னை ஸ்பார்ட்டுக்கு உடனே போகும்படி அனுப்பி வச்சாரு. அவரும் டீமும் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்திடுவாங்க. ஆனா, அதுவரைக்கும் நாங்க காத்துக்கிட்டிருக்க முடியாது. அவனுங்க தப்பிக்கிறதுக்குள்ள நாம அவனுங்களப் புடிச்சாகணும்.”

“ஆனா சார்! அவனுங்ககிட்ட துப்பாக்கி இருக்கு. ஒருத்தரை சுட்டுக் கொண்ணுட்டானுங்க”

“என்னய்யா சொல்றே! சுட்டுட்டானுங்களா? யாரை? எப்போ?”

“நீங்க வர்றதுக்கு முப்பது நிமிஷத்துக்கு முன்னாடி தான் சார். அவனுங்க ஒரு பொண்ண கடத்திக்கிட்டு வந்திருக்குறானுங்க. அதைப் பார்த்து தடுக்கப் போனவரைத்தான் சுட்டுட்டானுங்க”

“டெட் பாடி எங்கே?”

“அதையும் உள்ளே கொண்டு போயிட்டானுங்க சார்”

பேசிக் கொண்டே அந்தப் பழைய பங்களாவிற்கு அருகில் வந்து சேர்ந்தனர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸும், கான்ஸ்டபிள் மணியும். அது ஊரின் ஒதுக்குப்புறத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மிகவும் பழமையான பங்களா. பக்கத்தில் எந்த வீடுகளோ, ஆள் நடமாட்டமோ இல்லாமல் அந்த நள்ளிரவு வேளையில் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. பங்களாவிற்குள் எந்தவித வெளிச்சமோ, ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியோ இல்லாத போதும், அதன் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற ஸ்கார்பியோவை குறை நிலவின் மங்கலான வெளிச்சத்தில் அவர்கள் இருவராலும் மதில் சுவரின் மேலாகப் பார்க்க முடிந்தது.

“மணி, நாம இப்பவே ரொம்ப லேட் பண்ணிட்டோம். இனியும் லேட் பண்ண முடியாது. ஏதாவது ஏடாகூடமா நடக்கிறதுக்கு முன்னாடி நாம அந்தப் பொண்ணக் காப்பாத்தியாகணும். அது மட்டுமில்லாம அவனுங்கள உசிரோடவோ, பொணமாவோ புடிச்சாகணும்.”

“சார்! ஷூட்டிங் ஆர்டர் இல்லாம எப்படி?”

“ஷூட்டிங் ஆர்டர் எல்லாம் எடுத்தாச்சு. இப்போ அவனுங்களப் புடிச்சாகணும். இல்லேண்ணா முடிச்சாகணும்.”

“எஸ் சார்”

மிகவும் அமைதியாக இருவரும் மதில்மேல் ஏறி உள்ளே இறங்கினார்கள். அடர்த்தியாக வளர்ந்திருந்த புதர்களில் மறைந்திருந்தவாறே யாரும் தங்களை அவதானித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிசெய்து கொண்டு, இடைவெளியில்லாமல் வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே மறைந்தவாறே வேகமாகவும் அவதானமாகவும் பங்களாவை நோக்கி முன்னேறினார்கள். சில அடிகள் நகர்ந்ததும்

“சார்! அங்க பாருங்க.” காதுக்கருகில் ரகசியம் பேசுபவர் போல் மணி சொன்னார்.

மணியின் ஆட்காட்டி விரல் காட்டிக் கொண்டிருந்த இடத்தில் சீமெந்துத் தரையில் இரத்தக் கறைகள் நெடுங்கிலும் காணப்பட்டது.

“ஷூட் பண்ண டெட் பாடிய அந்தப் பக்கமாத்தான் இழுத்துப் போயிருக்கிறானுங்க.”

“ஆமா சார். போய் பார்க்கலாமா?”

“மணி, டெட் பாடியக் கண்டுபுடிக்கிறதனால நமக்கு எதுவும் ஆகப்போறதில்ல. முதல்ல அந்தப் பொண்ணக் காப்பாத்தியாகணும். டோன்ட் வேஸ்ட் தி டைம். கம் வித் மி.”

ஒருவாறாக சத்தம் எதுவும் இல்லாமல் பங்களாவின் கொல்லைப் புறத்திற்கு வந்து கதவைத் திறக்க முடிகிறதா என்று பார்த்தார் ராஜேஸ். ஆனால், அது பயனளிக்கவில்லை.

“சார், அங்க இருக்கு வழி.”

மணி காட்டிய திசையில் ஜன்னல் ஒன்று உடைந்திருந்தது. அதன் வழியாக முதலில் ராஜேஸும், பின்னர் மணியும் உள்ளே நுழைந்தனர். அவர்கள் நுழைந்தது பழைய தளபாடங்கள் அடுக்கப்பட்டிருந்த ஓர் அறையாக இருக்க வேண்டும். மிகவும் அவதானமாகவும், எதன் மேலும் மோதி விடாமலும் அவர்கள் நகரவேண்டியிருந்தது.

மிகவும் அமைதியாகவும், பயங்கரமான இருள் சூழ்ந்துமிருந்த அந்தப் பங்களாவின் நடுப் பகுதிக்கு வந்த பின்னர் தான் ஆட்கள் நடமாடும் சத்தத்தை ராஜேஸால் கேட்க முடிந்தது. அந்தச் சிறிய சத்தம் மாடியில் இருந்து தான் வருகிறதென்பதை முதலில் ராஜேஸ் உறுதிப்படுத்திக் கொண்டார். ஆனால், பங்களாவிற்குள் மிக மிக மங்கலான வெளிச்சமே இருந்தது. அது கண்ணாடி ஜன்னல்கள் ஊடாக பிறை நிலவிலிருந்து வந்து கொண்டிருந்த வெளிச்சமாக இருக்கக்கூடும். கிட்டத்தட்ட கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது ராஜேஸுக்கு.

கிசு கிசுக்கும் குரலில் மணி, “சார், அந்தப் பொண்ணோட சத்தத்தையே காணல்லயே. ஒரு வேளை அந்தப் பொண்ண ஏதாவது பண்ணி இருப்பானுங்களோ?”

“நானும் அதைத் தான் யோசிக்கிறேன் மணி. அப்படி இல்லேண்ணா, அவ மயக்கமா இருக்கவோ இல்ல அவ வாயை துணியால கட்டியிருக்கவோ வாய்ப்பிருக்கு.” என்று பதிலுக்குக் கிசு கிசுத்தார் ராஜேஸ்.

“ஆமா சார். அதுவும் கரெக்ட்டு தான். உடனே ஏதாவது ஆக்ஷன் எடுத்தாகணும்.”

ஒருவாறாகத் தடுமாறித் தடுமாறி மாடிப் படியைக் கண்டுபிடித்து இருவரும் மேல் தளத்தை அடைந்தார்கள். அங்கே கதவு திறந்திருந்த ஒரு விசாலமான அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. சத்தமில்லாமல் முன்னேறி இருவரும் அந்த அறையின் வெளிச் சுவரில் சாய்ந்து கொண்டு தங்களை மறைத்துக்கொண்டதும், ராஜேஸ் மிக அவதானமாக அறைக்குள் தன் கூரிய கண்களை ஓட விட்டார். அங்கே ஒரு சிறிய மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு பெண் கதிரையில் உட்கார வைத்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தாள். அவள் மயக்கத்திலிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள ராஜேஸுக்கு அதிக நேரம் ஆகவில்லை. அவளுக்குப் பக்கத்தில் ஒருவன் நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது  ஒரு கையில் பீர் போத்தலும், மறு கையில் ஒரு ரிவால்வரும் இருந்தது. மற்ற இருவரும் சற்றுத் தள்ளி தரையில் உட்கார்ந்து கொண்டு ஆளுக்கொரு பீர் போத்தலுடன் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவனிடம் தான் துப்பாக்கி இருக்கிறது என்பதை ராஜேஸ் முதலில் தன் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டார். பட்டென்று அவர் ஐந்து நொடிகள் மட்டும் கண்களை மூடித் திறந்தார். அதற்குள் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு முடித்துவிட்டார். இனிப் பேசவோ யோசிக்கவோ அவருக்கு எதுவும் இருக்கவில்லை. அடுத்த நொடி, ஏற்கனவே லோட் செய்து வைக்கப்பட்டிருந்த அவரின் ரிவால்வரிலிருந்து முதல் குண்டு துப்பாக்கி வைத்திருப்பவனை நோக்கிப் பாய்ந்தது. அடுத்தடுத்து மற்ற இருவரையும் குண்டுகள் பதம் பார்த்தது. அந்தத் திடீர் தாக்குதலுக்கு இரண்டு நிமிடத்திற்கு மேல் அவருக்குத் தேவைப்படவில்லை. மூன்றாவது நிமிடம் அவர்களின் கதை மொத்தமும் முடிந்து விட்டது. ஆபத்து எதுவுமில்லை என்பதை தன் கண்களினாலேயே உறுதிப்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணை நோக்கி விரைவாக முன்னேறும் போது ராஜேஸின் செல்போன் வைபரேட் பண்ணியது. அதை எடுத்துப் பச்சைப் பொத்தானை அழுத்தி விட்டுக் காதில் வைத்தார்.

“ராஜேஸ், நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். ஏரியா பூராவும் இப்போ நம்ம கன்ரோல்ல இருக்கு. பங்களாவச் சுத்தி போலீஸ் நிக்குது. நீங்க எங்க இருக்குறீங்க?”

“சார், நான் பங்களாவுக்குள்ள தான் இருக்கிறேன். நிலமை இப்போ என் கன்ரோல்ல வந்திருச்சி. அவனுங்க யாரும் உயிரோட இல்ல சார். என் கௌண்டர் பண்ணியாச்சி. ஒரு பொண்ண கடத்திக்கிட்டு வந்திருக்கிறானுங்க. அது மட்டுமில்லாம, ஒரு மர்டர் பண்ணி இருக்குறானுங்க சார்.”

“வெல் டன் மிஸ்டர் ராஜேஸ். தனி ஒரு ஆளா சாதிச்சிட்டீங்க. ஆனா, நீங்க தனியா உள்ள போனது ரொம்பத் தப்பு. அவனுங்க ரொம்ப மோசமானவனுங்க.”

“சார், நான் தனியா எதுவும் பண்ணல்ல. கான்ஸ்டபிள் மணியும் கூட இருக்கிறாரு. அவரு கூட இல்லேண்ணா இதெல்லாம் பண்ணியிருக்க முடியாது.”

“யோவ்! என்னய்யா உழர்றே? மணி உன் கூட இருக்குறாரா? அவனுங்க சுட்டுக் கொண்ணது மணியத்தான்யா. மணியோட டெட் பாடி இங்க வெளிய தான் இருக்கு. பார்க்கல்லையா நீ?”

முற்றிற்று