தூங்கித் தொலைத்ததுண்டு
தூக்கம் தொலைத்ததுண்டு
துவண்டு உழன்றதுண்டு
துணிந்து எழுந்ததுண்டு
கனவைக் கண்டதுண்டு
கண்டது கலைந்ததுண்டு
கண்கள் நனைந்ததுண்டு
கடமை உணர்ந்ததுண்டு
நீரின் நுரை போல
நீர்த்துப் போகாது
நீளும் ஆசையெல்லாம்
நினைவில் வந்ததுண்டு
ஊரின் புறத்தோரம்
உலவும் பேய் போல
ஊறும் என் கனவு
உறங்க மறுத்ததுண்டு
நெஞ்சின் விளிம்பெல்லாம்
நெருஞ்சி பூத்தாலும்
நெசவுத்தறி தேய்ந்து – மனம்
நெய்வது நின்றாலும்
நஞ்சின் சுவை எந்தன்
நாவை நனைத்தாலும்
நங்கூரமே இட்டும் – இரவு
நகர்ந்து மறைந்தாலும்
கோடிக் கனாக் கூட்டம்
கொட்டிக் கிடக்கிறது
கொடுக்கும் இடம் ஒன்றை
காணத் துடிக்கிறது
தேடிக் கிடைக்காத
தேவை வலிக்கிறது
தேடல் பொறி மாற்றம்
தேவை என்கிறது
அது தேடல் பொறி மாற்றம்
தேவை என்கிறது.....
இதுகாறும் இரவுகள்
இனியாகும் அதிர்வுகள்
No comments:
Post a Comment