தவம் ஏதும் செய்ய வில்லை
- நான்
தவம் தந்த பிள்ளையில்லை
தாமாக வந்த தவம் - என்
தந்தையாகுமென
எண்ணவில்லை
வடம் பிடித்து இழுத்த கைகள் - தெய்வம்
சுமந்த
தேரை நகர்த்தி வரும்
தந்தை கரம் பிடித்து நான்
நடக்க - அந்த
தெய்வம்
சேர்ந்தே கூட வரும்
ஓவியங்கள்
நீர் வரைந்தீர் - வர்ணம்
வானவில்லில்
வாங்கி வந்தீர்
ஓவியம்
போல் எனை வரைய - அன்பின்
காவியமாய்
மாறிவிட்டீர்
என் பாதம் வாங்கி நின்றீர்
- அதை
உம் நெஞ்சில் நீர் பதித்தீர்
உம் நெஞ்சில் பதித்த பாதம் - அன்பின்
வேர் ஊன்ற வழி வகுத்தீர்
தந்தையாக
தாங்கி நின்றீர் - உடனே
தாயன்பும்
நீர் கொடுத்தீர்
தந்தை என்பதை நான் மறந்து
- பொழுதில்
தோழன் எனவும் நினைக்க வைத்தீர்
தோள் மீது எனை அமர்த்தி
- உமக்கே
துலங்காத்
தூரம் காட்டுவித்தீர்
அறிவின்
வாள் எனக்களித்து - வாழ்வின்
போர் வென்று ஜெயிக்க வைத்தீர்
நீர் காட்டும் பாதையிலே - வாழ்வை
நான் அமைக்க மறுத்து விட்டீர்
நான் வேண்டும் பாதையினை - சுயமே
நான் வரைய வாய்ப்பளித்தீர்
தந்தை என்ற உயிர்ச் சொல்லில்
- அடங்கும்
இலக்கணங்கள்
தகர்த்து விட்டீர்
தந்தை வேண்டும் உன்போல் என்ற - ஓர்
தலைவிதியை
எழுதிவிட்டீர்
No comments:
Post a Comment