April 24, 2020

Image source: wallpaperaccess.com













எம்மில் பலரது குழந்தைப் பருவமானது `டாம்` மற்றும் `ஜெர்ரி` என்ற அற்புதமான இரு கதாபாத்திரங்களால்தான் அதிகம் சுவாரஸியமாக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. அவர்களின் சேட்டைகளும் குறும்புகளும் சிறுவர்களை மட்டுமா இரசிக்க வைத்தது? நிச்சயமாக இல்லை. பெரியவர்களைக்கூட வயது வரம்பின்றி இரசிக்க வைத்தது. இன்றும் இரசிக்கவும் சிரிக்கவும் வைத்துக்கொண்டேதான் இருக்கிறது. காலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற, உலகையே மழலைகள் போல் ஆக்கிய அற்புதமான கார்ட்டூன் படைப்பான `டாம் அண்ட் ஜெர்ரி` (Tom & Jerry) பற்றி நம்மில் பலரால் அறியப்படாத அந்த 6 உண்மைகளை, ஒரு நல்ல இரசிகனாக உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் உவகையடைகிறேன். மனங்கவர்ந்த படைப்புக்களையும், கதாபாத்திரங்களையும் கொண்டாடித் தீர்ப்பதைத் தவிர எம் போன்ற இரசிகர்களுக்கு வேறு என்ன இன்பம் இருந்துவிட முடியும்.


1. உலகப்புகழ் பெற்ற `டாம் அண்ட் ஜெர்ரி` கார்ட்டூன் தொடரை உருவாக்கியவர் எம்மில் பலர் நினைப்பது போல் `ஜீன் டீச்` (Gene Deitch) என்பவர் கிடையாது!
Image source: warnerbros.com
1940 ஆம் வருடம் வில்லியம் ஹன்னா (William Hanna) மற்றும் ஜோசப் பார்பெரா (Joseph Barbera) ஆகிய இருவர் சேர்ந்து உருவாக்கிய கார்ட்டூன் படைப்பே இந்த டாம் அண்ட் ஜெர்ரி ஆகும். இவர்கள் 1940 ஆம் வருடம் முதல் 1958 வரை மொத்தமாக 114 அத்தியாயங்களை இந்த டாம் அண்ட் ஜெர்ரியில் இயக்கியிருக்கிறார்கள். இவர்கள் டாம் அண்ட் ஜெர்ரி மட்டுமல்லாமல் புகழ்பெற்ற இன்னும் பல படைப்புக்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் தங்கள் புதிய கார்ட்டூன் படைப்பிற்கு பூனை, எலி என்ற கருப்பொருளை தம் நிறுவனமான `MGM கார்ட்டூன் ஸ்டூடியோ` வில் முன்மொழிந்தபோது, அவர்களுடன் பணியாற்றிய பல சக ஊழியர்கள் அதை மிகவும் பழைய, வழமையான கருப்பொருள் என்று கூறி நிராகரித்தார்கள். ஆனால், ஹன்னா மற்றும் பார்பெரா தங்களின் கருப்பொருளிலும், தங்களின் கற்பனையிலும் நம்பிக்கை கொண்டு, தாங்கள் விரும்பிய பூனை, எலி கருப்பொருளை கார்ட்டூனாக வடிவமைத்தார்கள். அவர்கள் எண்ணியது போலவே, அது திரையரங்குகளில் தொடர்ச்சியாக திரையிடப்பட்ட போது இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றதுமட்டுமல்லாமல், சிறந்த குறுகிய கருப்பொருளுக்கான கார்ட்டூன் என்ற அடிப்படையில் அகாடமி விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அன்று முதல் அவர்களின் படைப்பின் புகழ் பட்டித்தொட்டியெங்கும் பரவத்தொடங்கிவிட்டது.

இதில் மற்றுமொரு சுவாரஸியமான விடயம் என்னவென்றால், 1958 ஆம் வருடத்துடன் டாம் அண்ட் ஜெர்ரியின் இயக்கம் நின்றுவிடவில்லை. ஆரம்பகர்த்தாக்களான ஹன்னா மற்றும் பார்பெரா ஆகியோருக்குப் பின்னர் 1961 ஆம் ஆண்டு ஜீன் டீச் (Gene Deitch) என்பவரால் மேலும் 13 அத்தியாயங்கள் டாம் அண்ட் ஜெர்ரியில் இயக்கப்பட்டன. ஆம் நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியானது. இந்த ஜீன் டீச் என்பவர்தான் கடந்த வாரம் (16.04.2020) தன் 95 ஆவது வயதில் காலமானவர். இணையவாசிகள் பலரும் இவர்தான் டாம் அண்ட் ஜெர்ரியின் ஆரம்பகர்த்தா என்பது போல சமூக ஊடகங்கள் முழுக்க அனுதாபங்களை தாராளமாக அள்ளி வீசியிருந்தார்கள். ஜீன் டீச் என்பவர் டாம் அண்ட் ஜெர்ரியை உருவாக்கியவரல்ல என்ற உண்மை ஒரு புறமிருக்க, இதில் துர்ப்பாக்கியமான மற்றொரு விடயம் என்னவென்றால், ஜீன் டீச் என்பவரால் இயக்கப்பட்ட அத்தியாயங்கள்தான் டாம் அண்ட் ஜெர்ரியின் அத்தியாயங்களிலேயே மோசமான அத்தியாயங்களாகக் கருதப்படுகின்றன.

ஜீன் டீச் இற்குப் பின்னர் சக் ஜோன்ஸ் (Chuck Jones) என்பவர் 1963 ஆம் வருடம் முதல் 1967 ஆம் வருடம் வரை 34 அத்தியாயங்களை இயக்கினார். அதன் பிற்பாடு, 2001 ஆம் வருடம் "தி மேன்ஷன் கேட்" என்று அழைக்கப்படும் தொலைக்காட்சிக்காக கார்ல் டோர்கே (Karl Toerge) என்பவரால் ஒரு குறும்படம் இயக்கி வெளியிடப்பட்டதுடன், டாம் அண்ட் ஜெர்ரியின் இறுதி அத்தியாயமானது 2005 ஆம் வருடம் ஜோசப் பார்பெரா மற்றும் ஸ்பைக் பிராண்ட் (Joseph Barbera and Spike Brandt) ஆகியோரால் இயக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


2. டாம் மற்றும் ஜெர்ரியின் ஆரம்பகாலப் பெயர் ஜாஸ்பர் (Jasper) மற்றும் ஜிங்க்ஸ் (Jinx) என்பதாகும்.
Image source: timesofisrael.com
டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரானது ஆரம்பத்தில் அந்தப் பெயரில் வெளியிடப்படவில்லை. ஆரம்ப அத்தியாயங்கள் `Puss Gets the Boot` என்ற பெயரிலேயே அதன் இயக்குனர்களான ஹன்னா மற்றும் பார்பெரா ஆகியோரால் வெளியிடப்பட்டது. அந்த அத்தியாயங்களில் பூனை டாம் இன் பெயர் `ஜாஸ்பர்` என்பதாகவும் எலி ஜெர்ரியின் பெயர் `ஜிங்க்ஸ்` என்பதாகவுமே பெயரிடப்பட்டிருந்தது. எனினும் அந்தக் கார்ட்டூன் தொடரின் தொடர்ந்தேர்ச்சியான வெற்றிக்குப் பின்னர், அந்த இரு கதாபாத்திரங்களினதும் பெயர்களை மாற்ற விரும்பிய அதன் இயக்குனர்களான ஹன்னா மற்றும் பார்பெரா ஆகியோர், தங்கள் நிறுவனத்திற்குள் ஒரு உள்ளக போட்டியை நடாத்தினர். அந்தப் போட்டியில் ஜான் கார் என்ற ஒருவரால் முன் மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயரே டாம் மற்றும் ஜெர்ரி (Tom & Jerry) என்பதாகும். வெற்றியாளரான அவருக்கு பரிசாக அன்றைய நாளில் ஐம்பது டாலர்கள் வழங்கப்பட்டது. கதாபாத்திரங்களுக்கு வழங்கப்பட்ட இந்த டாம் மற்றும் ஜெர்ரி என்ற பெயரே, பின்னர் கார்ட்டூன் தொடரின் பெயராகவும் மாற்றப்பட்டது.


3. டாம் இன் உரிமையாளரான பெண்மணியின் முகம் ஒரேயொரு அத்தியாயத்தில் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது.
Image source: wikipedia.org
டாம் இன் உரிமையாளராகக் காட்டப்படுகிற பெண்மணியின் கால்கள் மட்டுமே தொடர் முழுக்கக் காட்டப்பட்டாலும், 1950 ஆம் வருடம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட அத்தியாயத்தில் மாத்திரம், அவரின் முகமும் முழு உருவமும் சில விநாடிகளுக்கு மாத்திரம் காட்டப்பட்டது. இந்தப் பெண்மணி ஒரு கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்போல காட்டப்பட்டதனாலும், அவரின் உச்சரிப்புகள் கறுப்பு இனத்தவர் போல இருந்ததனாலும், சிலரால் அது இனவெறி என்று விமர்சிக்கப்பட்டதனால், அது ஒரு மெல்லிய வெள்ளை இனப் பெண்மணியாக பின்னைய அத்தியாயங்களில் மாற்றியமைக்கப்பட்டது.


4. ஆரம்ப அத்தியாயங்களில் டாம் ஒரு நான்கு கால்களில் நடக்கக்கூடிய சாதாரண பூனை போல காட்டப்பட்டு, பின்னர் இரண்டு கால்களில் நடக்கும் கதாபாத்திரமாக மாற்றியமைக்கப்பட்டது.
Image source: lolwot.com
டாம் கதாபாத்திரமானது ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு உண்மையான பூனையின் தோற்றத்திலேயே வடிவமைக்கப்பட்டது. அது நான்கு கால்களில் நடக்கின்ற பூனையாகவே காட்டப்பட்டதுடன், அது தடிமனான உரோமங்களையும், பல முகச் சுருக்கங்களையும், புருவங்களையும் கொண்டிருந்தது. 1940 ஆம் வருடத்தின் இறுதிக் காலப்பகுதிகளில்தான் டாம் கதாபாத்திரத்தில் முதலில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், தொடர் நெடுங்கிலும் டாம் கதாபாத்திரத்தில் ஆங்காங்கே மாற்றங்கள் செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதில் சுவாரஸியமான விடயம் என்னவென்றால், ஜெர்ரி கதாபாத்திரமானது பெரும்பாலும் ஆரம்பத்தில் இருந்தது போலவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது.


5. டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனானது ஏழு ஆஸ்க்கார் விருதுகளை வென்றிருப்பதுடன், மேலும் ஆறு ஆஸ்க்கார் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுமிருந்தது.
Image source: wikipedia.org
திரைக்கு வந்தது முதற்கொண்டு இன்றுவரை உலக மக்களால் கொண்டாடப்படுகின்ற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரானது 1943 முதற்கொண்டு 1953 ஆம் வருடம் வரையான காலப்பகுதிகளில் வெளியான அத்தியாயங்களுக்காக ஏழு ஆஸ்க்கார் விருதுகளை அள்ளிக் குவித்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் தொடரினை 1940 முதல் 2005 ஆம் வருடம் வரை பல்வேறுபட்டவர்கள் இயக்கியிருந்தாலும், அதன் ஆரம்பகர்த்தாக்களான ஹன்னா மற்றும் பார்பெரா ஆகியவர்களால் இயக்கப்பட்ட அத்தியாயங்கள் மாத்திரமே ஆஸ்க்கார் விருதுகளை வென்றிருக்கின்றன.


6. டாம் அண்ட் ஜெர்ரிக்கு இப்போது வயது 80!
Image source: pinterest.com
ஆம்! 1940 ஆம் வருடம் உருவாக்கப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதியுடன் எண்பது வயதுகள் பூர்த்தியாகிவிட்டது. இனி நாம் அவர்களை டாம் தாத்தா, ஜெர்ரி தாத்தா என்று மரியாதையுடன் அழைப்போமாக!

- இந்தப் பதிவு உங்களைக் கவர்ந்திருந்தால், கீழேயுள்ள பட்டன்களைப் (Button) பயன்படுத்தி, Like மற்றும்`Share` செய்யுங்கள்.

- Tom & Jerry` தொடர்பான உங்களின் சுவாரசியமான அனுபவங்களை Comment மூலமாக எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

- நீங்கள் இன்னும் எழுத்தாளன் தளத்தின் முகநூல் பக்கத்தை Like செய்யாதவர் எனின், கீழுள்ள `Like` Button ஐ அழுத்தி, இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.








April 17, 2020














வன் வெறித்தனமாக தான் படுத்திருந்த காங்கிரீட் தரையின் மீது மூன்று முறை தன் கையை மடித்து ஓங்கி இடித்தான். அவனுக்கு வலி தெரியவில்லை. அவனின் கண்கள் ஒரு வேட்டைப் புலியின் கண்களைப்போல, அறையின் மேல் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அவனின் தாகம் அடங்க வழி தெரியவில்லை. அறை முழுவதும் நிறைந்து கிடந்த சிகரெட் பஞ்சுகள் காற்றில் அங்குமிங்கும் உருண்டு அவனை இன்னும் வெறிகொள்ள வைத்தது. நேற்றுவரை அவனுக்குப் பதற்றமும் நடுக்கமுமாய் இருந்தது. ஆனால், இன்று காட்டுமிராண்டித்தனமான கோவம் பீறிட்டுக்கொண்டிருந்தது. நாள் பொழுது மறந்து அவன் அந்த அறைக்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தான். அவன் ஒரு எழுத்தாளன் என்பதைக்கூட மறந்து, இப்போது ஒரு மனநோயாளிபோலவும், சில நேரங்களில் வெறிபிடித்த இராட்சச விலங்குபோலவும் அந்த அறையிலேயே உறுமத்தொடங்கினான். அவனின் வெறி, ஏக்கம், கோபம் எல்லாமே ஒரு துண்டு சிகரெட்டுக்காகத்தான்.

அவனின் பெயர் ரட்சகன். சொந்தப் பெயரல்ல, தானாகச் சூட்டிக்கொண்ட புனைப்பெயர்தான். அவன் ஒரு இலக்கியவாதியும் புகழ்பெற்ற எழுத்தாளனும் கூட. மூன்று மாதங்களுக்கு முன் வெளிவந்த அவனது முதலாவது நாவலான `இரத்தம் பருகும் கத்தி` வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அவனுக்குத் தன் முதல் நாவல் மூலமே புகழின் உச்ச இன்பம் தாராளமாய்க் கிடைத்தது. அது ஒரு கொலைகாரனின் கத்தியை மையமாகக் கொண்ட நாவல். மிக விறுவிறுப்போடு நகர்ந்து செல்லும் அந்தக் கதை நெடுங்கிலும் இரத்த வாடை நிறைந்திருக்கும். அவனுக்கு அப்படியான மிக விறுவிறுப்பான கதைகளை எழுதுவதிலும் படிப்பதிலும் அலாதி இன்பம். ஆனால், அவன் எதை எழுதுவதாகயிருந்தாலும், படிப்பதாகயிருந்தாலும், அவனால் தனியாக அவற்றைச் செய்துவிட முடியாது. உலகின் அநேக எழுத்தாளர்களைப் போல அவனுக்கும் சிகரெட் என்ற அந்தத் துணை அவசியமாகவிருந்தது.

ஆம், சிகரெட்டே தான்! அவனுக்கு ஒரு நாள் ஆரம்பிப்பதும் முடிவதும் அந்த சிகரெட் புகையோடுதான். `இரத்தம் பருகும் கத்தி` நாவலை எழுதி முடிக்கும் போது கிட்டத்தட்ட அவன் நானூறுக்கு மேற்பட்ட சிகரெட்டுக்களை ஊதித் தள்ளியிருந்தான். எழுதிக் கொண்டிருக்கும் போது கதையில் எங்கேனும் தொய்வு வருகிறது என்று எண்ணினால், உடனே ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துப் பற்ற வைத்துவிட்டு, இரண்டு விரல்களுக்கிடையில் அதை இடுக்கிக்கொண்டு, கண்களைப் பாதி மூடியவாறு, கதையை எண்ணிக்கொண்டு, நீளமாக ஒரு தடவை ஆத்மார்த்தமாக புகையை உள்ளிழுப்பான். அடுத்த சில நிமிடங்களில் அவன் கண்கள் பளிச்சென்று ஒளிரத் தொடங்கும். அதன் பின்னர் கை வேகமாகக் காகிதங்களின் மீது இயங்கத்தொடங்கும். அவனின் கற்பனைக் காட்டாறு, அந்தச் சிகரெட் இழுவையில் கரைபுரண்டோடும் சுகத்தையும், இரகசியத்தையும் அவன் நன்கு அறிந்திருந்தான். அதனால் அவன் ஒரு சிகரெட் பிரியன் என்ற நிலையைக் கடந்து, சிகரெட் பித்தன் என்ற நிலையை அடைந்திருந்தான்.

ஆனால், இப்போது நிலைமை மிக மோசமாகவிருந்தது. அவன் சிகரெட் புகைத்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. கொரோனா என்ற வைரஸ் மரணத்தொற்று ஊர் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது. அரசு நாடு முழுவதையும் வீடுகளுக்குள் முடக்கியிருந்தது. கடைகள் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. தெருவில் நடக்கும் கால்கள் போலீஸின் இரும்புத் தடிகளுக்குப் பதில் கூறவேண்டியிருந்தது. அது பத்தொன்பதாம் நாள், பொழுதுசாயும் வேளை. அவனுக்கு சிகரெட் கிடைப்பதற்கு எந்த வழிகளும் இல்லாதிருந்தது. முதல் இரண்டு நாட்களை தன்னிடமிருந்த பாதிப் பெட்டி சிகரெட்டுக்களுடன் கழித்தான். அடுத்த இரண்டு நாட்களை அறையில் குவிந்து கிடந்த மிகுதித் துண்டுச் சிகரெட்டுக்களைப் பொறுக்கியெடுத்து, அதை புகைக்க முயன்று கழித்தான். அதுவும் தீர்ந்த பிற்பாடு, அவனுக்கு நாதியற்றுப் போனது. சிகரெட் இல்லாமல் முதலில் சோர்ந்து போனான், பின் சத்தமில்லாமல் அழுதுகொண்டான், பின்னர் நெஞ்சு படபடப்பதைக் கண்டு இறந்துவிடப்போகிறோம் என்று மகிழ்ந்தான். அவனுக்கு சிகரெட் இல்லாத ஒரு சபிக்கப்பட்ட உலகத்தை விட இறந்துவிடுதல் ஆறுதலானதாகத் தோன்றியது. இப்போது, எல்லா நிலையையும் கடந்து வெறி பிடித்தவன் போல் ஆகிவிட்டான். சிகரெட்டுக்காக, தான் குடியிருக்கும் எட்டு மாடிக் குடியிருப்பின் உச்சியிலிருந்து குதிக்கக் கூடத் தயாராகவிருந்தான்.

அவன் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இரண்டாவது நாவல் இறுதி அத்தியாயங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், சிகரெட் இல்லாத காரணத்தால் அவனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. சிகரெட் கிடைக்கவில்லையென்பதைக் காட்டிலும், தன் கதை இடை நடுவில் திக்கற்று நிற்பது அவனை இன்னும் வெறிகொள்ள வைத்தது. இதுவும் ஒரு விறுவிறுப்பான நாவல் தான். பல உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கிற ராஜேஸ் என்கிற ஒருவன் பற்றிய நாவல். நாவலுக்கு இன்னும் அவன் பெயர் வைக்கவில்லை. இந்த நாவலை எழுதத் துவங்கிய ஆரம்ப நாட்களில், தாராளமாய்ச் சிகரெட் கிடைத்தது. ஆகையினால், அவனின் கற்பனைகள் எழுத்துக்களாகத் துள்ளி விளையாடின. ஆனால், அப்போதும்கூட சில இடையூறுகள் இருக்கத்தான் செய்தன.

அந்த இடையூறுகளுக்குக் காரணமானவள் யாமினி. தான் கணவனுக்கு இணங்காத பெண் என்பதை அவள் அடிக்கடி தன் செயல்களால் நிரூபித்துக்கொள்வாள். அவளின் நடத்தை மீது, அவன் எப்போதும் சந்தேக அலையை உருவாக்கிக்கொண்டேயிருந்தான். அவனுக்கு அவளைப் பிடிக்காவிட்டாலும், வேறு வழியில்லாததால் அவளை சகித்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அவளால் இடைஞ்சல்கள் எதுவும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால், அந்த எண்ணம் பல நாட்கள் தொடர்ந்து நீடிக்கவில்லை. சிகரெட் இல்லை என்ற காரணத்தால், எப்போது தன் நாளாந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் தடுமாறத் தொடங்கினானோ, அப்போதே யாமினியால் அவனின் நிம்மதி குலையத் தொடங்கிவிட்டது. இப்போது அவன் யாமினி பற்றி அதிகமாக சிந்திக்கத் தொடங்கியிருந்தான். அவளின் நடத்தையும், குணங்களும் அவள் ஒரு மோசமான பெண்தான் என்பதை தெளிவாக விளக்கியது. அந்த எண்ணம் அவனைப் பலவாறு தொந்தரவு செய்தது. பல நேரங்களில் அவன் அவள் பற்றிய எண்ணங்களை அடக்க முயன்றான். ஆனால், அடக்க முயல்கிற போதுதான், அதன் தொந்தரவு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இப்படி ஒருத்தி இல்லாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்குமோ என்று அடிக்கடி எண்ணிக்கொண்டான். சில நேரங்களில் இவளைக் கொலை செய்துவிடலாமா என்று கூட எண்ணினான்.

யாமினிக்குப் பல ஆண் நண்பர்கள் இருந்தாலும், உண்மையில் அவள் நடத்தையில் குளறுபடியுள்ளவள்தானா என்பது இதுவரை அவன்கூட உறுதி செய்யாத ஒன்றுதான். எது எப்படியிருந்தாலும், இப்போது அவள் பற்றிய நச்சரிக்கும் எண்ணங்கள் அவனுக்கு பெருந்தொல்லையாக மாறியிருந்தது. சிகரெட் கிடைக்காததனால், இன்று வெறி பிடித்தவன் போல ஆகியிருந்த அவனுக்கு, அவளின் மீது காட்டுமிராண்டித்தனமான கோபம் வந்தது. அவளை என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கிக்கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கே நன்கு தெரிந்திருந்தது, சிகரெட் இல்லாமல் தன்னால் அதற்குக் கூட ஒரு முடிவு கண்டுவிட முடியாது என்று.  ஆகமொத்தத்தில், சிகரெட்தான் அவனின் மொத்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்று புரிந்து கொண்டான். சிகரெட் மட்டும் கிடைத்துவிட்டால், யாமினிப் பிசாசுக்கு மட்டுமல்ல, தன் மொத்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணினான். ஆகவே, துணிந்து முடிவெடுத்தான்.

இன்று போலீஸிடம் அடிவாங்கினாலும் பரவாயில்லை என்று எண்ணியபடி, எங்காவது தேடி சிகரெட் வாங்கிவிட வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறினான். அப்போதுதான் மெல்லிய இருள் படியத் தொடங்கியிருந்தது. சூரியக் கரங்களின் நகக்கீறல் பட்டு கீழ்வானம் சற்றுச் சிவந்திருந்தது. ஆள் நடமாட்டமற்ற அந்த மாநகரில், மனம் போன திக்குகளில் நடக்கத் தொடங்கினான். கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. பிரதான கடைத் தெருக்களை விட்டுவிட்டு, குறுக்குத் தெருக்களில் நடக்கத் தொடங்கினான், ஏதேனும் சிறிய பெட்டிக் கடையாவது கண்ணில் படாதா என்று. அவன் நினைத்தது போல ஒரு சிறிய கடை கண்களில் பட்டது. ஆனால், அதுவும் பூட்டப்பட்டுத்தான் இருந்தது. இருந்தபோதும், அது தனிக்கடையாக இல்லாமல், ஒரு வீட்டோடு சேர்ந்த கடையாக இருந்தமை கொஞ்சம் நம்பிக்கையைத் தந்தது. ஆர்வத்தோடு வீட்டுக் கதவைத் தட்டினான். கிழவி ஒருத்தி ஜன்னலைத் திறந்து

“யாரு?“

“அம்மா, கடை திறக்கலையா?“

“கடை திறக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறது தெரியாதா? என்ன வேணும்?“

“அம்மா, சிகரெட் பெட்டி ரெண்டு தாங்க. இல்ல.. இல்ல… இருக்கிறது மொத்தத்தையும் தாங்க. எத்தனை இருக்குன்னு பாருங்க.”

“இரு.. பாக்கிறேன்.“

“ம்..“

“சிகரெட் எதுவும் இல்ல. இந்தப் பீடிதான் இருக்கு.“

என்று கூறியவாறு ஒரு கட்டு பீடியை ஜன்னலினூடாக நீட்டினாள் அவள். அவன் அதை வாங்கி அவளின் முகத்தில் ஓங்கி எறிந்துவிட்டு

”போடி! கூறு கெட்ட கிழவி“

என்று உரக்கக் கத்திவிட்டு நடக்கத் தொடங்கினான். அவள் அதிர்ச்சி கலையாமல் நின்றிருந்தாள். இதைப் பார்த்துக்கொண்டு வீதியோரம் படுத்திருந்த பிச்சைக்காரன் ஒருவன் சத்தமிட்டான்

”டேய்”

அவன் திரும்பிப் பார்த்தான். ஆனால் பதில் கூறவில்லை. பிச்சைக்காரன் மீண்டும்

“டேய்! சிகரெட் வேணுமா?“

“இருக்கா?“

“இருக்கு. காசு குடுப்பியா?“

“குடுக்கிறேன்”

பிச்சைக்காரன் தன் அழுக்குப் பைக்குள் கை விட்டுத் துலாவி, இரண்டு சிகரெட்டுக்களை எடுத்து நீட்டினான். சற்று அழுக்குப் பட்டிருந்தாலும் அது நல்ல நிலையில் தான் இருந்தது. இரண்டையும் வாங்கிக்கொண்டு, தன் பாக்கெட்டுக்குள் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து பிச்சைக்காரனின் கைகளில் கொடுத்து “வச்சிக்க” என்றான்.

பிச்சைக்காரனுக்கு சந்தோசம் தாளவில்லை. உடனே தன் அழுக்குப் பையிலிருந்து தீப்பெட்டியை எடுத்து ரட்சகனின் வாயில் இருந்த சிகரெட்டைப் பற்ற வைத்தான். ரட்சகன் தன் கண்களை பாதி மூடிக்கொண்டு, புகையை மெல்ல உள்ளிழுத்தான். ஆகா! தான் மீண்டும் பிறந்துவிட்டது போலிருந்தது அவனுக்கு.  மெல்ல மெல்ல ஒவ்வொரு இழுவையையும் இரசித்து இரசித்து உள்ளிழுத்தான். அவனின் ஆன்மா ஆசுவாசப்பட்டதுபோலிருந்தது. புகைவிட்டவாறே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போதுதான் யாமினியின் நினைப்பு வந்தது. அவளின் நச்சரிப்புக்கு ஒரு முடிவுகட்டியாகவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, கண்களைப் பாதி மூடி புகையை மெல்ல உள்ளிழுத்தான். மூன்றாவது இழுவையில் அவன் தீர்மானித்துவிட்டான், அவளை என்ன செய்வதென்று. இனியும் பொறுத்திருக்க வேண்டாம். அவளை கொலை செய்துவிடுவதுதான் சரி. அவளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

கொலை செய்வது என்று தீர்மானித்த பின், அவனுக்கு தாமதிக்க விருப்பமில்லை. வீட்டை வந்து சேர்ந்ததும், நேராக தன் அறைக்குள் நுழைந்தவன், இரண்டாவது சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். அந்த நடத்தைகெட்ட பிசாசினைக் கொலை செய்வது என்பதே, அவனுக்குக் கிளர்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு தடவை புகையை நன்கு உள்ளிழுத்து விட்டான். அந்தப் போதை கலையும் முன்பு

”தன் மனைவி யாமினியின் மீது, சந்தேகம் வலுத்த ராஜேஸ், அவளை கத்தியால் மூன்று முறை குத்திக் கொன்றான்.” என்று தன் நாவலின் கதையை, தொடர்ந்து எழுதத் தொடங்கினான்.

இப்போதுதான் ரட்சகனுக்கு பெரும் நிம்மதியாகவிருந்தது. யாமினி என்ற கதாபாத்திரத்தை அந்த அத்தியாயத்தோடு குழிதோண்டிப் புதைத்து விட்டு, அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்காக காகிதத்தை அடுத்த பக்கம் புரட்டினான்.

முற்றும்.


April 12, 2020














ஓர் இரகசியம் உடைக்கப்படுகின்ற போது, அதனால் ஒன்றில் அவ் இரகசியத்திற்குச் சொந்தமானவருக்கு அச்சம் ஏற்படலாம் அல்லது அதை அறிந்து கொள்பவர்களுக்கு அச்சம் ஏற்படலாம். இது இரண்டாம் வகையைச் சார்ந்தது.  அந்த இரகசியங்கள் வெறுமனே ஓரிருவரை மாத்திரம் கிலிகொள்ளச் செய்யவில்லை. முழு உலகையும் பீதியில் உறைய வைத்தது. இப்படியும் நடக்கக் கூடுமா என்று சாமான்ய மக்களையும், இவற்றைச் செய்தது அவர்கள் தானா என்று பல சாணக்கிய அரசுகளையும் விழி பிதுங்க வைத்தது. அவர்களின் வேட்டைத் தந்திரங்கள் ஒவ்வொன்றும் நெற்றியடியாகவேயிருந்தது. எதிரிகள் கதிகலங்கினார்கள். நட்பாடியவர்கள் கூட நடுங்கி நின்றார்கள். அவர்கள் குற்றங்களாலேயேதான் தங்களைச் செதுக்கிக் கொண்டார்கள். அவர்களின் அதிகார எல்லை வானளாவியது. அவர்களின் சாகச வெறி என்றும் தணியாதது. கொலை, கொடூர சித்திரவதை, நாடு விட்டு நாடு ஆட்கடத்தல், கொள்ளை என்று அவர்கள் எதையும் செய்யத் தயங்காதவர்கள். இவற்றை விட மோசமானவற்றைக்கூட சர்வசாதாரணமாகச் செய்தவர்கள். இன்னும் செய்துகொண்டிருப்பவர்கள். அவர்களின் இரகசியங்கள் வெளிக் கசிந்த போது அவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால், உலகம் உறைந்து போனது. அமெரிக்கா உட்பட பல வல்லரசுகள் வாய் பிழந்து நின்றன. ஆனால், அவர்கள் எங்கும் தாமதிக்கவில்லை. அடுத்த இலக்கை நோக்கி இன்றும் போய்க்கொண்டேதானிருக்கிறார்கள்.


நூல் விமர்சனம் – `மொஸாட்`

பல ஆங்கில மற்றும் தமிழ் நூல்களின் ஆதாரங்களினூடே என்.சொக்கன் அவர்களினால் குமுதம் இதழில் வெளிவந்த தொடரின் விரிவாக்கப்பட்ட நூல் வடிவமே மொஸாட். உலகின் பலமான உளவுத் துறையாகக் கருதப்படும் இஸ்ரேலிய நாட்டின் மொஸாட் அமைப்புத் தொடர்பான பல திகிலூட்டும் இரகசியங்களின் பதிவே இந்நூல். எந்தவொரு நாட்டின் உளவுத் துறைக்கும் இல்லாத அதிகாரம் மொஸாட்டிற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்க வேண்டுமாயின், அவர்கள் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். எங்கும் எவரையும் கொலை செய்யலாம், நாடுவிட்டு நாடு ஆட்கடத்தலாம், பணத்தை வாரியிறைக்கலாம், ஒட்டுக் கேட்கலாம், இவ்வளவு ஏன் எதிரியின் பலவீனம் பெண்தான் என்றால், அதைக்கூட ஏற்பாடு செய்து கொடுத்து தங்களுக்கு வேண்டிய வேலையை முடிக்கலாம். இவ்வளவும் இஸ்ரேலிய அரசின் பூரண ஆசிர்வாதத்துடனேயே செய்யலாம். அந்நாட்டுப் பிரதமரைத் தவிர அவர்களை வேறு எவரும் கேள்வி கேட்க முடியாது. இவ்வளவு ஏன், அவர்கள் தங்கள் பணி நிமித்தம் எவ்வளவு பெரிய பாதகச் செயலைச் செய்திருந்தாலும், அது தண்டனைப் பட்டியலில் சேர்க்கப்படாது. அவர்களை அந்த நாட்டின் எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. மொஸாட் இஸ்ரேலிய நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை உளவு பார்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட உளவுத் துறை. ஆனால், உலகின் பிற நாடுகளின் பார்வையில் அது மிகக் குரூரமான அரக்கன்.

யூதர்களுக்கென்று தனியான நாடு எதுவும் இல்லாத நிலையில், அந்தக் கனவை மெய்ப்பிக்க யூதர்களால் பாலஸ்த்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட நாடே இன்றைய இஸ்ரேல். ஆரம்பத்தில் அகதிகளாக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறுபட்ட அரசியல் சூழ்நிலைகளால் பாலஸ்த்தீனத்திற்குக் குடி பெயர்ந்த யூதர்கள் மெல்ல மெல்லத் தங்களை வலுப்படுத்திக் கொண்டார்கள். ஆரம்பத்தில் பாலஸ்த்தீனியர்களுக்கும், யூதர்களுக்கும் நல்லுறவு காணப்பட்டாலும், யூதர்களின் அதீதமான இடப் பெயர்வு தங்கள் மண்ணில் தங்களையே அகதிகளாக்கிவிடுமோ என்று பாலஸ்த்தினியர்களை அஞ்சச் செய்தது. இதனால் ஆங்காங்கே யூதர்கள் மீது தாக்குதல்ச் சம்பவங்களும், அதற்கு யூதர்களினால் பதில்த் தாக்குதல்களும் அரங்கேறின. இது தங்களுக்கே உரித்தான நாடு என்று பாலஸ்த்தீனியர்கள் வெகுண்டெழுந்தாலும், அப்போது பாலஸ்த்தீனத்தை தன் காலனித்துவ நாடாக வைத்திருந்த பிரிட்டிஸானது யூதர்களின் பக்கமே நின்றது. ஆகையினால், ஆட்சியாளர்களின் தாராளமான ஆசிர்வாதத்தோடு பல நாடுகளிலுமிருந்து யூதர்கள் அங்கு மெல்ல மெல்லக் குடிபெயர்ந்தார்கள்.

இவ்வாறு பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டமைக்கப்பட்ட இஸ்ரேலுக்கு, அனைத்துத் திசைகளிலுமிருந்தும் ஆபத்துக்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. அது நேரடியாக பாலஸ்த்தீனம் மட்டுமல்லாமல், அதன் நட்பு நாடுகளால் கூட மிகப் பெரும் மறைமுக ஆபத்தை எதிர் நோக்கியிருந்தது. 1948 ஆம் ஆண்டு பிரிட்டிஸிடம் இருந்து விடுதலை பெறுகின்ற போது, அதுவரை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருந்த யூதர் ஆக்கிரமிப்பு நிலப்பரப்பு, இஸ்ரேல் என்ற தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவரை காலமும் பிரிட்டிஸின் பாதுகாப்பிலிருந்த அவ் யூதர்கள், அதன் பின்னர் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குள்ளானார்கள். ஆனால், அச்சமயம் அவர்களிடம் போதுமான ஆயுத பலம் இருக்கவில்லை. அந்தச் சூழலை வெகு சாமர்த்தியமாகக் கையாள எண்ணிய அவர்கள், ஒரு பலமான உளவுத்துறையின் தேவையை உணர்ந்து கொண்டார்கள். ஒரு பலமான உளவுத்துறை இருக்குமாகயிருந்தால், எதிரியின் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு முகங்கொடுக்கவோ அல்லது அதனை முறியடிக்கவோ முடியும் என்பதை அவர்கள் தெளிவாக இனங்கண்டுகொண்டார்கள்.

எனவே, அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த மொஸாட். ஆரம்பத்தில் பல தவறுகளையும், சொதப்பல்களையும் அவர்கள் தாராளமாகவே செய்திருந்தாலும், எந்நேரமும் ஆபத்துச் சூழ்ந்த பல கடினமான சூழ்நிலைகளைக் கையாள்கிற அனுபவம் தொடர்ந்து கிட்டியமையால், அவர்கள் மிகச் சிறப்பான உளவு அமைப்பாய் ஆனார்கள். ஆரம்பத்தில் தங்களின் தற்பாதுகாப்புக்கென உருவாக்கிய அமைப்பு பின்னர் இஸ்ரேலினை பிராந்தியத்தில் ஒரு வல்லாதிக்கம் மிக்க சக்தியாக உருவாக்க உழைக்கத் தொடங்கியது. எதிரியின் நாட்டுக்குள்ளேயே புகுந்து அந்நாட்டு அரசு கூட அறிந்திராத இராணுவ இரகசியங்களைக்கூட வெகு லாவகமாகத் திருடினார்கள். தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஆணி வேர் வரை துப்புத்துலக்கி அவர்களின் நாட்டிற்கே சென்று கொன்றழித்துவிட்டு, எவருக்கும் சந்தேகமே இல்லாத வகையில் நாடு வந்து சேர்ந்தார்கள்.

மொஸாட்டின் பல அயோக்கியத் தனங்களும், சாகசங்களும் வெளிவந்திருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்க அவர்களின் சாகசங்களிலொன்று மிக்-21 என்ற விமானக் கடத்தல்தான். உலகின் எந்த நாடும் துணிந்திராத செயல் அது. உலக வல்லரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா கூட தோற்று நின்ற செயல் அது. அந்தக் கடத்தலின் பின்னர் தான் இஸ்ரேல் மீதான உலக நாடுகளின் பார்வையே மாறியது. கத்துக்குட்டி என்று நம்பியிருந்த சிறு நாட்டின் பலத்தைக் கண்டு உலகம் வாய் பிதுங்கிய முக்கிய சம்பவம் அது. மற்ற நாடுகள் மட்டுமல்ல, இஸ்ரேலின் இராணுவ பலத்தின் வளர்ச்சியில் மிகப் பெரும் பங்காளியாய் இருந்த, அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்குக் கூட அதன் பின்னர் தான் இஸ்ரேல் தங்களுக்கு நிகராக வளர்ந்து நிற்பது புரிந்தது.

amazon.in

மிக்-21 என்பது ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஓர் அதிநவீன போர் விமானம். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான பனிப்போர் நிலவிக்கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் இவ்வாறு அதிநவீன விமானம் ஒன்றை ரஷ்யா உருவாக்கியது அமெரிக்காவுக்கு சற்று பீதியைக் கிழப்பியது. ரஷ்யா அந்த விமானத்தை அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்தது. இதனால், அந்த விமானத்தின் அதி நவீன தொழில்நுட்பங்களும், உத்திகளும் எதுவென்று தெரியாமையினால், போர் முழ்கின்ற போது அந்த விமானத்தை எப்படிக் கையாழ்வது என்பது பெரும் புதிராகவேயிருந்தது. எனவே, மிக்-21 வகை ஏதேனுமொரு விமானத்தைக் கடத்தி வந்து அதன் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள அமெரிக்கா பலவாறு முயற்சி செய்தும் அது கைகூடவில்லை. ஆனால், மொஸாட்டின் உதவியுடன் இஸ்ரேல் அதனை லாவகமாக செய்து முடித்தது. இஸ்ரேலின் எதிரி நாடுகளும் அந்த விமானத்தை வைத்திருந்தமையே, இஸ்ரேல் அந்த விமானத்தின் மீது காதல் கொள்ளக் காரணம். இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதனால், ரஷ்யா அந்த விமானத்தை இஸ்ரேலுக்கு விற்பனை செய்யாது. எனவே, எப்படியாவது எதிரி ஒருவனிடமிருந்து ஒரு விமானத்தைக் கடத்தி வந்து, அதை அக்கு அக்காகப் பிரித்துப் பார்த்துவிட வேண்டும் என்று இஸ்ரேல் துடிக்கத் தொடங்கியது. நேராக பணி மொஸாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

மொஸாட் தன் பணியை ஆரம்பத்தில் நேர் வழியில் துவக்கியது. முதலில் அந்த விமானம் வைத்திருந்த நாட்டின் தரவுகளைத் திரட்டிக்கொண்டு, அவர்களுக்கு அதிக பணம் கொடுப்பதன் மூலம் விமானத்தை விலைக்கு வாங்க முடியுமா என்று முயிற்சி செய்தது. ஆனால் அது கைகூடவில்லை. ஆகையினால், அடுத்து மொஸாட் அதற்கேயுண்டான பாணியில் வேலையை ஆரம்பித்தது. எங்கேனுமிருந்து விமானத்தைக் கடத்துவதுதான் திட்டம். ஆனால், அது அவ்வளவு இலகுவானதல்ல. எதிரியின் நாட்டிலிருந்து கடத்த வேண்டும். திட்டத்தில் இன்னுமொரு சிக்கலும் இருந்தது. அந்தப் போர் விமானத்தை எவர் வேண்டுமானாலும் செலுத்திவிட முடியாது. பிரத்தியேகமாக, அந்த விமானத்தைச் செலுத்த பயிற்சி பெற்ற விமானி ஒருவனால் மாத்திரமே முடியும். எனவே, தமது இலக்கு விமானி என்று முடிவு செய்தது மொஸாட். இரையை நோக்கித் தூண்டில்களை வீச ஆரம்பித்தது. பணத்தாசை கொண்டவர்களுக்கு பணத்தைக் காட்டியும், பெண்கள் மீது ஆசை கொண்டவர்களுக்கு அவற்றை ஏற்பாடு செய்தும், மதுப் பித்தர்களுக்கு அவற்றைக் கொடுத்தும் அவர்களை தங்களின் வழிக்குக் கொண்டுவருவதே மொஸாட்டின் தூண்டில்களின் பணி. ஆனால், அதை மிக இரகசியமாக சந்தேகம் வந்துவிடாதபடி செய்ய வேண்டும். சிறிய சந்தேகம் வந்தால்கூட எதிரி விழித்துக்கொள்வான்.  பல தோல்விகளுக்குப் பின்னர் அவர்கள் வீசிய தூண்டிலுக்கு ஈராக்கில் ஒரு மீன் சிக்கியது. ஈராக்கின் மிக்-21 விமானமொன்றின் மாலுமி ஒருவன் ஒரு மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கப்பட்டான்.

இனிக் காரியங்கள் மெல்ல மெல்ல நடந்தேறின. மொஸாட் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி, அவர்கள் கூறிய விமானப் பாதை வழி விமானம் இஸ்ரேலினை வந்தடைந்தது. ஈராக் சுதாகரிக்கும் முன் காரியம் நடந்து முடிந்தது. ஈராக் விமானத்தைத் திரும்ப ஒப்படைக்கும்படி கடுந்தொனியில் மிரட்டியது. ரஷ்யா கோபாவேசத்துடன் சத்தமிட்து. ஆனால், இஸ்ரேல் எதையும் கண்டுகொள்ளவில்லை. கடத்திவந்த விமானத்தை சிறு ஆணி கூட மிச்சமில்லாமல் ஆராய்ந்து அதன் முழுமையான தொழில்நுட்ப வித்தைகளையும் கற்றுக்கொண்டது. இதை அறிந்துகொண்ட நட்பு நாடான அமெரிக்கா விமானத்தை தங்களிடம் தரும்படி கோரியது. ஆனால் இஸ்ரேல் கேட்டவுடன் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. விமானத்தை நாங்கள் தந்தால், நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று தன்னையே வளர்த்துவிட்ட அமெரிக்காவிடம் பேரம் பேசியது. அப்போதுதான் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் இஸ்ரேல் எந்தளவு சூரனாக வளர்ந்து நிற்கிறது என்ற உண்மை புலப்படலாயிற்று. அதன் பின்னரும் இஸ்ரேலின் பலம் பல மடங்குகளாக இன்னும் ஓங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதை மொஸாட் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது.

இதுபோன்ற மொஸாட்டின் முக்கிய பல இரகசியத் திட்டங்களையும் அது நிறைவேறிய செயல் வடிவங்களையும் சுவாரசியத்தோடு `மொஸாட்` என்ற இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். இதில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஆதாரபூர்வமாகக் கசிந்தவைகளும், இஸ்ரேல் தங்கள் வாயால் ஆம் நாம்தான் செய்தோம் என்று ஏற்றுக்கொண்டவைகளும் மாத்திரமே. இவை தவிர இன்னும் எத்தனையோ இரகசியங்களும் அயோக்கியத்தனங்களும் வெளிவராமல் இருக்கலாம் என்பதே நிதர்சனம். இந்நூல் அதிக விபரிப்புக்கள் இல்லாமல் மிக எளிய மொழி நடையிலேயே எழுதப்பட்டிருப்பதால், நூல் ஆர்வலர்கள் மாத்திரமன்றி சாதாரணமானவர்களும் விரும்பிப் படிக்கக்கூடியதாய் இருக்கிறது. உலக அரசியலில் ஆர்வம் கொண்வர்களுக்கும், விறுவிறுப்பான துப்பறியும் கதையார்வம் கொண்டவர்களுக்கும் இந்நூல் சிறந்த பரிந்துரை.

முற்றும்.


April 9, 2020














நாடு வழமைக்குத் திரும்பியிருந்தது. நாடு மட்டுமல்ல உலகமும் தான். ஆனால் முன்பை விட அனைத்தும் கொஞ்சம் அமைதியாக இருப்பதாகவே தோன்றியது. கொவிட் 19 என்ற கோரத் தாண்டவம் உலகை இப்போதுதான் அதன் கோரப்பிடியிலிருந்து மெல்ல மெல்ல விடுவித்துக் கொண்டிருந்தது. உலக வல்லரசுகளின் ஆணவங்கள் பிணங்களை கணக்கிட்டுக் கொண்டிருந்தன. உலக மயமாக்கலில் பெரிய பங்களிப்பைச் செய்திடாத சின்னஞ் சிறிய நாடுகள் மாத்திரம் ஆங்காங்கே தப்பிப் பிழைத்திருந்தன. ஆனாலும், அவற்றின் பொருளாதாரம் நோய்த் தொற்றினால் இறந்த பிணங்களைக் காட்டிலும் அதிகமாகத் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தன.

நீலன் காலை ஏழு மணிக்கே தயாராகி வாரச் சந்தையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். வழக்கமான நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தைக்குச் செல்வது அவனுக்கு பாவற்காய் உண்பதுபோல ஒன்று. வாரத்தின் ஒரே ஒரு விடுமுறை நாளை சந்தையின் இரைச்சலில் தொலைத்து விடுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. ஆனால், இப்போது நிலமை தலைகீழாக மாறியிருந்தது. வெளியில் செல்வதையும், சுதந்திரமாக நடமாடுவதையும் அதிகம் விரும்புபவனாக மாறியிருந்தான். கொடிய கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரண வாசலிலிருந்து உயிர் பிழைத்து, முழுமையாகக் குணமானவனுக்கு சுதந்திர நடமாட்டத்தின் அருமை அப்போது தான் புரிந்திருந்தது. மூன்று மாதங்களாக சிகிச்சைக்காகவும் தனிமைப்படுத்தலுக்காகவும் நான்கு சுவருக்குள் அடைந்தே கிடந்தவனின் மனப்போராட்டம் இப்போது தான் ஆசுவாசப்பட்டிருந்தது.

ஆனாலும் அந்தச் சுதந்திரம் அவனுக்கு முழுமையானதாகத் தோன்றவில்லை. நேற்று பள்ளி சென்றிருந்த அவனின் ஒரேயொரு செல்ல மகள் அன்பினா அழுது கொண்டே வீடு திரும்பினாள். ஏன் என்று கேட்டதற்கு, நோய்த் தொற்றுக்குள்ளானவனின் மகள் என்பதால் தன் வகுப்பில் அனைவரும் தன்னிடம் பேச மறுப்பதாகச் சொன்னாள். தன் வகுப்பாசிரியர்கூட தூரமாக நின்று தன்னிடம் பேசும்படி கூறியதாகச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அது அவர்களின் ஒரு வித பயம்தான் என்றாலும், ஒரு பத்து வயதுப் பிஞ்சுக் குழந்தையிடம் இதைவிட வேறு எதனை மனதில் நஞ்சாக ஊட்டிவிட முடியும் இந்த சமூகத்தினால் என்று ஆதங்கப்பட்டான். இவை நாளடைவில் சரியாகிவிடும் என்று எண்ணியவன், அவளை சமாதானம் செய்ய வேறு வழியின்றி ஒரு வாரம் வீட்டில் விடுமுறையில் இருக்கும்படி கூறியிருந்தான்.

இவ்வாறு பல மன நெருடல்களுடன் சந்தைக்கு நடந்தே வந்து சேர்ந்த நீலனுக்கு, காண்பது அனைத்தும் வியப்பாகவிருந்தது. வழமையாக சந்தையில் சந்தித்து நட்பாடுகிற அமுதன், இவனைக் கண்டதும் கைபேசியை அவசரமாக எடுத்துக் காதில் வைத்தபடி நகர்ந்து மறைந்தான். கூட்டம் அலைமோதிய மீன் வியாபாரியிடம் இவன் சென்றதும், கூட்டம் மெல்ல மெல்ல நழுவிக்கொண்டது. மீன் வியாபாரியும் தன் வியாபாரத்தைக் கெடுக்க வந்தவனைப் போல நீலனை முறைத்துவிட்டு, அவன் கேட்பதை விரைவாகக் கொடுத்தனுப்பிவிடவேண்டும் என்பதில் கரிசனையாகவிருந்தான். யாருக்குத் தெரியும் அவன் முணுமுணுத்த வார்த்தைகள் எவ்வளவு ஆபாசமானதென்று. என்னதான் அவமானப்பட்டாலும் வீட்டில் அடுப்பெரித்தாக வேண்டுமென்பதற்காக சமையலுக்கான அனைத்தையும் வாங்கிமுடித்துவிட்டு யாரின் முகத்தையும் பார்க்கத் திராணியற்றவனாய் குனிந்த தலை நிமிராமல் வீடு வந்து சேர்ந்தான்.  

நடந்தவை எதையும் மனைவி இளமதியிடம் கூறி அவளை துன்பத்துக்குள்ளாக்க அவன் விரும்பவில்லை. ஆனால் அவள் கூறலானாள்.

“கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாயிடும்“

“எதைப் பற்றி சொல்ற?“

“சந்தையில நடந்தது பற்றி“

“உனக்கெப்படித் தெரியும்?“

“நீங்க ஹாஸ்பிட்டல்ல இருந்த இந்த மூணு மாசத்துலேயே எல்லாம் பார்த்தாச்சு. எனக்குப் பழகிப்போச்சு. அன்பி தான் பாவம். அவளோட வயசுக்கு மீறி நிறைய பார்த்துட்டாள்.”

நீலனின் கண்கள் நீர் நிறைந்து வழிந்தது. ஓர் குழந்தைபோல இளமதியின் தோளில் முகத்தைப் புதைத்து அழுதுவிட்டான்.

நாட்கள் நகர்ந்து கொண்டேதானிருந்தது. ஆனால், சமூகம் தன் பார்வையினால் அவர்கள் மீது அருவருப்பை உமிழ்வதை நிறுத்தியபாடில்லை. நோய்வாய்ப்படுதல் இத்தனை இழிவானதா என்று அவனை அவனே பல முறைகள் கேள்வி கேட்டுக்கொண்டான். அவர்களின் வீட்டுக்கதவு யாராலும் எப்போதும் தட்டப்படுவதாகயில்லை. விருந்தினர் மட்டுமல்ல, வழக்கமாக யாசகத்திற்கு வருகிறவர்கள் கூட வராமல் போனது வியப்பாகத்தான் இருந்தது. அந்தச் சமூகச் சிறையின் கூண்டுக்குள் அவர்களின் வாழ்வு நலிந்து கொண்டிருந்தது. ஓர் மோசமான நோய்த் தொற்றிலிருந்து வெளிவந்திருந்தாலும், இந்தக் கொடிய உளவியல் தொற்றிலியிருந்து வெளியேறும் வழி தெரியாமல் அவர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். நிலமை இப்படியே இருந்துவிட்டால் அன்பினாவின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிடும் என்பது அவர்கள் இருவருக்கும் தெளிவாத் தெரிந்திருந்தது. ஒரு நீண்ட நெடிய மனப் போராட்டத்தின் இறுதியில் நீலன் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தான்.

“மதி!“

“ம்.. சொல்லுங்க“

“நாம இனியும் இங்க இருக்க வேணாம். போயிடலாம். எங்கேயாவது தூரமாப் போயிடலாம்”

“ம்… நானும் அதையேதான் நினைச்சேன். ஆனா, எங்க போறது? இந்த ஊர்ல இருக்குறவங்களை தவிர வேற யாரைத் தெரியும் எங்களுக்கு?“

“தெரியாம இருக்குறது தான் நல்லது. எங்களை யாரெண்டு தெரியாத ஊருக்குப் போயிடலாம். அங்கதான் எங்களை அருவருப்போட பார்க்க யாரும் இருக்க மாட்டாங்க“

இளமதி மௌனத்தால் சம்மதித்தாள்.

அவர்களின் சம்பாசனை முடியும் முன்பாக அவர்களின் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இருவருக்குமே அது ஆச்சரியமானது தான். அவர்களின் வீட்டுக் கதவில் தட்டினால் சத்தம் வரும் என்பது நீண்ட நாட்களுக்குப் பின் நினைவுக்கு வந்தது போல் இருந்தது. நீலன் ஆர்வத்தோடு கதவைத் திறந்தான். வாசலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரின் சில ஆதரவாளர்களோடு நின்றுகொண்டிருந்தார். கொரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வந்த கையோடு பொதுத் தேர்தல் ஆயத்தங்களும் பிரச்சாரங்களும் சூடுபிடித்திருந்தன. பொன்னம்பலம் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஊரில் மிகச் செல்வாக்கானவர். அவரின் செல்வாக்கைக் காட்டிலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினால் அவருக்கு எப்போதும் மிகப் பெரும் மக்கள் ஆதரவு இருந்துகொண்டேயிருந்தது. பல்வேறு கட்சிகள் ஊரில் இருந்தாலும், அந்தவொரு கட்சி தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் பிரிதிநிதிகள் என்பதை பிரச்சாரம் செய்துகொண்டிருந்தது. அவர்களின் உளவியல் ரீதியிலான பிரச்சாரத்திற்கு மக்களிடம் பலத்த ஆதரவு என்றைக்கும் இருந்துகொண்டுதானிருந்தது.

நீலனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டதும்கூட அந்தப் பிரச்சார நோக்கில் தான். வீடு வீடாகச் சென்று அவர்கள் வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கட்சியின் பெயரால் பொன்னம்பலம் அவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதுதான் என்றாலும், அவரின் பிரச்சாரம் மிகப் பலமானதாகத்தான் இருந்தது. அவ்வாறு இல்லையெனில், இத்தனை நாளாய் தீண்டப்படாத கதவு இன்று தட்டப்பட்டிருக்காதல்லவா என்று நீலன் எண்ணிக் கொண்டான்.

“தம்பி! இந்த முறையும் தேர்தல்ல நீங்க நமக்கு ஓட்டுப் போட்டு நம்மட மக்கள்ட உரிமைகளை பெற்றுத்தாறதுக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்க்கோணும்”

என்று கூறியவாறே, பழுப்பு நிறக் காகிதத்தில் சிவப்பு எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்ட பிரச்சாரத் துண்டுப் பிரசுரத்தை நீட்டினார். நீலன் அதைப் பெற்றுக் கொண்டதும், பொன்னம்பலம் தன் தொந்தியில் கை வைத்தவாறே அடுத்த வீட்டை நோக்கி நடையைக்கட்டலானார்.  

அந்தத் துண்டுப் பிரசுரத்தில் பதினொரு தேர்தல் வாக்குறுதிகள் உணர்ச்சிகரமான வார்த்தைகளோடு அழகாக அச்சிடப்பட்டிருந்தன. அதன் கீழே பொன்னம்பலத்தின் ஐந்தாம் இலக்கத்திற்கு முன்பாகவும் அந்தக் கட்சியின் சின்னமான கட்டடத்தின் முன்பாகவும் புள்ளடியிடப்பட்டு வாக்களிக்கும் முறை விளக்கப்பட்டிருந்தது. ஆனால், அது அவசியமானதல்ல என நீலன் எண்ணிக் கொண்டான். பல ஆண்டுகளாக அதையே தெரிவு செய்து நன்கு பழக்கப்பட்ட ஓர் சமூகத்திற்கு புதிதாக கற்பிக்க வேண்டியதில்லை என்பது அவனின் ஞானம்.

முடிந்தவரை விரைவாக இடம் பெயர்ந்துவிடுவதென எண்ணியிருந்த நீலனுக்கும் இளமதிக்கும் தேர்தல் வரை அவகாசம் இருக்கவில்லை. அடுத்த வாரமே கொழும்பின் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகைக்கு குடியமர்ந்து கொண்டார்கள். அடுக்கு மாடிக் குடியிருப்பின் நெருக்கடியான வாழ்க்கைக்குப் பழக்கப்படுவது சற்று சிரமமாக இருந்தாலும், தீண்டப்படாதவர்களாக தங்களை ஆக்கியிருந்த ஒரு சமூகத்திற்கு மத்தியில் வாழ்வதைக் காட்டிலும், இது பல மடங்கு ஆறுதலாய் இருந்தது. தனக்கென்று ஒரு தொழிலைத் தேடிக் கொண்ட நீலன், அதன் பின் அன்பினாவின் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவனாய் இருந்தான். ஒரு பெற்றோராய் அவர்கள் தங்கள் குழந்தையின் கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் வாழ்ந்துகொண்டிருந்தனர்.

***

ரு பரபரப்பான நகரத்தின் நெடுஞ்சாலை வாகன நெரிசலில் ஊர்ந்து நகரும் வாகனங்களைப்போல் அல்லாமல், காலம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அன்பினா இப்போது இருபத்தைந்து வயது இள மங்கையாக ஆகியிருந்தாள். ஐ.டி கம்பனி ஒன்றில் ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். தங்கள் மகளின் எதிர்காலத்தையே தங்களின் வாழ்நாளாகக் கொண்டிருந்த பெற்றோருக்கு தற்போது வேறு என்ன ஆசை இருக்க முடியும் அவளின் திருமணத்தைத் தவிர. நீலனும் இளமதியும் நிச்சயிக்கப்பட்ட அன்பினாவின் திருமணத்தை சிறப்பாக நடாத்தி முடிப்பதில் பம்பறமாகச் சுழன்றுகொண்டிருந்தனர். ஆனாலும், நீலனின் அடி மனதில் ஒரு ஏக்கம் இருந்துகொண்டேயிருந்தது, அன்பினாவின் திருமணத்திற்கு தங்கள் கிராமத்திலுள்ள உறவினர்களையும், நண்பர்களையும் அழைக்க வேண்டும் என்று. ஆனால், இளமதிக்கு அதில் பெரிய உடன்பாடு இருக்கவில்லையாதலால், நீலன் மாத்திரம் சில திருமண அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு அவர்களின் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டார்.

பதினைந்து வருடங்களுக்கு முன் தங்களை நிர்க்கதியாக்கி விட்ட கிராமத்தை கனத்த இதயத்துடன் சென்றடைந்தார் நீலன். ஒரு மனிதன் தான் பிறந்த ஊரை இத்தனை ஆண்டுகள் பிரிந்து இருப்பதை விட அவனது வாழ்வில் வேறு என்ன சாபம் இருந்துவிட முடியும் என்பதே அவரது உளக் குமிறலாய் இருந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன் இருந்த கிராமத்திற்கும், தற்போது பார்க்கும் கிராமத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை, ஒரு சில கட்டடங்களையும், மனிதர்களின் உடல் முதிர்ச்சியையும் தவிர. தன் உறவுகளையும், நண்பர்களையும் வீட்டுக்கே தேடிச் சென்று அழைப்பிதழ்களைக் கொடுத்தார். அவர்கள், நீலனைக் கண்டதில் பூரித்து நின்றனர். யாருமே, நீலனுக்கு நோய்த்தொற்று வந்ததனையோ, வெறுத்து ஒதுக்கியதனையோ நினைவு வைத்திருந்ததாகத் தெரியவில்லை என்பது அவருக்கு மிகப் பெரும் ஆறுதலாய் இருந்தது. காலம் மிகப் பெரும் மருந்து என்பது அன்று அவரிடத்தில் மெய்யாகிப் போனது. எல்லாவற்றையும் விட மக்கள் மனதளவில் நல்ல முறையில் முதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் என எண்ணி புலங்காகிதமடைந்தார்.

ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அந்த ஊரைவிட்டு வெளியேறிய நாளொன்றைப் போலவே, இப்போதும் தேர்தல் காலமாக இருந்தது. பொதுத் தேர்தல் பிரச்சாரங்களில் முன்பைப் போல இப்போதும் ஊர் பரபரப்பாகவே இருந்தது. அது நீலனுக்கு தன் இளமைக்கால தேர்தல் காலங்களையும், தான் இறுதியாக ஊரைவிட்டு வெளியேறுகையிலிருந்த தேர்தல் காலத்தையும் ஏதோ சிறு வலியுடன் ஞாபகப்படுத்திச் சென்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் இறந்ததன் பின்னர், தற்போது அவரின் மகன் இளவேந்தன் அதே வழியில் அரசியல்வாதியாகிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தார் நீலன். அவரும் தந்தையின் கட்சியிலேயே இம்முறை வேட்பாளராகப் போட்டியிடுவதனால், அவருக்கும் வெற்றி நிச்சம் என்று ஊரார் பேசிக்கொள்வது நீலனின் காதுகளில் விழுந்தது. அரசியலில் அதிகம் நாட்டம் இல்லையென்றபோதும், தன் பழைய நினைவுகளை மீட்டக்கூடிய அவ்வாறான செய்திகள் மனதுக்கு உற்சாகமானதாகவே தோன்றியது அவருக்கு.

ஒருவழியாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழை வழங்கிவிட்டு மீண்டும் கொழும்பு செல்ல ஆயத்தமானபோது சில இளைஞர்கள் துண்டுப் பிரசுரம் ஒன்றை நீலனின் கைகளில் திணித்தவாறு நகர்ந்து சென்றுகொண்டிருந்தனர். ஆம் அது தேர்தல் துண்டுப் பிரசுரம் தான். எத்தனையோ தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் மரபு வழியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து பிரச்சாரங்கள் தொடர்வது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவருக்கு. யார் கண்டார், அது கூட ஒரு வெற்றி இரகசியமாக இருக்கலாமல்லவா என்று எண்ணியபடி ஆர்வத்தோடு அதில் பார்வையைச் செலுத்தினார். அவருக்கு மீண்டும் வியப்பாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பொன்னம்பலம் அவர்கள் நீலனிடம் கொடுத்தது போலவே, இதுவும் பழுப்பு நிறக் காகிதத்தில் சிவப்பு மையாலான துண்டுப்பிரசுரம். அதில் அதே பதினொரு தேர்தல் வாக்குறுதிகள் முன்பைவிட அழகான உணர்ச்சிகர வார்த்தைகளோடு கோர்க்கப்பட்டு அச்சிடப்பட்டிருந்தன. கீழே பொன்னம்பலத்திற்குப் பதிலாக அவரின் மகனின் இலக்கம் அச்சிடப்பட்டு அருகில் அதே கட்டடச் சின்னத்திற்கு எதிரில் புள்ளடியிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஆக, வேட்பாளர் பெயரையும் அவர்களின் இலக்கத்தையும் தவிர அதில் வேறு வித்தியாசங்கள் எதுவும் இல்லாதது மிகப் பெரும் வியப்பாகவிருந்தது. ஆனாலும், இளவேந்தனின் வெற்றி உறுதியானது என்று அவர் அறிந்திருந்தார்.

அவருக்கு அப்போதுதான் தெளிவாகியது,  கொரோனா நோய்த் தொற்று பதினைந்து வருடங்களுக்கு முன்பே நீங்கியிருந்தாலும், மக்களின் பல தசாப்த உளவியல் தொற்று இன்னும் நீங்கியபாடில்லை அல்லது நீங்க சிலர் அனுமதிப்பதில்லை என்று.

முற்றும்.
Follow on Facebook

April 5, 2020













“அவன் ஒரு உயரமான தொப்பி அணிந்திருந்தான். வாயையும் மூக்கையும் குளிர்ஜூரம் வந்தவன்போல் கைக்குட்டையால் மறைத்திருந்ததால் காண்பதற்கு ஒரு கல்லூரி மாணவனைப்போல் தோற்றமளித்தான். எங்களை நோக்கிச் சாய்ந்தபடி `இங்கு யார் மலாலா?` என்று கேட்டான். யாரும் எந்தப் பதிலும் கூறவில்லை. ஆனாலும் பல பெண்கள் என்னை நோக்கினர். அப்போதுதான் தன் கறுப்புத் துப்பாக்கியை உயர்த்தினான். பின்பு அது கோல்ட் 45 வகையைச் சேர்ந்தது என்று தெரிந்து கொண்டேன். பெண்கள் அலறினார்கள். அவள் கையை நான் இறுகப் பற்றிக் கொண்டதாக மோனிபா கூறினாள். அவன் அடுத்தடுத்து மூன்று முறை சுட்டதாக தோழிகள் கூறினார்கள். முதலாவது என் இடது கண் அருகே பாய்ந்து இடது தோளிற்கு சென்றது. இடது காதிலிருந்து ரத்தம் வழிய மோனிபாவின் மேல் மயங்கிச் சாய்ந்துவிட்டேன். அதனால் அடுத்தடுத்த குண்டுகள் அருகில் இருந்தவர்களின் மேல் பாய்ந்தது.

சுடும்போது அவனுடைய கை நடுங்கிக்கொண்டிருந்தது என்று தோழிகள் பின்னர் கூறினர். மருத்துவமனையை அடைவதற்குள் என் நீண்ட முடியும், மோனிபாவின் மடியும் ஒரே இரத்தமாக இருந்தது.
யார் மலாலா? நான் தான் மலாலா. இதுதான் என் கதை.“

இப்படி ஆரம்பிக்கிறது அந்தச் சுயசரிதை.

நூல் விமர்சனம் - `நான் மலாலா`

பாகிஸ்தானில் அபிவிருத்தியில் மிகப் பின்தங்கிய இடங்களில் ஒன்றான ஸ்வார்ட் பள்ளத்தாக்கில், ஆண் குழந்தை பிறந்தால் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டாடியும், பெண் குழந்தையாக இருந்தால் திரைக்குப் பின்னே ஒளித்தும் வைக்கின்ற ஒரு பிற்போக்கு சமூகத்தில் பெண்ணாகப் பிறக்கிறாள் மலாலா. தான் பிறந்த சமூகம் மிகப் பிற்போக்கானது என்றாலும், தன் பாசமான தந்தையின் அபரிமிதமான அன்பினால் ஒரு பிற்போக்கு சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கின்ற உரிமைகளை தானும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதாக இந்நூலில் பதிவுசெய்திருக்கிறாள் மலாலா.

ஆனாலும் அந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்வது அவளுக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களை குடும்பத்தின் மிக மோசமான வறுமையில் கழித்த அவளுக்கு, மிகுதிக் காலகட்டங்களை தீவிரவாதத்திற்கு நடுவே கழிக்க வேண்டியிருந்தது. ஸ்வார்ட் பள்ளத்தாக்கில் தலிபான் தீவிரவாத சக்திகளின் கைகள் ஓங்கிய போது, அவள் பத்து வயது சிறுமியாக இருந்தாள். மிகவும் பிற்போக்குவாத தீவிரவாத அமைப்பான தலிபான்கள் தங்களை மதச் சீர்திருத்தவாதிகளாக காட்டிக்கொண்டு, மதக் கலாச்சாரச் சீராக்கல் என்ற பெயரில் பல கட்டுப்பாடுகளை அப்பகுதி மக்களுக்கு விதித்தனர். மேற்கத்தேய கலாச்சாரக் கவர்சித் தடுப்பு என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதுகூட தடை செய்யப்பட்டது. வீடுகளிலிருந்த தொலைக்காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு கிராமத்தின் மத்தியில் அனைவரின் முன்னிலையிலும் எரியூட்டப்பட்டது. கடும்போக்குவாத இஸ்லாமிய சட்டங்கள் தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் மீது திணிக்கப்பட்டது. அதிகாரத்திலிருந்த பாகிஸ்தான் அரசின் சட்டதிட்டங்கள் எல்லாம், தலிபான்கள் முன் செல்லாக்காசாகவே இருந்தன. கடுமையான ஒடுக்குமுறை மற்றும் உரிமை பறிப்புகளுக்கு எதிராக குரலெழுப்பியவர்கள் பாரபட்சமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு, சடலங்கள் ஊர் மத்தியில் மக்களின் பார்வைக்காக வீசப்பட்டன.

இவ்வாறு பல நெருக்கடிகளுக்குள்ளும், தீவிரவாத அச்சுறுத்தல்களுக்குள்ளும் மலாலா நன்கு கல்வி கற்கின்ற மாணவியாகவே இருந்தாள். ஏனெலில், கல்வி கற்பது மாத்திரமே தனக்கு எப்போதும் பிடித்த ஒன்று என நூலின் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறாள் அவள். கொடிய வறுமையும், உலக வல்லரசு அமெரிக்காவுக்கே சவாலாகவும் இருந்த தலிபான் தீவிரவாத சக்தியும் பெரும் தடையாக இருந்த போதும் மலாலா கல்வியில் மிக ஆர்வமானவளாக இருந்தாள். அவள் பெரும்பாலும் வகுப்பில் முதல் நிலை மாணவியாக இருந்தாள். கல்வி மாத்திரமன்றி அவள் மிகச் சிறந்த பேச்சாளராகவும் தன்னை மெல்ல மெல்ல நிரூபித்துக் கொண்டிருந்தாள். மிகப் பெரும் அச்சுறுத்தல்களுக்கு நாளாந்தம் முகங்கொடுத்தாலும், தலிபான்களின் அந்த குறிப்பிட்ட அறிவிப்பு வரை மலாலாவின் ஒரு சிறுமிக்குண்டான வாழ்வுக்கு  பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை. ஆம், தான் எது நடக்கக் கூடாது என்று பிரார்த்தனைகள் செய்தேனோ, அது இறுதியில் நடந்தேவிட்டது என்று தன் சுயசரிதையில் பதிவிடுகிறாள் மலாலா. பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லக் கூடாது என்பதே அந்த அறிவிப்பு. பெண்கள் கல்வி கற்பது மதத்திற்கு விரோதமானது என்று பிரச்சாரம் செய்தனர் தலிபான்கள். அவர்கள் வெறும் பிரச்சாரத்துடன் நின்றுவிடவில்லை. உத்தரவை மீறி தொடர்ந்து நடாத்திச் செல்லப்பட்ட பெண்கள் பள்ளிக்கூடங்கள் தலிபான்களால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன.



ஆனால், மலாலா துவண்டுவிடவில்லை. அடக்குமுறைக்கு அடிபணியவில்லை. கல்வி கற்பது ஆண்களைப் போல, பெண்களுக்கும் சம உரிமையுடையது என்று உரக்க முழங்க ஆரம்பித்தாள். உலகின் கொடூரமான தலிபான் தீவிரவாத அமைப்பிற்கு எதிராய் எதிர்க்குரல் எழுப்பத் தொடங்கினாள். அமைதி நடைபயணங்கள் மேடைப் பேச்சுக்கள் என்று அமைதியான முறையில் தனக்கும் பிற பெண்களுக்குமான கல்வி உரிமைக்காக குரல் கொடுக்கத் தொடங்கினாள். அவளின் இந்த செயற்பாடுகளினால் நாட்டிற்குள் மெல்ல மெல்ல அனைவராலும் அறியப்படுபவளாய் ஆகிக்கொண்டிருந்தாள். உள்நாட்டு ஊடகங்கள் உட்பட பி.பி.சி செய்திச் சேவை வரை அமைதிவழி உரிமைப் போராட்டத்திற்காக செவ்வி காணப்பட்டாள். ஆனால் இந்த துணிச்சலான காரியத்தைச் செய்துகொண்டிருந்தபோது அவளுக்கு வயது பன்னிரெண்டு மட்டுமே. தன் இந்த அமைதிவழி உரிமைப் போராட்டத்திற்கு பின் இருந்து ஊக்கமளித்தவர் தன் தந்தையே என்று பதிவு செய்கிறாள் மலாலா.

இவ்வாறான செயற்பாடுகளால் பல முறை தலிபான்களால் எச்சரிக்கப்பட்ட மலாலா, ஒரு கட்டத்திற்கப்பால் தலிபான் தீவிரவாதி ஒருவனால் பள்ளிக்கூடம் சென்று திரும்பும் வழியில் சுடப்பட்டாள். தன் கல்வி உரிமைப் போராட்டத்தினால் சர்வதேசத்திற்கு ஓரளவு அறிமுகமாயிருந்த மலாலா சுடப்பட்ட செய்தி உலகம் முழுக்கப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  பலத்த காயம் மற்றும் சத்திர சிகிச்சை மூலம் மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றல் என பல மரணப் போராட்டத்திற்குள்ளான மலாலா, உலகம் முழுக்க பேசுபொருளாய் ஆகிறாள். இறுதியில், சவூதி அரசரினால் அனுப்பிவைக்கப்பட்ட சொகுசு விமானம் மூலம், அவள் பலத்த இராணுவப் பாதுகாப்புடன் ஐக்கிய இராட்சியத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகள் மூலம், ஆச்சரியமான வகையில் உயிர் பிழைத்தாள்.

அதன் பின் அவர் தன்னை முழுமையாக பெண் கல்வியுரிமைச் சமூகப் போராட்டத்தில் அர்ப்பணித்துவிட்டார். தன் அமைதியான உரிமைப் போராட்டத்திற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றதன் மூலம் நோபல் பரிசு பெற்ற மிக இளம் நபராக கருதப்படுகிறார். அவர் தன் பதினாறாவது வயதில் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புவாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இன்றும் அவர் தன் பயணத்தை மலாலா ஃபண்ட் என்று தான் உருவாக்கிய சமூக அமைப்பின் மூலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பெண் கல்வி உரிமைக்காகப் போராடிய மாலாலா, ஒரு குழந்தையின் உளவியலில் இருந்து ஒரு உரிமைப் போராட்டப் பெண்ணாக மாறியது வரையான வரலாறு `நான் மலாலா` என்ற இந்தச் சுயசரிதை நூலில் நேர்த்தியோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கால கட்டத்தில் பாகிஸ்த்தானின் அரசில் பின்னணி மற்றும் தலிபான் தீவிரவாதப் போராட்டங்களின் பின்னணி ஆகியவற்றின் தகவல்கள் என்பனவும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும், மலாலா தன் பதினாறாவது வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. மலாலா மற்றும் கிறிஸ்டினா லாம்ப் ஆகியோர் இணைந்து எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த ‘I AM MALALA’ என்ற நூலை மிக நேர்த்தியான மொழிநடையோடு `நான் மலாலா` என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பத்மஜா நாராயணன்.

பெண்கள் கல்வி என்ற ஞாயமான உரிமைக்காகப் போராடி, அதற்கு வெகுமதியாக மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மலாலாவின் வரலாறு என்பது இந்த நூற்றாண்டின் மிக முக்கிய சுயசரிதை. அவரின் கல்வி உரிமைப் போராட்டத்தின் கதை அனைத்துப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்திலும் அவசியம் புகுத்தப்பட வேண்டியது. அதன் மூலம் கல்வி உரிமை தொடர்பான விழிப்புணர்வும், அதன் பெறுமதியும் எம் அடுத்த தலைமுறைக்கு சரியான வகையில் ஊட்டப்பட வேண்டும்.

April 3, 2020














கொரோனா அல்லது கொவிட் 19 இன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிற நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு சட்டத்தினையும் பல்வேறு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளையும் கடுமையாக பின்பற்றி வருகின்றன. இந் நிலையில் வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருக்க வேண்டிய இந்த நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த சமூக ஊடகப் பயன்பாட்டினுடைய அதிகரிப்பு என்பது சாதாரண நிலையை விட பத்து மடங்குகள் கூடுதலானது என்று கூறப்படுகிறது.

டிஜிட்டல் உலகின் இயக்கிகளாக இருக்கின்ற இந்த சமூக ஊடகங்களானவை பௌதீக ரீதியாக தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்ற மக்களை சமூக ரீதியாக தொடர்ந்தும் இணைத்தே வைத்திருப்பது எமக்கு மிகப் பெரிய ஆறுதல். இன்றைய இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மிக முக்கியமான பொழுது போக்கு அம்சமாய் ஆகியிருக்கிற சமூக ஊடகங்கள்தான், செய்திப் பரிமாற்றத்தின் மிக முக்கிய அம்சமாகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும், சில கவலையீனங்களால் மறைமுகமாகவும் படிப்படியாகவும் அவை உளவியல் ரீதியிலான சில கேடுகளையும் தோற்றுவிக்கக்கூடிய அபாயநிலை உருவாகியிருக்கிறது.

ஆமாம்! சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற அளவுக்கதிகமான கொவிட் 19 தொடர்பான தகவல்களும், பாதிப்பு மற்றும் மரணங்கள் குறித்தான செய்திகளும் தனிநபர் உள நலனில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இது வைரஸ் தொற்று தொடர்பான அச்சம் மற்றும் மன அழுத்தம் என்பற்றின் மூலமாக பல்வேறு உளவியல் கேடுகளையும் அதன் மூலமாக உடல்நலக் குறைவுகளையும் தோற்றுவிக்கக் கூடும் என கருதப்படுகிறது. சாதாரணமாக, சமூக ஊடகப் பயனாளிகளில் பலரும் சமூக ஊடகத்தினை இன்றைய சூழ்நிலையில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகப் பயன்படுத்தினாலும், பயனாளிகளில் ஒரு சாரார் அதனை வைரஸ் தொற்றுத் தொடர்பான செய்திப் பகிர்வு ஊடகமாகவும், அவ்வாறான செய்திகளை அறிந்து கொள்வதற்கான தளமாகவுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு நிலை காரணமாக பயனாளிகள் தங்களுக்கும், தங்களைச் சார்ந்த பிற சமூக ஊடகப் பயனாளிகளுக்கும் தங்களை அறியாமலேயே உளவியல் கேடிளைத்துக் கொண்டிருப்பதாக உளவியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இதன் காரணத்தினால்தான் உலக சுகாதார அமைப்பு (WHO) கொவிட் 19 தொடர்பான மன நலம் மற்றும் உளவியல் ரீதியான பரிசீலனையில் பின்வரும் மூன்று பிரதான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது.    
  • உங்களுக்கு கவலை அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளைப் பார்ப்பதனையோ, படிப்பதனையோ அல்லது கேட்பதனையோ தவிருங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள்.
  • நம்பத் தகுந்த தகவல் வளங்களிலிருந்து மாத்திரம் கொவிட் 19 தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
  • ஒரு நாளுக்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் மட்டும் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் கொவிட் 19 தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று முக்கிய அம்சங்கள் உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப்படுகின்ற அதேவேளை, முன்னணி மனநல மற்றும் உளவியல் நிபுணர்களால் மேலும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன,
  • வைரஸ் பற்றிய தகவல்களிலிருந்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் போதுமான தகவல்களை முன்பே அறிந்து வைத்திருக்கிறோம்.
  • இறப்பு எண்ணிகையினைக் கணக்கிட வேண்டாம். அவற்றில் ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள்.
  • இணையத்தில் நோய்த் தொற்றின் பாதிப்புத் தொடர்பான மேலதிக தகவல்களைத் தேடாதீர். அது உங்கள் மன நிலையை மேலும் மோசமடையச் செய்யலாம்.
  • பாதிப்புக்கள் தொடர்பான செய்திகளை பிறருக்கு அனுப்பவோ, பகிரவோ செய்யாதீர். படிப்பவர் மன வலிமையற்றவராக இருக்கலாம்.
  • முடிந்தவரையில் எதிர் மறை செய்திகளிடமிருந்து விலகி, உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள்.
  • எப்பொழுதும் உங்களில் நேர்மறை எண்ணங்களையே பேணுங்கள். அது உங்கள் நோயெதிர்ப்புத் திறனை பாதுகாக்கும். எதிர்மறை எண்ணங்கள் மனச் சோர்வுக்கு வழிசமைத்து, உங்கள் நோயெதிர்ப்புத் திறனை பலவீனப்படுத்தும்.
நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியமடைந்து சென்று கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்திற்கு அப்பால் நோய்ப் பரவல் தடுக்கப்பட்டு உலகம் வழமைக்குத் திரும்பும் என்பது அறிந்ததுவே. அவ்வாறு நிகழ்கிற போது, நாமும் இந்தக் கொடிய தொற்றுக்கு அகப்படாமல் தப்பிப் பிழைத்து உயிருடன் இருக்கிற வாய்ப்புக் கிடைக்குமேயானால், நாம் ஒரு மன நோயாளியாக இல்லாமல் இருப்பதும் அவசியமானதல்லவா.

ஆனபடியினால், மண்ட பத்திரம்!