November 23, 2017

சுவாலையின் சுயசரிதை



என் பிறப்புப் பதிவேட்டின்
பிற்குறிப்பினில் எழுதப்பட்டிருந்தது போலும்;
நான் இறக்கும் போது இணைந்தே இறந்திட
இருவர் இங்கு வருவர் என்று

தீயாய் ஜனனித்த எனக்கு
தீபம் என்ற தீட்சைப் புகழ் இல்லையெனினும்
தீயவன் என்ற தீட்டுப் பெயராவது
இல்லாமல் இருந்திருக்கலாம்

தீ-அவன் தீயவன் ஆனேன்
மாயவன் நோயவனை
நேயவன்; என் தாயவன்
மானுடனிற்களிக்கும் பணி செய்ததனால்

சுவாலையாய் சுவாசிக்கத் துவங்கினேன் - பிறர்
சுவாசம் நாசம் செய்யும்
தோசம் தோய்ந்த வாசம் வீசும்
புகை நகைத்திடும் வகை இலையிலே

புகையிலை புகைகயில் மிகைந்து எரிந்தேன்
அதை விரைந்து எரித்து
நானும் விரைந்து மறைந்து விடலாம் என்று;
புகையிலையின் நாற்றம் கொள்ளாமல்

பாவம் அந்த புகையிலையும்
அதைத்தான் எண்ணியது போலும்;
மானுட உயிரின் நாற்றம் கொள்ளாமல்

நாங்கள் மூவரும் தயாராகி விட்டோம்
என் பிறப்பு பதிவேட்டின்
பிற்குறிப்பினை நிறைவேற்றிட

No comments:

Post a Comment